போலிசுக்கு டிமிக்கி கொடுத்து மதுபாட்டிலை பதுக்க முயன்ற பெண் சாராய வியாபாரி!

கு.அசோக்,

  பிரபல கள்ள சாராய வியாபாரி தவமணிக்கு சொந்தமான  கட்டிடத்தில் 1728 வெளிமாநில மது பாட்டில்களை பறிமுதல் செய்து கட்டிடத்திற்கு சீல் வைப்பு.

 திருப்பத்தூர் மாவட்டம், திருப்பத்தூர் ஒன்றியத்திற்கு உட்பட்ட புதுக்கோட்டை ஊராட்சி கனபந்தூர் பகுதியில் இருந்து பெரிய வெங்காயப் பள்ளிக்கு செல்லும் சாலை அருகே உள்ள புதிய கட்டிடத்தில் வெளிமாநிலத்தில் இருந்து கடத்தி வரப்பட்ட மது பாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதாக போலிசாருக்கு தகவல் வந்தது.

   திருப்பத்தூர் உட்கோட்ட துணை காவல் கண்காணிப்பாளர் கணேசுக்கு கிடைத்த ரகசிய தகவலின்படி திருப்பத்தூர் கிராமிய காவல் உதவி ஆய்வாளர்கள் அகிலன் சுனில் பாபு மற்றும் வருவாய் ஆய்வாளர் வேணுகோபால் கிராம உதவியாளர் பிரகாஷ் கொண்ட குழு சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கழிவறை வசதியுடன் கட்டப்பட்ட புதிய கட்டிடத்தில்  சோதனை நடத்தினர்.

 அப்போது அங்கு, 18 அட்டைப் பெட்டிகளில் மதுபானம் வைக்கப்பட்டிருப்பதை கண்டுபித்தனர்.

 அவற்றை கணக்கிட்ட போது, ஒரு பெட்டிக்கு 96 பாட்டில்கள் என மொத்தம் 1728 வெளி மாநில மதுபாட்டில்கள் பதுக்கி வைக்கப்பட்டிருப்பது கண்டறியப்பட்டது.

 அதன் பின்னர் குடோனுக்கு சீல் வைக்கப்பட்டது.

  இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து காவல்துறை விசாரணை மேற்கொண்டதில் இந்த புதிய கட்டிடம் திருப்பத்தூர் பொன்னியம்மன் கோவில் பகுதியில் வசித்து வரும் பிரபல சாராய வியாபாரி தவமணிக்கு சொந்தமானது என்பதும் இரவில் கள்ள சாராய வியாபாரத்திற்காக இந்த கட்டிடத்தில் பதுக்கி வைக்கப்பட்டிருப்பதும் கண்டறிந்து பிரபல கள்ள சாராய வியாபாரி தவமணியை வலை வீசி தேடி வருகின்றனர்.