பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்! மணிப்பூரிலிருந்து முதல் நீதிபதியும் பரிந்துரை!

பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்சநீதிமன்ற நீதிபதியாகிறார்! மணிப்பூரிலிருந்து முதல் நீதிபதியும் பரிந்துரை!

ம.பா.கெஜராஜ்,

 கொலீஜியம் குழு பரிந்துரையின் அடிப்படையில் சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக உள்ளார்.

 உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக இருந்த அனிருதா போஸ் ஏப்ரல் மாதமும், போபண்ணா மே மாதமும் பணியில் இருந்து ஓய்வு பெற்றனர். இதனால் தலைமை நீதிபதி உள்பட 32 நீதிபதிகள் தற்போது உள்ளனர். காலியாக உள்ள 2 நீதிபதிகள் பணியிடங்களை நிரப்ப கொலிஜியம் முடிவு செய்தது.

 அந்த வகையில் ஜம்மு காஷ்மீர் உயர் நீதிமன்ற தலைமை நீதிபதி என்.கோட்டீஸ்வர் சிங், சென்னை உயர் நீதிமன்றத்தின் பொறுப்பு தலைமை நீதிபதி ஆர்.மகாதேவன் ஆகிய இருவரையும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக நியமிக்க கொலீஜியம் பரிந்துரை செய்துள்ளது.

 இதற்கான முடிவை தலைமை நீதிபதி சந்திரசூட் தலைமையில் நீதிபதிகள் சஞ்சீவ் கண்ணா, பி.ஆர்.கவாய், சூர்ய காந்த் மற்றும் ரிஷிகேஷ் ராய் ஆகியோர் அடங்கிய கொலிஜியம் எடுத்துள்ளது.

 கொலிஜியம் பரிந்துரையை மத்திய அரசு ஏற்கும் பட்சத்தில் இவர்கள் இருவரும் உச்ச நீதிமன்ற நீதிபதிகளாக பொறுப்பு ஏற்றுக்கொள்வர்.

 சென்னை உயர்நீதிமன்ற பொறுப்பு நீதிபதியான ஆர்.மகாதேவன் 1963 ஆம் ஆண்டு சென்னையில் பிறந்தவர். சென்னை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பை முடித்த இவர், 25 ஆண்டுகளுக்கும் மேலாக வழக்கறிஞராக பணியாற்றினார். தமிழக அரசின் கூடுதல் அரசு ப்ளீடராகவும், மத்திய அரசின் வழக்கறிஞராகவும் பணி புரிந்துள்ளார். 2013ஆம் ஆண்டு சென்னை உயர்நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்ட மகாதேவன், கடந்த மே மாதம் 24ஆம் தேதி முதல் பொறுப்பு தலைமை நீதிபதியாக செயல்பட்டு வருகிறார்.

 அதே போல ஜம்மு காஷ்மீர் மாநில தலைமை நீதிபதியான கோட்டீஸ்வர் சிங் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்தவர். கொலிஜியம் பரிந்துரை ஏற்கப்படும் பட்சத்தில் மணிப்பூர் மாநிலத்தைச் சேர்ந்த முதல் உச்ச நீதிமன்ற நீதிபதி என்ற பெருமையை அவர் பெறுவார்.

 மேலும் தற்போது உச்ச நீதிமன்றத்தில் தமிழகத்தைச் சேர்ந்த எம்.எம்.சுந்தரேஷ், கே.வி.விஸ்வநாதன் ஆகியோர் நீதிபதிகளாக பணியாற்றி வருகிறார்கள். நீதிபதி மகாதேவன் உச்ச நீதிமன்ற நீதிபதியாக நியமிக்கப்பட்டால் அந்த எண்ணிக்கை 3 ஆக உயரும் என்பது பெருமைபடக்கூடிய விஷயமாகும்.