நீட் தேர்வு வழக்கு வாபஸா?நோ...நோ... சூப்பர் விளக்கம் அளிக்கும் அமைச்சர் சுப்பிரமணி!

நீட் தேர்வு வழக்கு வாபஸா?நோ...நோ... சூப்பர் விளக்கம் அளிக்கும் அமைச்சர் சுப்பிரமணி!

ஜி.சாந்தகுமார்,

 'நீட்' தேர்வு தொடர்பாக அ.தி.மு.க. ஆட்சியில் தொடரப்பட்ட வழக்கை தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்று புதிய வழக்கை தாக்கல் செய்தது. ஆனால் 'நீட்' தேர்வு வழக்கையே தமிழ்நாடு அரசு வாபஸ் பெற்றுவிட்டது என்று பலர்  தவறான கருத்துகளை பகிர்ந்துள்ளனர்.

  அதற்கு தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கண்டனம் தெரிவித்து அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ளார்.

  அந்த அறிக்கையில் கூறியிருப்பதாவது:-

  தமிழ்நாடு மருத்துவப் பட்டப்படிப்புகளுக்கான சேர்க்கைச்சட்டம் 2021 என்ற சட்டமுடிவு, சட்டசபையில் ஒருமனதாக நிறைவேற்றப்பட்டு ஜனாதிபதியின் ஒப்புதலைப் பெறுவதற்காக மத்திய அரசின் உள்துறை அமைச்சகத்துக்கு அனுப்பப்பட்டுள்ளது.

   மேலும் அதற்கு ஜனாதிபதியின் ஒப்புதலை விரைவாக பெற்றுத்தருமாறு மத்திய அரசை தமிழ்நாடு அரசு தொடர்ந்து வலியுறுத்தி வருகிறது.

  இந்நிலையில் சுப்ரீம் கோர்ட்டில் நிலுவையில் இருந்த வழக்குகள் தள்ளுபடி செய்யப்பட்ட நிலையில், உரிய சட்டவிதிகளை ஆராயாமல் அவசர கோலத்தில், நடைமுறையில் உள்ள சட்டங்களுக்கு பதிலாக முந்தைய சட்டவிதிகளை எதிர்த்தும், அவற்றை ரத்து செய்யுமாறும் குறிப்பிட்டு 4.01.2020 அன்று முந்தைய அ.தி.மு.க. அரசால் சுப்ரீம் கோர்ட்டில் ஏற்கனவே தாக்கல் செய்யப்பட்டிருந்த வழக்கு விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்பட்டது.

  அ.தி.மு.க. அரசால் தவறான சட்டப்பிரிவுகளின்படி தொடரப்பட்ட இந்த வழக்கை மேற்கொண்டு தொடர்ந்து நடத்தினால் அது 'நீட்' தேர்வுக்கு எதிரான நமது போராட்டத்துக்கும், நமது மாணவர்களின் நலனுக்கும் பாதகமாக அமையும் என்று சட்ட நிபுணர்கள் கருத்து தெரிவித்தனர்.

  இந்நிலையில் முதலமைச்சர் தலைமையில் நடைபெற்ற உயர்நிலை ஆய்வுக்கூட்டத்தில் இதுகுறித்து சுப்ரீம் கோர்ட்டு வக்கீல்களுடன் கலந்தாலோசிக்கப்பட்டது.

  அதன் அடிப்படையில், புதிய வழக்கை சுப்ரீம் கோர்ட்டில் தாக்கல் செய்யலாம் எனவும், அ.தி.மு.க. ஏற்கனவே தாக்கல் செய்து நிலுவையில் இருக்கும் வழக்கை திரும்பப்பெறலாம் எனவும் முடிவெடுக்கப்பட்டது.

   அதன்படி அந்த வழக்கை திரும்பப்பெறவும், தமிழ்நாடு அரசின் 'நீட்' தேர்வுக்கு எதிரான நிலைப்பாடுகளை உள்ளடக்கியும், மத்திய அரசின் பாதகமான சட்டவிதிகளை எதிர்த்தும் உரியவாறு புதிய வழக்கு தொடர்ந்தும் உரிய மனுக்கள் இப்போது பதிவு செய்யப்பட்டுள்ளன.

   அ.தி.மு.க. அரசின் தவறான வழக்கை திரும்பபெற்றதை, ஏதோ 'நீட்' தேர்வு வழக்கையே திரும்பப் பெற்றுவிட்டது போலவும், தி.மு.க. அரசு தாக்கல் செய்துள்ள புதிய வழக்கை மறைத்து, திசைதிருப்பும் பிரசாரத்திலும் ஈடுபட்டுள்ளது கண்டனத்துக்குரியது.

   'நீட்' தேர்வை அகற்றுவதற்கான சட்டப் போராட்டத்தை தமிழ்நாடு அரசு தொடர்ந்து நடத்தி வெல்லும். இவ்வாறு அவர் அந்த அறிக்கையின் மூலம் தெரிவித்துள்ளார்.