எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி ரூபாய் 'டெண்டர்' முறைகேடு வழக்கு!

எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி ரூபாய் 'டெண்டர்' முறைகேடு வழக்கு!

ம.பா.கெஜராஜ்,

   எடப்பாடி பழனிசாமி மீதான 4,800 கோடி ரூபாய் 'டெண்டர்' முறைகேடு வழக்கு இன்றூ உச்ச நீதிமன்றத்தில் விசாரணைக்கு வருகிறது.       

 தமிழகத்தில் கடந்த 2017 பிப்., முதல் 2021 மே வரை எடப்பாடி கே.பழனிச்சாமி தமிழக முதல்வராக பதவி வகித்தார்.

 அவர் பதவிக் காலத்தில் 4,800 கோடி ரூபாய் மதிப்புள்ள நெடுஞ்சாலைத் துறை ஒப்பந்தங்களை, தன் நெருங்கிய உறவினர்கள் மற்றும் நண்பர்களுக்கு வழங்கியதாக தி.மு.க., குற்றஞ்சாட்டியது.

  இது தொடர்பாக தி.மு.க., அமைப்புச் செயலர் ஆர்.எஸ்.பாரதி, சென்னை உயர் நீதிமன்றத்தில் 2018ல் வழக்கு தொடுத்தார். அதில், 'ஊழல் தடுப்பு சட்டப் பிரிவு 13-ன் கீழ், தண்டனைக்கு உள்ளாகும் குற்றங்களை பழனிசாமி செய்துள்ளார். 'இது பற்றி, தமிழக லஞ்ச ஒழிப்புத் துறையில் புகார் செய்தும் நடவடிக்கை எடுக்கவில்லை. எனவே, இது தொடர்பாக சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட வேண்டும்' என, கோரிக்கை விடுத்து இருந்தார்.

  மேற்படி வழக்கை விசாரித்த சென்னை உயர் நீதிமன்றம், முதல்வராகப் பதவி வகித்த பழனிசாமி மீதான குற்றச்சாட்டு குறித்து, சி.பி.ஐ., விசாரிக்க உத்தரவிட்டது.

  சென்னை உயர் நீதிமன்ற தீர்ப்பை எதிர்த்து, உச்ச நீதிமன்றத்தில் 2018ல் பழனிசாமி மேல்முறையீடு செய்தார். மேல்முறையீட்டு மனுவை விசாரித்த உச்ச நீதிமன்றம், சி.பி.ஐ., விசாரணைக்கு இடைக் காலத் தடை விதித்து, விசாரணையை ஒத்தி வைத்தது.

  நான்கு ஆண்டுகளாகியும் இந்த வழக்கு மீண்டும் விசாரிக்கப்படவில்லை. அப்படியிருக்க நிலுவையில் இருக்கும் பழனிசாமி மீதான வழக்கை விரைந்து விசாரிக்க, தமிழக அரசு வழக்கறிஞர் ரஞ்சித்குமார் நேற்று உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியிடம் முறையிட்டார்.  இதைப் பரிசீலித்த தலைமை நீதிபதி அமர்வு, பழனிசாமி மீதான வழக்கு விரைவில் பட்டியலிடப்படும் என உறுதி அளித்தது.இதையடுத்து, இன்று விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்படும் வழக்குகளின் பட்டியலை, உச்ச நீதிமன்ற பதிவாளர் நேற்று மாலை வெளியிட்டார். அந்த பட்டியலில் பழனிசாமி மீதான முறைகேடு வழக்கும் இடம்பெற்றுள்ளது.