டெண்டுகள் காலி.... ஊர் திரும்பும் விவசாயிகள்!15 மாத போரட்டத்தில் வெற்றி!

ம.பா.கெஜராஜ்,
வேளாண் மசோதாக்கள் திரும்ப பெறப்பட்ட பின்னர், 15 மாத கால போராட்டத்தை கைவிட்ட விவசாயிகள் தற்போது சொந்த மாநிலங்களுக்கு மூட்டை முடிச்சுகளுடன் திரும்பிக்கொண்டிருக்கிறார்கள்.
அவர்கள் அனைவரின் முகத்திலும் வெற்றிக்களிப்பு பொங்கி வழிய, டெல்லிக்கு குட்பை காட்விட்டு தற்காலிக கொட்டகைகளை பிரித்தெடுத்து கிளம்பிவிட்டார்கள். கூடவே ஆனந்த பாட்டை பஞ்சாப் ஸ்டைலில் பாடி குதுகலித்தனர்.
அந்த வகையில் கடந்த 2020 நவம்பர் 26ம் தேதி டெல்லி எல்லைகளில் குவியத் தொடங்கிய விவசாயிகள், 2021 டிசம்பர் 11ம் தேதி போராட்டத்தை முடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
முன்னதாக, மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை எதிர்த்து, பஞ்சாப்பில் தொடங்கிய போராட்டம், நவம்பர், 2020-ல் டெல்லிக்கு இடம்பெயர்ந்தது.
இந்த போராட்டமானது இந்திய சரித்திரத்தில் நடந்த மிக நீண்ட மக்கள் போராட்டமாக பார்க்கப்படுகிறது.
ஏனெனில் போராட்டக்காரர்கள் டெல்லியின் எல்லைப் பகுதிகளில் தேசிய நெடுஞ்சாலைகளை மறித்து பல கிலோ மீட்டர் தூரம் தங்குவதற்கு கொட்டகைகளை அமைத்து போராடிவந்தனர்.
மத்திய அரசு கொண்டு வந்த மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்வதாக என,
பிரதமர் அறிவித்தபோதும், அவற்றை நாடாளுமன்றத்தில் முறைப்படி திரும்பப் பெறும் நடைமுறையை நிறைவேற்றும் வரை, போராட்டத்தைத் தொடர்வதாக என விவசாயிகள் தெரிவித்திருந்தனர்.
விளை பொருள்களுக்கு குறைந்தபட்ச ஆதார விலை தர சட்ட உத்தரவாதம், போராடிய விவசாயிகள் மீதான வழக்குகள் வாபஸ் உள்ளிட்ட கோரிக்கைகளையும் வலியுறுத்தி அவர்கள் போராட்டத்தைத் தொடர்ந்து வந்தனர்.
இந்நிலையில், நாடாளுமன்ற குளிர்காலக் கூட்டத் தொடரில் வேளாண் சட்டங்களை திரும்பப் பெறும் மசோதா நிறைவேற்றப்பட்டது.
அத்துடன் குறைந்தபட்ச ஆதார விலை கோரிக்கையை ஆராய குழு அமைப்பதாகவும், அதில் விவசாயப் போராட்டத்தை ஒருங்கிணைத்த சம்யுக்த கிசான் மோர்ச்சா (ஐக்கிய விவசாயிகள் இயக்கம்) பிரதிநிதிகளை சேர்த்துக்கொள்வதாகவும் அரசாங்கம் உத்தரவாதம் அளித்தது.
போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் மீதான வழக்குகளைத் திரும்பப் பெறுவதாகவும் வாக்குறுதி அளித்தது.
இந்நிலையில், பெரும் போராட்டத்தை விவசாயிகள் தலைவர்கள் முடிவெடுத்து அறிவித்தனர்.
அப்படியிருக்க, டெல்லியின் சிங்கு, டிக்ரி, காசிபூர் எல்லைகளில் கடந்த 15 மாதங்களாக போராட்டத்தில் ஈடுபட்டிருந்த விவசாயிகள், தங்கள் சொந்த மாநிலங்களுக்கு இன்று சனிக்கிழமை முதல் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
அவர்கள் தாங்கள் அமைத்திருந்த தற்காலிக கூடாரங்களை கலைத்துவிட்டு, சொந்த ஊர் திரும்பத் தொடங்கியுள்ளனர்.
டிராக்டர்கள், டிரக்குகள் உள்ளிட்ட வாகனங்களில் அணி அணியாய் ஊர் திரும்புவதால், குண்ட்லி-மானேசர்-பல்வால் நெடுஞ்சாலையில் போக்குவரத்து பாதிக்கப்பட்டது. இந்த நெடுஞ்சாலை, தலைநகர் டெல்லியை ஆக்ரா மற்றும் அம்பாலா நெடுஞ்சாலைகளுடன் இணைப்பவை ஆகும்.
டெல்லிக்குள் நுழையும் சாலைகளை மறித்து, சிங்கு, டிக்ரி உள்ளிட்ட எல்லைப்பகுதிகளில் போராட்டத்தில் ஈடுபட்ட விவசாயிகள் பஞ்சாப், ஹரியாணா, உத்தர பிரதேச மாநிலத்தைச் சேர்ந்தவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.
என்னதான் வெற்றி நடை போட்டாலும், போராட்டக்களத்தில் பல்வேறு காரணங்களால் 700-க்கும் மேற்பட்ட விவசாயிகள் உயிரிழந்ததை மறக்க முடியாது அல்லவா?