செத்தா கூட பணம் தரமாட்டேன் என்கிறார்! எஸ்.பி.யிடம் புகார்!

ஜி.கே.சேகரன்,
ஐம்பது லட்ச ரூபாய் சீட்டு பணம் கட்டி ஏமாந்த ஓட்டல் உரிமையாளரின் மனைவி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் திமுக நிர்வாகி மீது புகார் அளித்துள்ளார்.
இராணிப்பேட்டை மாவட்டம், வாலாஜா பேட்டை அடுத்த வீசி மோட்டூர் பகுதியில் உணவகம் நடத்தி வந்தவர் விஜயன்.
இவர் இவரது மனைவி தேவி மற்றும் மூன்று பிள்ளைகளுடன் வசித்து வந்தார். இவர் தான் நடத்தி வந்த உணவகம் மற்றும் குடுப்ப வருமானம் உயர்த்துவதற்காக பல்வேறு முன்னேற்றங்களை செய்து வந்துள்ளார்.
உணவகம் தொழில் மூலம் கிடைக்கும் பணத்தை இராணிப்பேட்டை பகுதியில் உள்ள தொழிலதிபர் எழில்வாணன் என்பவரிடம் மாதம் 2 லட்சம் ரூபாய் என 50 லட்ச ரூபாய்க்கான மாத சீட்டு கட்டி வந்துள்ளார்.
இந்த நிலையில் கடந்த சில மாதங்களுக்கு முன்பு 50 லட்ச ரூபாய்க்கான சீட்டு முழுவதுமாக நிறைவடைந்த நிலையில் விஜயனுக்கு வழங்க வேண்டிய 50 லட்ச ரூபாய் பணத்தினை குறித்த நேரத்திற்கு வழங்காமல் எழில்வாணன் காலம் தாழ்த்தி வந்ததாக கூறப்படுகிறது.
இதனைத் தொடர்ந்து ஒரு கட்டத்தில் எழில்வாணனிடம் ஓட்டல் உரிமையாளர் விஜயன் தமக்கு வழங்க வேண்டிய பணத்தை வழங்காவிட்டால் காவல் நிலையத்தில் புகார் அளித்து விடுவேன் என தெரிவித்த நிலையில் 15 லட்ச ரூபாய் வழங்கியதாகவும் மீதமுள்ள தொகையை சில நாட்களில் தருவதாக தெரிவித்துள்ளார்.
ஆனாலும், பல மாதங்கள் ஆகியும் திமுக நிர்வாகியும், தொழிலதிபரான எழில்வாணன், ஓட்டல் உரிமையாளர் விஜயனுக்கு வழங்க வேண்டிய மீதித் தொகையை வழங்காமல் பல மாதங்களாக ஏமாற்றி வந்துள்ளார்.
இதனைத் தொடர்ந்து ஓட்டல் உரிமையாளர் விஜயன் சீட்டு கட்டுவதற்கான கடன் வாங்கப்பட்ட இடங்களில் கடன் தொல்லை, குடும்பத்தில் பணப் பிரச்சனை என பல்வேறு நெருக்கடிகள் வந்ததாக கூறப்படுகிறது.
இதனால் மனமுடைந்து போன ஓட்டல் உரிமையாளர் விஜயன் கடந்த அக்டோபர் மாதம் வாலாஜா ரயில் நிலையம் அருகே ரயில் முன்பு பாய்ந்து தற்கொலை செய்து கொண்டார்.
இதனைத் தொடர்ந்து தற்போது விஜயின் மனைவி தேவி தனது கணவருக்கு வழங்க வேண்டிய சீட்டு பணத்தை தருமாறு திமுக நிர்வாகி எழில்வாணனை சந்தித்து கேட்டுள்ளார்.
அதற்கு திமுக நிர்வாகி எழில்வாணன் உயிரிழந்த விஜயன் யார் என்றே எனக்கு தெரியாது என்றும் அப்படி இருக்கையில் அவரது மனைவியான உன்னிடம் பணம் நான் எதற்கு தர வேண்டும் என தெரிவித்து மிரட்டியதாக கூறப்படுகிறது.
இதனை கேட்டு அதிர்ச்சி அடைந்த உயிரிழந்த ஓட்டல் உரிமையாளர் விஜயன் மனைவி தேவி மற்றும் அவரது உறவினர்கள் இராணிப்பேட்டை மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அலுவலகத்தில் சீட்டு கட்டியதற்கான அனைத்துவித ஆவணங்களையும் புகாருடன் நினைத்து தங்களுக்கு வழங்க வேண்டிய சீட்டு பணத்தினைப் பெற்று தரவேண்டும் எனவும் சீட்டு பணத்தை ஏமாற்றி தங்களை மிரட்டி வரும் எழில்வாணன் மீது உரிய நடவடிக்கை எடுக்கவேண்டும் என பெண் தேவி புகார் மனுவினை வழங்கியுள்ளனர்.