வண்டி பத்து நிமிஷம் நிற்கும் சாப்பிடுகிறவர்கள் சாப்பிடலாம்:-உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்த கெடுபிடிகள்!

வண்டி பத்து நிமிஷம் நிற்கும் சாப்பிடுகிறவர்கள் சாப்பிடலாம்:-உணவகங்களில் அரசுப் பேருந்துகளை நிறுத்த கெடுபிடிகள்!

    ம.பா.கெஜராஜ்,

   தொலை தூர அரசு பேருந்துகள், அவர்களுக்கு பிடித்தமான உணவகங்களில் நிறுத்தி வண்டி பத்து நிமிஷம் நிற்கும் சாப்பிடுகிறவர்கள் சாப்பிடலாம் என்று கூவுவார்கள். இனி அப்படியெல்லாம் கண்ட இடத்தில் நிறுத்த முடியாது.

அந்த அளவுக்கு சில கிடுக்கிப்பிடி விதிமுறைகளை அரசு விதித்துள்ளது.

விதிமுறைகளின் விவரம் வருமாறு,  

*உணவகத்தில் பரிமாறப்படும் உணவு வகைகள் தரம் மற்றும் சுவை உள்ளதாக இருக்க வேண்டும். மேலும் சைவ உணவு மட்டும்தான் தயார் செய்ய வேண்டும் உணவகம் மற்றும் அதன் சுற்றுப்புறம் சுத்தமாக இருக்கும்படி பராமரிக்க வேண்டும்.

*பயணிகள் அருந்துவதற்கு சுத்திகரிக்கப்பட்ட குடிதண்ணீர் வழங்கப்பட வேண்டும்.

*கழிப்பிட வசதி இலவசமாக இருக்க வேண்டும்.

*உணவகத்தில் உள்ள கழிவறை சுத்தமாக பராமரிக்கப்பட வேண்டும். மேலும் பயணிகளுக்கு கழிவறையில் தண்ணீர் வசதி எப்போழுதும் இருக்கவேண்டும். கழிவறையை கம்பரஷர் மூலம் தான் தண்ணீர் கொண்டு சுத்தம் செய்யப்பட வேண்டும் மேலும் பயோ-கழிவறை இருக்க வேண்டும்.

*உணவகத்தின் அமைப்பு போக்குவரத்துக் கழகத்தின் பேருந்துகள் நின்று செல்வதற்க்கு போதுமான இடவசதியுடன் இருக்க வேண்டும். மேலும் பேருந்து நிறுத்தம் செய்யும் இடம் கான்கிரீட்  தளமாக  போட்டிருக்க வேண்டும்.

*உணவகம் கட்டாயம் சாலையின் இடது புறமாக மட்டுமே அமைந்திருக்க வேண்டும்.

*பேருந்துகள் உணவகத்தில் உள்ளே சென்று வெளியே வருவதற்கு எவ்வித இடையூறும் இருக்கக்கூடாது.

*பேருந்துகள் உணவகத்திலிருந்து வெளியே வரும்போது ஓட்டுனருக்கு நெடுஞ்சாலையிலிருந்து வரும் பேருந்துகள் தெளிவாக தெரியும்படி உணவகத்தின் இட அமைப்பு இருக்க வேண்டும்.

*உணவகத்திற்கு மின் இணைப்பு மற்றும் ஜெனரேட்டர் வசதி இருக்க வேண்டும்.

*உணவக வளாகத்தில் பயணிகளின் பாதுகாப்பு கருதி அனைத்து பகுதிகளிலும் சிசிஜிக்ஷி பொருத்தியிருக்க வேண்டும்.

*பேருந்தில் பயணம் செய்யும் பயணிகள் மற்றும் அவர்தம் உடமைகளுக்கு பாதுகாப்பு இருக்க வேண்டும்.

*உணவகத்தில் விற்கப்படும் உணவு பொருட்களின் விலைபட்டியல் பலகை பயணிகளுக்கு தெரியும்படி வைக்கப்பட வேண்டும்.

*மேலும் உணவகத்தில் விற்கப்படும் அனைத்து பொருட்களும் நியாயமான விலையில் எம். ஆர்.பி., விலையை விட அதிகமில்லாமல் இருக்க வேண்டும்/  அதை விட அதிகமாக உணவு பொருட்கள் விற்க்கப்பட்டால் உரிமம் இரத்து செய்யப்படும்.

*உணவகத்தில் நிறுத்தப்பட்ட பேருந்துகளில் உள்ள பயணிகளுக்கு எந்தவொரு இடையூறு தரும் செயல் (அ) புண்படும் வகையிலான செயல்கள் ஏற்படா வண்ணம் இருக்க வேண்டும்.

*பயணிகளுக்கு வழங்கப்படும் உணவுகளுக்கும் மற்றும் உணவகத்தில் வாங்கும் பொருட்களுக்கும் கணணி மூலம் இரசீது கொடுக்கப்பட வேண்டும்.

*உணவக முன்புற வாயிலில் பூட்டப்பட்டுள்ள புகார் பெட்டி வைத்திருக்க வேண்டும்.

என கிடுக்கிப்பிடி போடப்பட்டுள்ளது