வேலூர்,திருப்பத்தூர், இராணிப்பேட்டை உள்ளிட 9 மாவட்டங்களில் உள்ளாட்சி தேர்தல்! 2 கட்டமாக நடைபெறும்!
ம.பா.கெஜராஜ்,
வேலூர், ராணிப்பேட்டை, திருப்பத்தூர், விழுப்புரம், கள்ளக்குறிச்சி, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, நெல்லை, தென்காசி ஆகிய 9 மாவட்டங்களிலும் ஊரக உள்ளாட்சி தேர்தலை நடத்துவதற்கு மாநில தேர்தல் ஆணையம் ஏற்பாடுகளை செய்து வந்த நிலையில் தற்போது வாக்குபதிவுக்கான தேதிகள் அறிவிக்கப்பட்டுள்ளன.
இன்று மாலையுடன் சட்டசபை கூட்டம் முடிந்த நிலையில், 5 மணிக்கு மாநில தேர்தல் ஆணையர் பழனிகுமார் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார்.
தமிழகத்தில் விடுபட்ட 9 மாவட்டங்களிலும் அக்டோபர் 6 மற்றும் அக்டோபர் 9 ஆகிய தேதிகளில் இரண்டு கட்டங்களாக உள்ளாட்சித் தேர்தல் நடைபெறும் என அறிவித்தார்.
மேற்படி மாவட்டங்களில் உள்ள கிராம பஞ்சாயத்து உறுப்பினர்கள், தலைவர்கள் ஊராட்சி ஒன்றிய கவுன்சிலர்கள், ஊராட்சி ஒன்றிய தலைவர்கள், மாவட்ட பஞ்சாயத்து உறுப்பினர்கள் ஆகிய பதவிகளுக்கான தேர்தல் நடைபெற உள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
வேட்பு மனு தாக்கல் தொடக்கம் - செப்டம்பர் 15
வேட்புமனு தாக்கல் நிறைவு - செப்டம்பர் 22
வேட்புமனு பரிசீலனை - செப்டம்பர் 23
வேட்புமனு திரும்ப பெறுதல் - செப்டம்பர் 25
அக்டோபர் 12ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை.