மண்டையை சுழற்றும் காவல் எல்லைகள்! மக்களும் திணறல் - போலிசும் புலம்பல்!

 மண்டையை சுழற்றும் காவல் எல்லைகள்! மக்களும் திணறல் - போலிசும் புலம்பல்!

 ம.பா.கெஜராஜ், 

  செங்கல்பட்டு மற்றும் காஞ்சிபுரம் ஆகிய மாவட்டங்கள் தனித்தனி நிர்வாக பணிகளை துவக்கியிருந்த போதிலும், வருவாய்த்துறையில் ஆகட்டும், அதே போல் காவல் துறையில் ஆகட்டும் எல்லை பிரச்சனைகள் இருந்துக் கொண்டே உள்ளது.

   அதில் காவல் துறையில் பொறுத்தமட்டில் காஞ்சிபுரம் மாவட்டம் உத்திரமேரூர் காவல் நிலைய கட்டுப்பாட்டில் செங்கல்பட்டு மாவட்ட காவல் எல்லையில் உள்ள 10 கிராமங்கள் உள்ளது.

 முன்னதாக காஞ்சிபுரம் மாவட்டத்திலிருந்து செங்கல்பட்டு மாவட்டம் பிரிப்பதற்கு முன், ஆறு காவல் கோட்டங்களில், 44 காவல் நிலையங்கள் செயல்பட்டன.   

   2019ல் செங்கல்பட்டு மாவட்டம் பிரிக்கப்பட்டு, காவல் நிலையங்களை இரு மாவட்டங்களில் உள்ள நிலைய வசதிக்கு ஏற்றவாறு பிரித்தனர்.

 இருந்த போதும், காஞ்சிபுரம் மாவட்டத்தில் இருந்த சாலவாக்கம், உத்திரமேரூர், பெருநகர் ஆகிய காவல் நிலையங்கள், செங்கல்பட்டு காவல் மாவட்டத்தில் பல மாதங்களாக இருந்தன.

 ஆகவே உத்திரமேரூர் சுற்று வட்டார பகுதிகள், காஞ்சிபுரம் கலெக்டர் கட்டுப்பாட்டிலும், காவல் துறை செங்கல்பட்டு எஸ்.பி., கட்டுப்பாட்டிலும் இருந்தன.

குளறுபடி

    மாவட்டம் பிரிந்து ஆண்டுகளை கடந்து இருந்த இந்த  பிரச்னை, 2020ல் தான் தீர்ந்தது. சாலவாக்கம், உத்திரமேரூர், பெருநகர் ஆகிய காவல் நிலையங்கள், காஞ்சிபுரம் காவல் மாவட்டத்தில் ஒரு வழியாக இணைக்கப்பட்டன. அவ்வாறு இணைத்து பல மாதங்கள் கழித்த பின், உத்திரமேரூர் காவல் நிலைய எல்லையில் உள்ள 10 கிராமங்கள், செங்கல்பட்டு மாவட்டத்தில் இருப்பது தெரிய வந்தது.

  எல்லை வகுக்கும் போது மேதாவி அதிகாரிகள் செய்த குழப்பத்தால் ஏற்பட்ட விபரீதம் இது.

  சரி எப்படியும் இந்த பிரச்சனையை சரிபடுத்தி விடுவார்கள் என்று மக்களும், காவலர்களும் எதிர் பார்த்துக் கொண்டிருக்கும் நேரத்தில் அந்த 10 கிராமங்களுக்கு, காஞ்சிபுரம் மாவட்ட போலீசார் பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

 இப்படி எல்லை பிரச்னையில் உள்ள 10 கிராமங்களை, செங்கல்பட்டு மாவட்டம் படாளம் காவல் நிலையத்தில் இணைக்க, இதுவரை நடவடிக்கை எடுக்கவில்லை.

    அதேபோல், காஞ்சிபுரம் காவல் கோட்டத்தை இரண்டாக பிரிக்க, 2019 ம் ஆண்டே அறிவிப்பு செய்யப்பட்டதாம்.

 அதன்படி காஞ்சிபுரம் கோட்டத்தில் 10 காவல் நிலையம் இருப்பதால், அவற்றை இரண்டாக பிரித்து, சாலவாக்கம், உத்திரமேரூர், மாகரல், பெருநகர் என தனியாக உத்திரமேரூர் காவல் கோட்டத்தை உருவாக்க, முன்னாள் எஸ்.பி., சாமுண்டீஸ்வரி, அரசுக்கு கருத்துரு அனுப்பினார். அது அப்படியே கிடப்பில் உள்ளதாம்.

   அதே போல்,   கடந்த மாதம் நடந்த காவல் துறை மானிய கோரிக்கையில் காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலையத்தை (காஞ்சிபுரம் தாலுகா காவல் நிலைய எல்லைக்குள், 75 கிராமங்களும், நகரில் 11 வார்டுகளும் உள்ளன.

) மூன்றாக பிரித்து  அறிவிப்பார்கள் என போலீசார்  எதிர்பார்த்தனர்.  ஆனால் அதுவும் அம்பேல்.

 எந்த ஜூரிசெக்ஷன் என்பதில் இன்றளவுக்கு    செங்கல்பட்டு - காஞ்சிபுரம் மாவட்டங்களுக்கிடையே பிரச்சனை இருப்பதால், ரோந்து பணி செல்லும் போலிசாருக்கும், புகார்களை எங்கு தெரிவிப்பது என சுற்றி அலையும் பொதுமக்களுக்கும் சிரமம் தான் மிச்சம்.

  அதே போல சட்டம் ஒழுங்கு, தேர்தல் பணி என நடைமுறை சிக்கல் ஏராளமாக உள்ளது, இதை அரசு கவனத்தில் கொண்டு மாவட்ட காவல் எல்லைகளை சீர்படுத்த வேண்டும் என்பது காவல் துறையினர் மட்டுமின்றி பொதுமக்களின் விருப்பமும் கூட.

   காவல் துறையிலேயே இவ்வளவு குழப்பம் உள்ளது, அப்பட்டியானால் வருவாய் வட்ட குளறுபடிகளை சொல்லவே தேவையில்லை. பாவம் மக்கள்.