கள்ள லாட்டரி உரிமையாளர்களை காப்பாற்றும் டி.எஸ்.பி!

ஜி.கே.சேகரன்,
கள்ளத்தனமாக விற்பனை செய்யப்படும் லாட்டரி வியாபாரத்துக்கும், அவற்றின் உரிமையாளர்களுக்கும் டிஎஸ்பி ஒருவர் பாதுகாவலராக உள்ளார் என்று கூறப்படுகிறது.
இந்நிலையில் தான் அரசால் தடை செய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனையில் ஈடுபட்ட 4 பேரை வாணியம்பாடி நகர போலீசார் பிடித்தனர்.
இது பற்றின விவரம் வருமாறு,
வேலூர் மாவட்டம், குடியாத்தம், தீக்குச்சி தயாரிப்புக்கும், தேசிய கொடி தயாரிப்புக்கும் எப்படி புகழ் பெற்றதோ, அதையெல்லாம் பின்னுக்குத் தள்ளி தற்போது தடை செய்யப்பட்ட லாட்டரிக்கு மிகவும் பேமஸ் ஆகி வருகிறது.
தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் இங்கிருந்து தான் இயக்கப்படுகிறது.
தமிழகத்தில் லாட்டரி விற்பனை தடை செய்யப்பட்டுள்ள நிலையில், கேரளாவின் இந்த விற்பனை சட்ட பூர்வமாக நடத்தப்படுகிறது.
அங்குள்ள லாட்டரி ஏஜென்சிகளுடன் தொடர்பு வைத்துக் கொண்டிருக்கும் குடியாத்தம் லாட்டரி முதலாலிகள், ஆன்லைனில் எண்களை பெற்று அவற்றை வாட்ஸாப் மூலமாக வாடிக்கையாளர்களுக்கு பகிர்ந்து வருகின்றனர். அதற்கான பணத்தை பெற்றுக்கொண்டு இந்த விற்பனை ஜோராக போய்க்கொண்டிருக்கிறது.
அதாவது ஆன்லைன் மூலம் லாட்டரி பிஸினஸை தமிழகத்துக்குள் நடத்தி வருகிறார்கள் குடியாத்தம் முதலாளிகள்.
இது டிபார்ட்மென்ட் அலுவலர்களுக்கு நன்கு தெரியும்.
இருப்பினும் கள்ள லாட்டரி விற்பனை செய்யும் முதலாளிகளுக்கு எந்த பங்கமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்பதில் சில காவல் அலுவலர்கள் கவனமாக இருக்கிறார்கள்.
இதனால் கள்ள லாட்டரி வியாபாரம் சக்கை போடு போடுகிறது. சமீபத்தில் கூட வேலூர் ஆட்சியர் திரு.பெ.குமாரவேல் பாண்டியன் இ.ஆ.ப அவர்களிடம் ஒருவர் புகார் அளித்தார். அதில் பரிசு விழுந்த லாட்டரி எண்ணுக்கு குடியாத்தம் லாட்டரி முதலாளி பணத்தை கொடுக்காமல் ஏமாற்றியதாகவும், கேட்டால் கொலை மிரட்டல் விடுத்ததாகவும் புகாரில் கூறப்பட்டிருந்ததாம்.
புகாரை விசாரித்து நடவடிக்கை எடுக்கும்படி கிரைம் மீட்டிங்கில் காவல் அலுவலகளுக்கு சொன்னார் ஆட்சியர்.
அதன் பின்னர் குடியாத்தம் போலிசார் பத்துக்கும் மேற்பட்ட லாட்டரி வியாபாரிகள் மற்றும் கள்ள லாட்டரி அதிபர்கள் மீது குடியாத்தம் நகர காவல் நிலையத்தில் வழக்கு பதிந்தனர். தப்பி தவறிக்கூட முதலாளிகளை அரெஸ்ட் செய்யவில்லை, மாறாக முன் ஜாமின் எடுத்துக் கொள்ள வழிகாட்டியிருக்கிறார்கள்.
இதனால் ஒரு மாதம் அமைதியாக இருந்த குடியாத்தம் லாட்டரி அதிபர்கள், தற்போது மீண்டும் பிசினஸை துவங்கிவிட்டனர்.
ஆகவே இராணிப்பேட்டை, திருப்பத்தூர், வேலூர், திருவண்ணாமலை, காஞ்சிபுரம்,செங்கல்பட்டு என பல மாவட்டங்களில் கள்ள லாட்டரி விற்பனைவேகமெடுத்துள்ளது.
இந்நிலையில் தான் திருப்பத்தூர் மாவட்டம், வாணியம்பாடியில் தமிழக அரசால் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்யப்படுவதாக மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணனுக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன் பேரில் மாவட்ட கண்காணிப்பாளர் தனிப்படை அமைத்து வாணியம்பாடி முழுவதும் சோதனை மேற்கொள்ள உத்தரவிட்டார்.
அதன்படி இன்று ஞாயிற்றுக்கிழமை முழு ஊரடங்கு அறிவிக்கப்பட்டிருந்த நிலையில் அம்பூர்பேட்டை பகுதியில் தடைசெய்யப்பட்ட வெளிமாநில லாட்டரி விற்பனை செய்து வந்தவர்களை போலீசார் சுற்றிவளைத்து பிடித்தனர். இதில் ஆம்பூர்பேட்டை பகுதியைச் சேர்ந்த வெங்கடேசன், துரை ஆறுமுகம், வேங்கையன், வெங்கடேசன் மற்றும் குடியாத்தம் பகுதியைச் சேர்ந்த சுகுமார் ஆகிய 4 பேரை கைது செய்து வாணியம்பாடி நகர காவல் துறையினர் அவரிடம் தொடர்ந்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
இதே போல், லாட்டரி அதிபர்கள் முகாமிட்டுள்ள பகுதியின் டி.எஸ்.பி. நேர்மையோடு பணியாற்றினால் அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி வியாபாரம் முற்றிலும் ஒழியும் வாய்ப்பு உண்டு.
ஹூம் அதெல்லாம் நடக்கிற காரியமா?