ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நக்சல்கள்! சேட்லைட் சிக்னல்களால் பீதி!

ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் நக்சல்கள்! சேட்லைட் சிக்னல்களால் பீதி!

கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  விருதுநகர் மாவட்டம் ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் அரிய வகை வன விலங்குகள் வசித்து வருகின்றன. இந்த வனப்பகுதி தற்போது புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து வனத்திற்கு செல்ல பல்வேறு கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது.

 ஸ்ரீவில்லிபுத்தூர் வனப்பகுதியில் உள்ள செண்பகத்தோப்பில் பேச்சியம்மன் கோவில், காட்டழகர் கோவில்கள் உள்ளன. இங்கு விசேஷ நாட்களில் திரளான பக்தர்கள் கூடுவது வழக்கம். கடந்த 2 வாரங்களுக்கு முன்பு செண்பகத்தோப்பு காட்டழகர் கோவில் மேல்பகுதியில் உள்ள அடர்ந்த வனப்பகுதியில் சாட்டிலைட் போன் செயல்பாடுகள் இருப்பதற்கான அறிகுறிகள் உள்ளதாக சென்னை சைபர் கிரைம் கண்காணிப்பு பிரிவுக்கு சிக்னல் கிடைத்தது.

  இதையடுத்து ஸ்ரீவில்லிபுத்தூர் வனத்துறை போலீசார், நக்சல் தடுப்பு பிரிவு போலீசாருடன் குறிப்பிட்ட பகுதியில் சில நாட்களாக தங்கி கண்காணித்து வருகின்றனர்.

  இந்நிலையில் ஸ்ரீவில்லிபுத்தூர், மேகமலை புலிகள் காப்பக துணை இயக்குநர் திலீப்குமார் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:- ஸ்ரீவில்லிபுத்தூர் மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் சில இடங்களில் சாட்டிலைட் போன் சிக்னல்கள் கிடைத்துள்ளது.

 மேலும் இங்கு அவ்வப்போது சமூக விரோதிகள் நடமாட்டம் இருப்பதாக உளவுத்துறை தகவல் அளித்துள்ளது. எனவே மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் உள்ள காட்டழகர் கோவிலுக்கு செல்லும் பக்தர்கள், ஊழியர்கள் கோவிலில் இரவு நேரங்களில் தங்க அனுமதியில்லை.

 மேலும் கோவிலுக்கு செல்ல அனுமதி அளிக்கும் நாட்களில் காலை 6 மணி முதல் மாலை 6 மணி வரை பக்தர்கள் சென்று வரலாம். இரவு நேரங்களில் வனத்துறையினர் மற்றும் நக்சல் தடுப்பு பிரிவு போலீசார் சோதனையின்போது கோவில் மற்றும் கோவில் வளாகத்தில் தங்கியிருப்போர் மீது வன பாதுகாப்பு சட்டத்தின் கீழ் கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என கூறியுள்ளார்.