முதியோர்களை சாகடிக்கும் இல்லம்! சீல் வைத்து பந்தா காட்டிய அலுவலர்கள்!

முதியோர்களை சாகடிக்கும் இல்லம்! சீல் வைத்து பந்தா காட்டிய அலுவலர்கள்!

 ஜி.கே.சேகரன்

  அனுமதியின்றி இயங்கிய முதியோர்களை உணவு வழங்காமல் கொடுமைப்படுத்திய கருணை இல்லத்தில் இருந்த 61 முதியவர்கள் மீட்கப்பட்ட நிலையில் மேற்படி இல்லத்தை அரசு அதிகாரிகள் மூடி சீல் வைத்தனர்

  வேலூர்மாவட்டம்,திருவலம் அருகேயுள்ள குகையநல்லூர் ஊராட்சிக்குட்பட்ட ராமநாதபுரம் என்ற கிராமத்தில்  முதியோர்களுக்கான புனித ஜோசப் கருணை இல்லம் செயல்பட்டு வருகிறது.

  இந்த இல்லத்தில் 69 பேர் அடைத்து வைக்கப்பட்டிருந்தனர், இவர்களுக்கு போதுமான உணவு வழங்கப்படுவதில்லை எனவும் அவர்களை பட்டினி போட்டே சாகடித்து இறந்த பின்னர் இவர்களின் உடல்கள் செங்கல்பட்டிற்கு அனுப்பி வைக்கின்றனர் என்றும் வேலூர் மாவட்ட ஆட்சியருக்கு கைபேசி மூலம் ரகசிய தகவல்கள் கிடைத்தது.

 இதன் அடிப்படையில்  காட்பாடி வட்டாச்சியர் ஜெகதீஸ்வரன் உள்ளிட்ட அரசு அதிகாரிகள் குழு புனித ஜோசப் கருணை இல்லத்தில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.

 அப்போது இக்கருணை இல்லத்தில் 37 ஆண்கள் 32 பெண்களும் என மொத்தம் 69 பேர் தங்க வைக்கப்பட்டிருந்தது கண்டுபிடிக்கப்பட்டது.

 அவர்களுக்கு சரியான உணவும் வழங்கப்படவில்லை என்கிற விவரத்தை அறிந்த அதிகாரிகள் அதில் 61 பேரை மீட்டு வேலூர் அடுக்கம்பாறை அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் 52 பேரும் வாலாஜா அரசு மருத்துவமனையில் 9 பேரும் சேர்க்கப்பட்டு சிகிச்சைக்குப் பின்னர் சொந்த ஊர்களுக்கு அனுப்பி வைக்கப்பட்டனர்.

 இந்த நிலையில் காட்பாடி வட்டாச்சியர் ஜெகதீஸ்வரன் மற்றும் காவல்துணை கண்காணிப்பாளர் பழனி ஆகியோர் முதியோர் இல்லத்தை மூடி சீல் வைத்ததுடன், சட்டத்திற்கு புறம்பாக செயல்பட்டதால் மூடி முத்திரையிடப்பட்டதாக நோட்டீசும் ஒட்டப்பட்டது.

 இந்த இல்லம் ஏற்கனவே 2017 ஆம் ஆண்டு சீல் வைக்கப்பட்டது. தற்போது  இரண்டாவது முறையாக அதே முதியோர் இல்லம் சீல் வைக்கப்பட்டுள்ளது.