45 நாட்கள் தாமதமாக கணக்கு காட்டிய காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம்! வங்கி கணக்குகள் முடக்கம்!

 45 நாட்கள் தாமதமாக கணக்கு காட்டிய காங்கிரஸ் கட்சிக்கு ரூ.210 கோடி அபராதம்! வங்கி கணக்குகள் முடக்கம்!

உ.சசிகுமார்,

  நாடாளுமன்ற தேர்தல் நெருங்கும் நேரத்தில் காங்கிரஸ் கட்சியின் வங்கி கணக்குகள் அனைத்தும் முடக்கப்பட்டுள்ளது.  அப்படியிருக்க 45 நாட்கள் தாமதமாக கணக்கு காட்டியதற்காக ரூ.210 கோடி அபராதம் விதித்து வருமான வரித்துறை அதிர்ச்சி நடவடிக்கை மேற்கொண்டுள்ளது. காங்கிரஸ் வங்கிக் கணக்குகள் முடக்கப்பட்டது இந்திய ஜனநாயகத்தின் மீதான மிகப்பெரிய தாக்குதல் என்று காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே கண்டனம் தெரிவித்துள்ளார்.      

 மேலும் இது கட்சியின் வங்கி கணக்கு மட்டுமல்ல, இந்திய ஜனநாயகமே முடங்கி உள்ளது. இந்த நடவடிக்கை உள்நோக்கம் கொண்டது. பழம்பெரும் கட்சியான காங்கிரசை வேண்மென்றே குறி வைத்து இந்த நடவடிக்கையை வருமான வரித்துறை எடுத்து வருகிறது, பொது தேர்தல் சமயத்தில் இந்த நடவடிக்கையை எடுத்துள்ளதாக அக்கட்சியின் பொருளாளர் அஜய் மக்கான் குற்றம் சாட்டியுள்ளார்.

  இது தொடர்பாக செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த காங்கிரஸ் தலைவர் காங்கிரஸ் தலைவர் மல்லிகார்ஜுன கார்கே, "இந்தியாவின் மிகப்பெரிய எதிர்க்கட்சியான காங்கிரஸின் வங்கிக் கணக்குகளை மக்களவை தேர்தல் நெருங்கும் வேளையில், தனது பதவி போதையில் ஒன்றிய பாஜக அரசு முடக்கியுள்ளது. இது இந்திய ஜனநாயகத்தின் மீது தொடுக்கப்பட்டுள்ள ஆழமான தாக்குதல்.

  அரசியல் சட்டத்திற்குப் புறம்பாக பாஜக வசூலித்த பணத்தை அவர்கள் தேர்தலுக்குப் பயன்படுத்துவார்கள், ஆனால், நாங்கள்Crowd Funding முறையில் திரட்டிய பணத்திற்கு சீல் வைத்துள்ளார்கள்.இதுபோன்ற நடவடிக்கைகளால்தான் எதிர்காலத்தில் தேர்தலே நடைபெறாது என கூறினேன். நாட்டில் உள்ள பல கட்சி முறையை நீதித்துறை காப்பாற்ற வேண்டும். இந்த சர்வாதிகாரத்திற்கும், அநீதிக்கும் எதிராக வீதிகளில் இறங்கி போராடுவோம் என்று சொன்னார்.