டாஸ்மாக் முறைகேடு! அரசு பணத்தை வீட்டுக்கு அள்ளிச் செல்லும் அலுவலர் கூட்டணி!

ம.பா.கெஜராஜ்,
டாஸ்மாக் என்றாலே அதனுடன் முறைகேடுகளும் சேர்ந்தே இயங்குகிறது. இதற்கு அடையாளமாக பல்வேறு உதாரணங்களை வாசகர்களுக்கு அளிக்கலாம், அதில் வட மாவட்டத்தில் உள்ள ஒரு பெண் அலுவலர், அவரது பராமரிப்பில் உள்ள 119 மதுபானக்கடைகளை சுரண்டி கோடிக் கணக்கான பணம் சேர்த்துள்ளார்.
இது பற்றின விவரங்கள் வெளியாகிக்கொண்டிருக்கிற நிலையில், டாஸ்மாக் 'பார்'களை ஏலம் விடுவதில், சிண்டிகேட் அமைத்து அரசு கஜானாவுக்குப் போக வேண்டிய வருவாயை தடுத்து பறித்து வரும் தகவல்கள் வெளியாகி உள்ளது.
ஆகவே முதல் பத்தியில் குறிப்பிட்டுள்ள வடமாவட்ட மேட்டரை சற்று தள்ளிவைத்துவிட்டு தமிழகம் முழுக்க நடந்துவரும் தில்லாலங்கடி வேலைகளைப் பற்றி முதலில் பார்ப்போம்.
தமிழகத்தில் உள்ள சுமார் 5450க்கும் மேற்பட்ட டாஸ்மாக் மதுக்கடைகளில், சுமார் 4500க்கும் மேற்பட்ட கடைகளில் 'பார்' வசதிகள் உள்ளன.
இப்படிப்பட்ட 'பார்'களுக்கு மாவட்ட வாரியாக டெண்டர் விடப்படுவேண்டும். ஆனால் கடந்த காலங்களில் 'பார்'களுக்கான குத்தகைத் தொகை முறையாக வசூலிக்கப்படவில்லை. அதே போல் கடையின் விற்பனை அளவு மற்றும் ஆண்டு தோறும் கூட்டப்படும் குத்தகை தொகையை கண்டு கொள்ளவில்லை.
குறிப்பாக பார்களுக்கான அகலம் நீளம், வசதிகள் என்று எதையுமே பின்பற்றவில்லை.
இந்நிலையில் தற்போது மாநிலம் முழுவதிலும் உள்ள 4500க்கும் மேற்பட்ட 'பார்'களில், 2600 பார்களில் "சைடிஷ்" விற்பதற்கான ஏலம் நடந்து வருகிறது.
இதில் அரசுக்கு இருநூறு கோடி ரூபாய் வரை வருவாய் கிடைக்கும், அதற்கு ஏலம் முறைப்படி நடத்தப்பட வேண்டும் அல்லவா?
ஆனால், கண் துடைப்பாகவே நடத்தப்பட்டு வருகிறது. பொது ஜனங்கள் விண்ணப்பிக்க அனுமதிக்கப்படுவதில்லை. வெளியாட்கள் டெண்டர் போட வந்தால் அலுவலகத்திற்குள் செல்ல விடாமல் போலீசார் தடுக்கின்றனர்.
குறிப்பாக புதுக்கோட்டையைச் சேர்ந்த இருவர்தான், ஒட்டு மொத்தமாக தமிழகம் முழுவதும் 'பார்'களை ஏலம் விடும் பொறுப்பை எடுத்துக் கொண்டிருப்பதாக கூறப்படுகிறது. ஒவ்வொரு மாவட்டத்திலும் உள்ள 'பார்'கள், இவர்கள் தலைமையில் உருவாக்கப்பட்ட சிண்டிகேட் உறுப்பினர்களுக்கே ஒதுக்கப்படுகிறது.
அப்படிப்பட்டவர்களுக்கே நேரில் விண்ணப்பங்கள் தரப்பட்டுள்ளன, இவர்களே ஆட்களை வைத்து 'ஆன்லைன்' முறையிலும் விண்ணப்பங்களை பூர்த்தி செய்து வருகிறார்கள்.
இது குறித்து டாஸ்மாக் அலுவலரில் நேர்மையான ஒருவர்¢ கூறுகையில், சென்னை, காஞ்சிபுரம், கோவை, மதுரை போன்ற பெரிய நகரங்களில் உள்ள 'பார்'களுக்கு மாதந்தோறும் இரண்டரை லட்ச ரூபாய் வரை குத்தகைத் தொகை செலுத்த வேண்டும். பிற நகரங்களில் ஒன்றரை லட்ச ரூபாய் வரை இருக்கும்.
இதில் ஆளும்கட்சியினருக்கு மாமூல் தர வேண்டும்.வெறும் சைடிஷ் விற்றால் கட்டுபடியாகாது.
அரசுக்கு 'டிடி' செலுத்துவதோடு, மாமூலும் கொடுத்து லாபம் பார்க்க முடியாது. அதனால் அதிக விலையில் விற்பதோடு, கடை மூடப்பட்ட நேரங்களில் சரக்குகளையும் விற்பார்கள்; அதில்தான் கொள்ளை லாபம். அதைக் கணக்கிட்டே இந்த 'மெகா' வசூல் நடக்கிறது.
'பார்'களை ஏலம் எடுப்பவர்கள், இரண்டு ஆண்டுகளுக்கு இவற்றை நடத்துவதற்கு அட்வான்ஸ் ஆக 10லிருந்து 15 லட்ச ரூபாய் தர வேண்டும். அதைத் தவிர்த்து, பெருநகரங்களில் இரண்டரை லட்சமும், மற்ற நகரங்களில் 80 ஆயிரமும் மாதாந்திர மாமூல் தரவேண்டும். இத்துடன் அரசுக்கான குத்தகைத் தொகையையும் செலுத்த வேண்டும். இந்த அடிப்படையில்தான், மேற்படி கூட்டணி மாநிலம் முழுவதும் 'பார்'களை டெண்டர் எடுத்து சப் விடுகிறார்கள்.
ஒரு மாவட்டத்தில் 100 பார் இருந்தால், அதை நான்கு பேர் ஆளுக்கு 25 என்று பிரித்துக்கொண்டு, வெவ்வேறு பெயர்களில் ஏலம் எடுத்துக் கொள்வார்கள். ஆனால் இவர்கள் நேரடியாக 'பார்' நடத்த மாட்டார்கள். உள்குத்தகைக்கு எடுப்பவர்கள்தான், டிடி, மாமூல், அட்வான்ஸ் அனைத்தும் தரவேண்டும்.
அதுமட்டுமின்றி முறைப்படி டெண்டர் விடப்படும் 2500 'பார்'களைத் தவிர்த்து, 1900க்கும் அதிகமான 'பார்'கள், சட்டவிரோதமாக நடத்தப்படவுள்ளன.
இது போன்ற சட்ட விரோத பார்களை நடத்துபவர்கள் அரசுக்கு 'டிடி' செலுத்த வேண்டியதில்லையே தவிர, மாமூல், அட்வான்ஸ் போன்ற நடைமுறைகள் உண்டு.
முறையாக டெண்டர் விட்டால், பகுதியாக ஏலம் விடப்படுவதன் மூலம், அரசுக்கு 160 கோடிக்கு மேல் வருவாய் கிடைக்கும். ஆனால் இது போன்ற தில்லாலங்கடி வேலைகளால் அதில் பாதி கூட அரசுக்கு வருவாய் கிடைக்க வாய்ப்பில்லை.
அந்த தொகை, மேற்கண்ட நபர்களுக்கும், டாஸ்மாக் அலுவலர்களின் கல்லாவுக்கும் போகிறது. இதனால் அரசு கஜானாவுக்கு போக வேண்டிய பணம் சுவாஹா செய்யப்படு வருகிறது.
ஆனால் இந்த மாதிரி புகார் எதுவும் என் பார்வைக்கு வரவில்லையே என்கிறார் டாஸ்மாக் நிர்வாக இயக்குநர் சுப்பிரமணியம்.
அது சரி...,