87 வயது முதியவரின் 2500 ஏக்கர் தில்லாலங்கடி! வடமாநில முதலாளிகளுக்கு ரிஜிஸ்த்ரார் உடந்தை!!

87 வயது முதியவரின் 2500 ஏக்கர் தில்லாலங்கடி! வடமாநில முதலாளிகளுக்கு ரிஜிஸ்த்ரார் உடந்தை!!

  கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  தென் மாவட்டங்களில் நிறுவப்படும் காற்றாலைகளுக்காக பல ஆயிரம் ஏக்கர் விவசாய நிலங்கள் மோசடியாக விற்கப்படுகின்றன.

  குறிப்பாக  திருநெல்வேலி, தூத்துக்குடி, தென்காசி, கன்னியாகுமரி மாவட்டங்களில் வட மாநிலத்தவர்களால் காற்றாலைகள் நிறுவப்படுகின்றன.

  இதற்கான நிலங்களை வாங்கிக் கொடுக்க உள்ளூர் புரோக்கர்கள் குவிந்து கிடக்கிறார்கள்.

 அப்படித்தான் ஒரு புராஜெக்டுக்காக,  திருநெல்வேலியைச் சேர்ந்த 87 வயது முதியவர் செந்தில் ஆறுமுகம், தனது பூர்வீக இடம் எனக்கூறி 2,500 ஏக்கரை, கோவையை சேர்ந்தவருக்கு பவர் பத்திரம் செய்து கொடுத்தார்.

   தூத்துக்குடி மாவட்டம், புதுக்கோட்டை சார் பதிவாளர் மோகன்தாஸ் இதை பதிவு செய்தார். இந்த தகவல் தெரியவந்த விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட்டதால், சார் பதிவாளர் மோகன்தாஸ் 'சஸ்பெண்ட்' செய்யப்பட்டார். செந்தில் ஆறுமுகம் பவர் பத்திரம் ரத்து செய்யப்பட்டுள்ளது.

 இதே பெருசு, ஏற்கனவே 2019-ல் புதுக்கோட்டை பகுதி தளவாய்புரத்தில், 1,300 ஏக்கர் நிலம் தமக்கு சொந்தமானது எனக்கூறி, கேரளாவைச் சேர்ந்த பென்னி, பாத்திமா சம்சுதீனுக்கு விற்பனை செய்தார். இதற்கான பதிவு, விளாத்திகுளம் அருகே புதூர் பத்திரப்பதிவு அலுவலகத்தில் நடைபெற்றது.

 மேற்படி 1,300 ஏக்கர் நிலமும் விவசாயிகளுக்கு சொந்தமானது ஆகும். அப்படியிருக்க இது குறித்து தளவாய்புரம் ஊராட்சி தலைவர் ஆனந்தகுமார், அப்போதைய அமைச்சர் வேலுமணியிடம் புகார் அளித்தார். எனவே அந்த பத்திரப்பதிவு ரத்து செய்யப்பட்டது.

 தற்போது 2,500 ஏக்கர் நிலங்களுக்கு பவர் கொடுப்பதற்காக பதிவாளர் மோகன்தாஸிக்கு பெட்டி நிறைய பணம் அளிக்கப்பட்டதாம்.

எது எப்படியோ, வடமாநில முதலாளிகள் பல்வேறு தில்லாலங்கடி வேலை செய்து நமது பூமிகளை ஆக்கிரமிக்கின்றனர் என்பது மட்டும் நிஜம்.