தமிழில் முழு மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவி!

தமிழில் முழு மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவி!

சபரி.ஈஸ்வரன்,

  தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த துர்கா என்ற மாணவி, தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை செய்திருக்கிறார்.  

தமிழகத்தில் 10ஆம் வகுப்பு தேர்வு முடிவுகள் இன்று காலை வெளியிடப்பட்டன.  மாணவர்கள் தங்கள் செல்போன் எண்களிலேயே நேரடியாக முடிவுகளை அறிந்து கொள்ள ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. தேர்வெழுதிய மொத்த மாணவர்களின் எண்ணிக்கை 9,12,620 ஆகும்.

   இதில் 90.07 சதவீதம் பேர் தேர்ச்சி பெற்றுள்ளனர். மாணவிகளில் 94.38 சதவீதமும், மாணவர்களில் 85.83 சதவீதமும் தேர்ச்சி அடைந்துள்ளனர். மாணவர்களை விட மாணவிகள் 8.55 சதவீதம் அதிகம் தேர்ச்சி பெற்றிருப்பது குறிப்பிடத்தக்கது. குறிப்பாக 4,006 பள்ளிகள் 100 சதவீத தேர்ச்சியை எட்டியுள்ளது. அதில் அரசு பள்ளிகளின் எண்ணிக்கை மட்டும் 886 ஆகும்.

   பாட வாரியான தேர்ச்சி சதவிகிதத்தை பொறுத்தவரை தமிழில் 94.84 சதவீதமும், ஆங்கிலத்தில் 96.18 சதவீதமும், கணிதத்தில் 90.89 சதவீதமும், அறிவியலில் 93.67 சதவீதமும், சமூக அறிவியலில் 91.86 சதவீதமும் தேர்ச்சி பெற்றுள்ளனர். 100 சதவீத மதிப்பெண் பெற்ற மாணவர்களின் பட்டியலில், தமிழில் 1, ஆங்கிலத்தில் 45, கணிதத்தில் 2186, அறிவியலில் 3841, சமூக அறிவியலில் 1009 பேர் இடம்பெற்றுள்ளனர்.

  இந்நிலையில் தூத்துக்குடி மாவட்டம் திருச்செந்தூர் காஞ்சி சங்கரா மெட்ரிக் மேல்நிலைப்பள்ளியை சேர்ந்த துர்கா என்ற மாணவி, தமிழ் பாடத்தில் 100 சதவீத மதிப்பெண் பெற்று சாதனை படைத்துள்ளார். தமிழில் முழு மதிப்பெண்கள் பெற்ற ஒரே மாணவி இவர் மட்டுமே என்பது தான் சிறப்பு.