முன்னாள் அமைச்சர் உறவினரின் கார் எரிப்பு!

கு.அசோக்,

 ஜோலார்பேட்டை அருகே முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமினுடைய சம்மந்தி வீட்டில் உள்ள காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி சென்றதால் பரபரப்பு.

   திருப்பத்தூர் மாவட்டம் ,ஜோலார்பேட்டை அருகே பாச்சல் அடுத்த என்ஜிஓ நகர் பகுதியில் வசிப்பவர் முனிசாமி.

  இவர் அதிமுகவை சேர்ந்த முன்னாள் ஊரக வளர்ச்சித் துறை அமைச்சர் பெஞ்சமினுடைய சம்பந்தி ஆவார்.

   இவரது மகன் பொன்னுசாமி என்கிற பெஞ்சமின் அப்பகுதியில் உள்ள கிறிஸ்தவ ஆலயத்தில் உறுப்பினராக உள்ளார்.

   இந்நிலையில் இன்று காலை ஞாயிற்றுக்கிழமை என்பதால் காலை 7.30 மணி அளவில் ஆலய வழிபாட்டிற்கு சென்றுள்ளதாக தெரிகிறது.

  அப்போது அவருக்கு சொந்தமான சுமார் 5 லட்சம் ரூபாய் மதிப்புள்ள மாருதி காரை மர்ம நபர்கள் பெட்ரோல் ஊற்றி கொளுத்தி சென்றுள்ளனர்.

   அப்போது அவருடைய வீட்டிலேயே  வாடகைக்கு தங்கி உள்ள அரவிந்த் என்பவர் ஏதோ கருகுகிற வாசனை வருவது அறிந்து வெளியே வந்து பார்க்கும் பொழுது கார் தீப்பற்றி எரிந்து கொண்டிருப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்து அருகில் இருந்த தண்ணீரை ஊற்றி அணைத்து உள்ளார்.

  பின்பு இது குறித்த தகவலை தொலைபேசி மூலமாக பொன்னுசாமி என்கிற பெஞ்சமினுக்கு கூறியதின் பேரில் விரைந்து வந்த அவர் ஜோலார்பேட்டை காவல் நிலையத்திற்கு தகவல் அளித்துள்ளார்.

  இதனடிப்படையில் நேரில் வந்த ஜோலார்பேட்டை காவல்துறையினர் சம்பவம் குறித்து வழக்கு பதிவு  செய்து மர்ம நபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டுள்ளது.