முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு வாட்ஸாப் மூலம் கொலை மிரட்டல்:- டிஜிபியிடம் புகார்!

ம.பா.கெஜராஜ்,
முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாக, தமிழக டிஜிபியிடம் புகார் அக்கப்பட்டுள்ளது. அதிமுகவைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் சி.வி. சண்முகத்துக்கு தொடர்ந்து கொலை மிரட்டல் வருவதாகவும் உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் தமிழக சட்டம் ஒழுங்கு டிஜிபி சைலேந்திர பாபுவை சந்தித்து அவரது வழக்கறிஞர் புகார் மனு அளித்துள்ளார். அதிமுகவில் வெடித்துள்ள ஒற்றைத் தலைமை விவகாரம் அடிதடி ரகளையை நோக்கி நகர்ந்துக் கொண்டிருக்கிறது.
இந்த பிரச்சனையில் சி.வி. சண்முகம், அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வத்துக்கு எதிராக கடுமையாக பேசி வருகிறார். இந்நிலையில் அவரது செல்போனுக்கு மர்ம நபர்களிடம் இருந்து இதுவரை நூற்றுக்கும் மேற்பட்ட மிரட்டல் அழைப்புகள் வந்துள்ளதாகவும் மேலும் வாட்ஸப் மற்றும் எஸ்எம்எஸ் மூலமாகவும் மிரட்டல் விடுக்கப்படுவதாகவும் புகாரில் கூறப்பட்டிருக்கிறது. குறிப்பாக நேற்று பிற்பகல் 2 மணியளவில் அவருக்கு கொலை மிரட்டல் வந்துள்ளது.
மேலும் இது போன்ற மிரட்டல் தொடர்பாக ஏற்கெனவே, விழுப்புரம் காவல் நிலையத்தில் புகாரளிக்கப்பட்டு போலீசார் வழக்குப் பதிவு செய்துள்ளனர். ஆனால் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் புகாரில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதுதொடர்பாக காவல்துறை கட்டுப்பாட்டு அறைக்கு உடனடியாக தகவல் தெரிவிக்கப்பட்டும் சம்பந்தப்பட்டவர்கள் மீது இதுவரை நடவடிக்கை எடுக்கப்படவில்லை. ஆகையால் தமிழக டிஜிபி உடனடியாக இதில் தலையிட்டு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று புகார் மனு கொடுக்கப்பட்டுள்ளது.