எஸ்.பி.வேலுமணியும் 12 லஞ்ச அதிகாரிகளும்:- பிடி இருகுகிறது!!

எஸ்.பி.வேலுமணியும் 12 லஞ்ச அதிகாரிகளும்:- பிடி இருகுகிறது!!

 ஜான்.மரிய ஜோசப்,

 அ.தி.மு.க.வைச் சேர்ந்த முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணிக்கு எதிரான ஊழல் வழக்கில்  12 அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக லஞ்ச ஒழிப்புத்துறை வட்டாரம் தெரிவிக்கிறது.

 தமிழகத்தில் கடந்த ஆண்டு ஆட்சி மாற்றம் நடந்த பின்னர், லஞ்ச ஒழிப்புத்துறை முன்னாள் அதிமுக அமைச்சர் எஸ்.பி.வேலுமணி மற்றும் அவர் தொடர்புடைய இடங்களில் சோதனைகளை நடத்தினர். அதன் பின்னர் வேலுமணி மீது வழக்கு தொடர்ந்தனர்.

  இந்நிலையில் எஸ்.பி.வேலுமணிக்கு எதிராக தொடரப்பட்ட வழக்கில் நான்கு ஐஏஎஸ் அதிகாரிகள் உட்பட குறைந்தது 12 அதிகாரிகளுக்கு தொடர்பிருப்பதாக அவர்களது பெயர்களை குறிப்பிட்டு அவர்களை விசாரிக்க அனுமதி கோரியுள்ளது லஞ்ச ஒழிப்புத்துறை.

 ஆனால் நவம்பர் 2021 ல் மேற்படி அனுமதி கோரப்பட்ட போதிலும் சம்மந்தப்பட்ட அதிகாரிகளை விசாரிக்க தமிழக அரசு இதுவரை ஒப்புதல் அளிக்கவில்லையாம்.

 இந்நிலையில் அப்படிப்பட்ட தில்லாலங்கடி அதிகாரிகள் யார் யார் என்கிற சங்கதிகள் அலசப்பட்டு வருகிறது.

 அதில் சென்னை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் ஜி.பிரகாஷ், கோவை மாநகராட்சியின் முன்னாள் ஆணையர் கே.விஜயகார்த்திகேயன், மேலும் சென்னை மாநகராட்சி முன்னாள் துணை ஆணையர்களான கந்தசாமி மற்றும் மதுசூதன் ரெட்டி ஆகிய நான்கு ஐஏஎஸ் அதிகாரிகளின் பெயர்கள் மேற்படி கடிதத்தில் இடம்பெற்றுள்ளதாம்.

மேலும் சென்னை மாநகராட்சி முன்னாள் தலைமைப் பொறியாளர் எல்.நந்தகுமார், முதன்மை தலைமைப் பொறியாளர் எம்.புகழேந்தி, ஓய்வுபெற்ற சி.எச்.ஓ என்.ஏ. செந்தில்நாதன் பெயர்களும் இடம்பெற்றுள்ளனவாம்.

 இந்நிலையில் அறப்போர் இயக்க ஒருங்கிணைப்பாளர் ஜெயராம் வெங்கடேசன், “தமிழகத்தில் கடந்த பல ஆண்டுகளாக எந்த ஐஏஎஸ் அதிகாரிகள் மீதும் ஊழல் வழக்கு பதிவு செய்யப்படவில்லை. தெளிவான ஆதாரங்கள் இருப்பதால் பதிவு செய்ய வேண்டும், மேலும் 17எ இன் கீழ் அனுமதியை தாமதப்படுத்துவதன் மூலம் அரசு அதிகாரிகளை பாதுகாப்பது போல் தெரிகிறது” என்கிறார்.