ஒரே குடும்பத்தில் பலர் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்!

ஒரே குடும்பத்தில் பலர் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயன்பெறலாம்!

ஆர்.ரமேஷ்,

  ஒரே குடும்பத்தில் இருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்று இருப்பினும் அனைவரும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம் என்று தெரிவிக்கப்பட்டிருக்கிறது. இது குறித்து திருப்பத்தூர் மாவட்ட செய்தி மக்கள் தொடர்பு அலுவலகம் வெளியிட்டிருக்கும் "வெற்றிக்கதை" என்கிற செய்திக்குறிப்பு எடுத்துரைத்திருக்கிறது.

  திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் 3190 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000/ பெற்று பயன்பெற்று வருகின்றனர்.

   சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையின் வாயிலாக தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பயனடைந்த அரசு மற்றும் தனியார் கல்லூரி மாணவர்கள் மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அவர்களுக்கு நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்தனர்.

          தமிழ்ப் புதல்வன் திட்டமானது மாணவர்கள் இணையதளத்தில் விண்ணப்பிக்க பிரத்தேயகமான விண்ணப்பப் படிவம் ஒன்று வடிவமைக்கப்பட்டு, நிகழ்நிலையில்    (Online) ஏற்றப்படும்.  விண்ணப்ப படிவத்தில் அளித்துள்ள ஆதார் எண்ணை சார்ந்த கல்லூரியிலிருந்து பள்ளிக் கல்வித் துறையின் கல்வி மேலாண்மை தகவல் அமைப்பு  மூலம் சரிபார்ப்பு செய்து, அம்மாணவர் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசுப் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்று தேர்ச்சி பெற்றதை உறுதிப்படுத்துதல் வேண்டும். 

   அதனை உறுதிப்படுத்திய பின்பு உயர்கல்வித் துறைக்கு மேலனுப்பப்படுதல் வேண்டும். பின்னர் விண்ணப்பிக்கும் மாணவருக்கு தனிப்பட்ட எண் (Unique ID) உருவாக்கி, மாணவரால் பதிவு செய்யப்பட்ட அலைபேசிக்கு குறுஞ்செய்தி அனுப்பப்படும்.  அந்த எண்னைக் கொண்டு இத்திட்டம் தொடர்பான நிலையினை அறிந்துக்கொள்ள இயலும்.  UMIS முகப்பு இணையம் மூலமாக பதிவு செய்யும் விவரத்தையும் இதன் பொருட்டு பயன்படுத்திக்கொள்ளலாம்.

 இத்திட்டத்தின் தகுதி வரம்புகள்.

 வருமான உச்ச வரம்பு,  இனம் மற்றும் ஒதுக்கீடு ஆகிய எந்த ஒரு பாகுபாடும் இன்றி, 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளிகளில் பயின்ற மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியில் பயின்ற மாணவர்கள்தமிழகத்தில் உள்ள எவ்வித கல்வி நிறுவனங்களிலும் உயர்கல்வி பயிலும் மாணவராக இருத்தல் வேண்டும்.

 மேலும், மாணவர் பயிலும் நிறுவனம் மற்றும் பாடப்பிரிவு அரசால் அங்கீகரிக்கப்பட்டதாக இருத்தல் வேண்டும்.  அரசுப் பள்ளிகளிலும் மற்றும் அரசு உதவி பெறும் பள்ளிகளில் தமிழ் வழியிலும் 8 ஆம் வகுப்பு அல்லது 9 ஆம் வகுப்பு அல்லது 10 ஆம் வகுப்பு வரை பயின்ற தொழிற்பயிற்சி நிறுவனத்தில் பயிலும் மாணவர்களும் இத்திட்டத்தின் மூலம் பயனடைய தகுதி உடையவர்கள் ஆகிறார்கள்.

          தமிழ்நாடு அரசுப் பள்ளி மாணவர்களுக்கு இளங்கலை பட்டம், தொழிற்சார் படிப்புகளில் சேர்க்கையில் முன்னுரிமை வழங்குதல் சட்டம், 2021ல் குறிப்பிட்டுள்ளவாறு அரசுப் பள்ளி என்பது அரசு பள்ளிகள், மாநகராட்சி பள்ளிகள், நகராட்சி பள்ளிகள், ஊராட்சி ஒன்றிய பள்ளிகள், ஆதி திராவிடர் மற்றும் பழங்குடியினர் நலத்துறை பள்ளிகள், கள்ளர் மறுவாழ்வு பள்ளிகள், வனத்துறை பள்ளிகள் மற்றும் கல்விக்கான அடிப்படை உரிமை சட்டத்தின் கீழ் கல்வி பெரும் மாணவர்கள் மற்றும் சமூக நலன் மற்றும் மகளிர் உரிமைத்துறையால் நடத்தப்படும் அரசு சேவை இல்லங்கள்/அரசு குழந்தைகள் காப்பகங்கள் போன்றவற்றை உள்ளடக்கியது.  

  உயர்கல்வி என்பது கலை மற்றும் அறிவியல், தொழிற்சார் படிப்புகள், இணை மருத்துவம் சார்ந்த படிப்புகள், பட்டைய படிப்பு, தொழிற்கல்வி மற்றும் ஒருங்கிணைந்த பட்ட மேற்படிப்பு போன்றவற்றை உள்ளடக்கியது. வேறு ஏதேனும் உதவித்தொகை பெற்று வருபவராக இருப்பினும் இத்திட்டத்தில் பயன்பெற தகுதி உடையவர் ஆவர்.

  ஒரே குடும்பத்தில் இருந்து எத்தனை மாணவர்கள் தகுதி பெற்று இருப்பினும் அனைவரும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் விண்ணப்பித்து பயன்பெறலாம். திருப்பத்தூர் மாவட்டத்தில் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் தற்போது 3190 மாணவர்கள் மாதந்தோறும் ரூ.1000/- பெற்று வருகின்றனர்.      

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்திர கல்வி உதவித்தொகை பெறும் செல்வன். எஸ்.மதன் தெரிவித்ததாவது:

   நான் திருப்பத்தூர் மாவட்டத்தில் நாட்றம்பள்ளி பகுதியில் அமைந்து உள்ள அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றேன். நான் வெலகல்நத்தம் கிராமத்தில் வசித்து வருகின்றேன். நான் மிகவும் ஏழ்மையான குடும்பத்தை சேர்ந்தவன்.

   என்னுடைய தந்தையும் தாயாரும் கூலி வேலை செய்பவர்கள்.  அதில் வரும் வருமானத்தின் மூலம் எங்கள் குடும்ப தேவைகளை பூர்த்தி செய்துகொண்டு என்னை படிக்க வைக்க என்னுடைய பெற்றோர்கள் மிகவும் சிரமப்பட்டு வந்தனர். 

   ஆனால் தற்போது தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் மூலம் கிடைக்கும் உதவி தொகையானது எனக்கு மிகவும் பயனுள்ளதாக அமைந்துள்ளது. இதனால் என் பெற்றோர் எனது கல்விக்காக செலவிடுவது குறைந்துள்ளது.  இந்த ரூ.1000/- உதவித்தொகையின் மூலம் என்னுடைய படிப்பு செலவுகளை நானே செய்து கொள்கிறேன். இந்த சிறப்பான திட்டத்தின் கீழ் பயனடைவது எனக்கு மகிழ்ச்சியாக உள்ளது. 

   மாணவர்களின் உயர்கல்வி மீது அதிக அக்கறை கொண்டு தமிழ்ப் புதல்வன் என்னும் சிறப்பான திட்டத்தை செயல்படுத்தி கொடுத்த மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மாணவர்கள் சமூகத்தின் சார்பாக நெஞ்சார்ந்த நன்றிகளை தெரிவித்துக் கொள்கிறேன்.

   தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்திர கல்வி உதவித்தொகை பெறும் செல்வன்.  மு.விக்ரம் தெரிவித்ததாவது:

   நான் திருப்பத்தூர் மாவட்டத்தில் உள்ள கரியம்பட்டி அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரியில் இளநிலை கணினி அறிவியல் இரண்டாம் ஆண்டு பயின்று வருகின்றேன். என்னுடைய தந்தையும் தாயாரும் தினசரி கூலி வேலை செய்பவர்கள்.  நான் 6 ஆம் வகுப்பு முதல் 12 ஆம் வகுப்பு வரை அரசு பள்ளியில் தமிழ் வழியில் படித்துள்ளேன். 

  அரசு  பள்ளிகளில் படித்தோருக்கான முதலமைச்சரின் தமிழ்ப் புதல்வன் திட்டத்தை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சி அடைந்தேன். மாதந்தோறும் கிடைக்கும் ஆயிரம் ரூபாய் உதவித்தொகை என்னுடைய கல்விப் பாதையில் கலங்கரை விளக்காக ஒளிவீச தொடங்கியது. 

  கல்லூரிகளில் நடைபெறும் பேச்சு போட்டி மற்றும் பல்வேறு போட்டிகளில் என்னை தயார் செய்து கொள்ள தமிழ்ப் புதல்வன் திட்ட உதவி தொகையானது எனக்கு பெரிதும் பயன் உள்ளதாக இருக்கிறது. 

  மேலும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் பெறப்பட்ட உதவி தொகையால் என்னுடைய கல்லூரி படிப்பிற்கு தேவையான அனைத்தும் நானே வாங்கிக்கொள்வதால் எனது பெற்றோர் கல்விக்காக செலவிடும் பண சுமையை குறைத்துள்ளது. 

   மேலும் என்னைப் போன்ற ஏழ்மையான நிலையில் கல்வி பயிலும் அனைத்து மாணவர்களுக்கும் இந்த தமிழ்ப் புதல்வன் திட்டம் மிகவும் பயனுள்ளதாக இருந்து வருகின்றன.  இதன் மூலம் இளமையில் கல் என்னும் ஔவையின் ஆசை நிறைவேறியதாக உணர்கிறேன்.

   எனவே இந்த ஒரு சிறப்பான திட்டத்தினை செயல்படுத்தி என்னைப் போன்ற பல மாணவர்கள் பயன்பெறுவதற்கு உதவிய மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு மனமார்ந்த நன்றிகளை என்னுடைய சார்பாகவும் என்னுடைய பெற்றோர்களின் சார்பாகவும் தெரிவித்துக்கொள்கிறேன்.

தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதந்திர கல்வி உதவித்தொகை பெறும் செல்வன். ஆர்.தினேஷ்குமார் தெரிவித்ததாவது:

   நான் திருப்பத்தூர் மாவட்டத்தில் அமைந்துள்ள தனியார் பொறியியல் கல்லூரியில் இரண்டாம் ஆண்டு நுநுநு (நுடநஉவசவீஉயட யனெ நுடநஉவசழஸீவீஉள நுபெவீநெநசவீபெ) படித்து வருகிறேன். நான் புல்லாக்குட்டை கிராமத்தில் வசித்து வருகின்றேன். எனது தந்தை கட்டுமான தொழில் செய்து வருகிறார். அதில் வரும் வருமானத்தில் என்னுடைய  குடும்பத்தின் அன்றாட தேவை பூர்த்தி செய்து வருகிறார்.

   அரசு பள்ளிகளில் படித்தோருக்கான தமிழ்ப் பதல்வன் திட்டத்தின் மூலம் மாதந்தோறும் கிடைக்கும் ரூ.1000/- உதவித்தொகை என்னுடைய உயர் கல்வி படிப்பினை மேற்கொள்ள பெரிதும் உதவியாக இருக்கின்றது. 

  மேலும் இந்த உதவித்தொகையின் வாயிலாக எனது படிப்பிற்கான செலவுகளை நானே செய்து கொள்வதால் பெற்றோரின் என் கல்விக்காக செய்யப்படும் செலவு குறைந்துள்ளது.  அரசு பள்ளி மற்றும் அரசு உதவி பெறும் பள்ளியில் படித்து வந்த மாணவர்கள் தனியார் கல்லூரிகளில் தங்களின் மேற்படிப்பினை தொடர்ந்தாலும் அவர்களுக்கும் தமிழ்ப் புதல்வன் திட்டத்தின் கீழ் மாதாந்திர உதவி தொகை வழங்கி வருகின்றனர்.

  இதனால் என்னைப்போன்ற பல மாணவர்கள் இத்திட்டத்தின் கீழ் பயன் பெறுகிறார்கள். அடித்தட்டு மக்கள் நலனில் மிகுந்த அக்கறை கொண்டு இந்த பொன்னான வாய்ப்பை ஏற்படுத்தி வழங்கிய எங்கள் தமிழ்நாடு முதலமைச்சர் அவர்களுக்கு நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன் என்றார்..

தொகுப்பு

கே.சுப்பையா,

செய்தி மக்கள் தொடர்பு அலுவலர்,

திருப்பத்தூர் மாவட்டம்.

மற்றும்

மு.ஜனார்த்தனன்,

உதவி மக்கள் தொடர்பு அலுவலர்(செய்தி),

திருப்பத்தூர் மாவட்டம்.