எஸ். ஐ. உட்பட 3 காவல்துறையினர் சஸ்பென்டு! உயர்நீதிமன்றம் கொட்டு!

செ.சக்தி,
பொது இடத்தில் சாதி பெயரை குறிப்பிட்டு கணவன் மனைவி மற்றும் மகனை கண்மூடித்தனமாக தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 காவலர்களை சஸ்பெண்ட் செய்ய வேண்டும் என தமிழக அரசுக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கடந்த 2016 ஆம் ஆண்டு திருமண்ணாமலை மாவட்டம் செங்கம் அருகே தோக்கவாடியை சேர்ந்த ஆட்டோ ஓட்டுனர் ராஜா அவரது மனைவி மற்றும் மகன் ஆகியோர் பேசி கொண்டிருந்தனர். அப்போது, அவர்களுக்குள் வாக்குவாதம் ஏற்பட்ட நிலையில் அங்கு வந்த உதவி ஆய்வாளர் முருகன், காவலர்கள் நம்மாழ்வார் மற்றும் விஜயகுமார் ஆகியோர் அவர்களை சாதி ரீதியாக திட்டி கண்மூடித்தனமாக தாக்கிய சம்பவம் பரபரப்பு செய்தியானது.
இந்நிலையில் தங்களை தாக்கிய உதவி ஆய்வாளர் உள்ளிட்ட 3 பேர் மீதும் வழக்கு பதிவு செய்யக்கோரி ராஜா சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.
இந்த வழக்கு நீதிபதி இளந்திரையன் முன்பு விசாரணை நடைபெற்று வந்தது. அப்போது, குடும்பத்தினரை தாக்கிய காவலர்கள் மீது இதுவரை வழக்கு பதிவு செய்யாததற்கு நீதிபதி கண்டனம் தெரிவித்திருந்தார். இந்த வழக்கில் தீர்ப்பு வழங்கிய நீதிபதி, சாதி பெயரை குறிப்பிட்டு தாக்கிய மூன்று காவலர்கள் மீதும் துறை ரீதியான நடவடிக்கை எடுக்க வேண்டும் என உத்தரவிட்டுள்ளார்.
பாதிக்கப்பட்ட மூன்று பேருக்கும் தலா 50 ஆயிரம் ரூபாய் இழப்பீடு வழங்க வேண்டும் என அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, இழப்பீட்டு தொகையை காவலர்கள் மூன்று பேரிடமிருந்து வசூலிக்க வேண்டும் எனவும் தெரிவித்துள்ளார்.காவலர்கள் மூன்று பேர் மீது வழக்கு பதிவு செய்து 12 வாரங்களில் விசாரணையை முடிக்க உத்தரவிட்ட நீதிபதி அதுவரை அவர்களை பணியிட நீக்கம் செய்யவும் நீதிபதி இளந்திரையன் உத்தரவிட்டார்.
இந்த தீர்ப்பு அப்பகுதி பட்டியலின மக்களிடையே பெரும் வரவேற்பு பெற்றுள்ளது நீதி வென்றதாகவும் நீதிக்கு முன் அனைவரும் சமம் எனவும் பெரும் மகிழ்ச்சி அடைந்து வருகின்றனர்.