மணல் திருட்டை எதிர்த்து திரண்ட கிராம மக்கள்!
கு.அசோக்,
இந்த செய்தியை ஆடியோவாக கேட்க கீழ்கண்ட லிங்கை சொடுக்கவும்
திருப்பத்தூர் மாவட்டம் காக்கங்கரை, ஆம்பூர், நாட்ரம்பள்ளி,வாணியம்பாடி ஆகிய பகுதிகள் மணம் மற்றும் மண் திருட்டுக்கு ரொம்பவே பேமஸ் ஆனவை. இந்நிலையில், கந்திலி ஒன்றியம் லக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் நீர்நிலை புறம்போக்கு இடத்தில் தனிநபர்கள் மணல் அள்ளுவதை கண்டித்து ஊர் பொதுமக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
இலக்கிநாயக்கன்பட்டி ஊராட்சியில் உள்ள நீர் பிடிப்பு பகுதியில் உள்ள சுமார் 50 ஏக்கருக்கும் மேலான புறம்போக்கு நிலத்தை பல வருடங்களாக சின்னசாமி, குள்ளப்பன், சங்கர், பெருமாள், சின்னவன் உள்ளிட்ட பல பேர் விவசாயம் செய்து அனுபவித்து வருகின்றனர்.
இந்நிலையில் சின்னசாமி என்கிறவர் தான் அனுபவித்து வந்த சுமார் ஒரு ஏக்கர் புறம்போக்கு நிலத்தில் இருந்த மணல் மற்றும் மண்ணை அரசு அனுமதியின்றி எடுத்துச் சென்று விற்பதாக ஊர் பொதுமக்கள் குற்றச்சாட்டை எழுப்பினர்.
இதனால் அப்பகுதியில் உள்ள சிறுவர்கள் பெண்கள் மணல் அள்ளி குட்டைகளாக தேங்கி இருக்கும் இடத்தில் விழுந்து உயிர் பலி ஏற்படக் கூடிய அபாயம் இருப்பதாக கருதி உடனடியாக மணல் அள்ளுவதற்கு தடை செய்யக் கோரி ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த கந்திலி காவல்துறையினர் பேச்சுவார்த்தை நடத்தி உரிய நடவடிக்கை எடுப்பதாக உறுதியளித்த பின்னர் மக்கள் கலைந்து சென்றனர்
இதனால் அப்பகுதியில் சுமார் ஒரு மணி நேரம் பரபரப்பு காணப்பட்டது.
நேற்று நடந்த இந்த சம்பவத்துக்கு பின்னரும் மணல் திருட்டு தொடர்கிறதாம்.