குவார்டருக்கு கூடுதலாக பெறும் பத்து ரூபாவில் யாருக்கெல்லாம் பங்கு! போட்டுடைத்த டாஸ்மாக் அதிகாரி!
ஜி.கே.சேகரன்,
நாங்க தினக்கூலி, எல்லோருக்கும் செலவு இருக்கு, இதுல வேற தினம், மாதம் என்று அதிகாரிகளுக்கு லஞ்சம் கொடுக்க வேண்டும்!. நாங்க எங்க போறது டாஸ்மாக் சூப்பர்வைசரின் குமுறல் பேச்சு.
திருப்பத்தூர் மாவட்டம், ஜோலார்பேட்டை அடுத்த சோமநாயக்கன்பட்டி கிராமத்தில் உள்ள அரசு மதுபானக்கடை ராகவன் என்பவர் சூப்பர்வைசராக பணியாற்று வருகிறார்.
இந்நிலையில் அவர் வாடிக்கையாளர்களிடம் மது பாட்டிலுக்கு 5 ரூபாய் முதல் 10 ரூபாய் வரை கூடுதலாக வசூலிக்கப்படுகிறார் என்று தகவல்கள் வெளியானது.
இது குறித்து ஒருவர் ராகவனை சந்தித்து உங்களைப் பற்றி இப்படி செய்தி வந்துள்ளதே? அதற்கு என்ன காரணம் என்று கேட்டுள்ளார்.
அப்போது டாஸ்மார்க் சூப்பர்வைசர் ராகவன் பல திடுக்கிடும் தகவல்களை கூறியதை ரகசியமாக வீடியோ எடுத்து அதை பரவவிட்டுள்ளனர்.
அவர் பேசியிருப்பதாவது,
வாணியம்பாடியில் ஒரு டீம் இருக்கிறார்கள் அவர்கள் தினம் தோறும் வந்து வாங்கி விடுவார்கள். அது போக சேலம் அலுவலகத்தில் எஸ்.ஆர்.எம் இருக்கிறார் அவருக்கு நான் கையில் கொடுப்பதில்லை, எங்கள் தொழிற்சங்கம் மூலமாக மாதம் 3000 ஆயிரம் கொடுத்து விடுவோம். அவர்கள் அதிகாரிகளுக்கு அனுப்பி விடுவார்கள்.
சேலம் அதிகாரியின் கையில் 500 டாஸ்மாக் கடைகள் இருக்கும். ஒரு கடைக்கு 3000 வீதம் மாதம் மாதம் கொடுக்க வேண்டும். அப்படி என்றால் நீங்களே கணக்கு போட்டுக் கொள்ளுங்கள். அப்படி தாங்க லஞ்சம் போகுது.
இது இல்லாம டெப்ட்டேஷன், டிரான்ஸ்பர் போடுவதாக இருந்தால் அவர்களுக்கு தனி தொகை கொடுக்க வேண்டும். ஐந்து மாவட்டத்தில் எத்தனை அதிகாரிகள் இருப்பார்கள் அவர்களுக்கெல்லாம் கொடுக்க வேண்டும். இப்போ போட்டு இருக்கும் அதிகாரி பெண் ஆனால் அவர் ஒரு நாள் கூட கடைப்பக்கம் வந்தது கிடையாது.
அவர் பெயரை சொல்லி வரும் நபர்கள் வசூலித்துக் கொண்டு சென்று விடுவார்கள்.
அதுபோக ஆடிட் வருவோருக்கு 2000 பணம் கொடுக்க வேண்டும். சில விசயங்கள் சொல்ல முடியாத அளவில் உள்ளது. போதும்டா சாமி விட்டால் போதும் என்று இருக்கிறது.
சம்பளம் கேட்டு போராடியது போதும் என்று ஆகிவிட்டது. இவ்வாறு அவர் பேசியிருக்கிறார்.