பணியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் சென்னை வாசிகள்! அரசு பஸ் கண்ணாடி உடைப்பு!

பணியாளர்களுக்கு நெருக்கடி கொடுக்கும் சென்னை வாசிகள்! அரசு பஸ் கண்ணாடி உடைப்பு!

 ம.பா.கெஜராஜ்,

 புயல் மற்றும் கனமழையால் சென்னை மாநகரே தண்ணீரில் சூழ்ந்துக் கொண்டிருக்கிறது. அநேக  பகுதிகளில் மழைநீர் அகற்றப்பட்டாலும், மேலும் பல இடங்களில் முழங்கால் அளவுக்கு மேல் தண்ணீர் தேங்கி நிற்கிறது. இந்நிலையில், வீடுகளுக்குள் புகுந்த மழைநீரை அகற்றக் கோரியும், மின் இணைப்பு, உணவு வழங்கக் கோரியும் சென்னையின் பல இடங்களில் மக்கள் போராட்டம் நடத்தினர். ஒரு இடத்தில் அரசு பஸ்ஸின் கண்ணாடியை உடைத்து ஆத்திரத்தை வெளிப்படுத்தினர்.

 இதன் காரணமாக மீட்பு பணியினரின் பணிகளில் பாதிப்பு ஏற்பட்டது.

 குறிப்பாக, வியாசர்பாடியில் உள்ள குடியிருப்பு பகுதிகளுக்குள் மழைநீர் புகுந்து, 3 நாட்களாக அதை அகற்ற அதிகாரிகள் எந்தவித நடவடிக்கையும் எடுக்கவில்லை எனக்கூறிவியாசர்பாடி கல்யாணபுரம் பகுதியில் மக்கள் மறியலில் ஈடுபட்டனர். அப்போது, அந்த வழியாக வந்த மாநகர பேருந்து மீது அப்பகுதி மக்கள் கற்களை வீசினர். இதனால், பேருந்தின் முன்பக்க கண்ணாடி உடைந்தது. உடனே சம்பவ இடத்துக்கு வந்த போலீஸார், சமாதானம் செய்தனர்.

 அடுத்ததாக வண்ணாரப்பேட்டையில் மழைநீர் அகற்றப்படாமல் இருந்ததைக் கண்டித்து கல்லறை சாலை, லாலாகுண்டா, சீனிவாசபுரம், கோஜராஜநகர் பகுதி மக்கள் சாலையில் போராட்டத்தில் ஈடுபட்டனர். அப்போது, அந்த பகுதிக்கு ஆய்வுக்கு வந்த அமைச்சர் சேகர்பாபுவை முற்றுகையிட்ட மக்கள்,தண்ணீரை உடனடியாக அகற்றி, மின்சார இணைப்பைக் கொடுக்கவேண்டும் என வலியுறுத்தினர். மழைநீர் அகற்றப்பட்டு, மின்சாரம்வழங்கப்படும் என அமைச்சர் உறுதியளித்தார்.

  மேலும், திருவான்மியூர் சந்திப்பு உட்பட பல இடங்களில் 2-வது நாளாக நேற்றும் மக்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். மயிலாப்பூர் லஸ் சிக்னலில், 4 புறங்களிலும் வாகனங்களை அனுமதிக்காமல் பி.எஸ்.சிவசாமி சாலை பகுதி மக்கள் 2-வது முறையாக நேற்று இரவும் மறியலில் ஈடுபட்டனர்.

  மின்சாரம் இல்லை. குடிநீர் கிடைக்கவில்லை. வீடுகளுக்குள் கழிவுநீர் தேங்கியுள்ளது. வெள்ளநீரை வெளியேற்ற ஒரு நடவடிக்கையும் எடுக்கவில்லை என மக்கள் புகார் தெரிவித்தனர்.

 மேலும் சில இடங்களில் விநியோகம் செய்யப்பட்ட பாலை வாங்க, பொதுமக்கள் நீண்ட வரிசையில் காத்திருக்கும் நிலை ஏற்பட்டது.

   சோழிங்கநல்லூர், அம்பத்தூர் ஆகிய பால் பண்ணைகளில் இருந்து குறைவான அளவே நேற்றும் பால் விநியோகம் செய்யப்பட்டது. இதனால், சோழிங்கநல்லூர், தரமணி, வேளச்சேரி, துரைப்பாக்கம், பெருங்குடி, கந்தன்சாவடி, சென்னை சூளைமேடு, வடபழனி, எம்எம்டிஏ காலனி, கோயம்பேடு, அம்பத்தூர், எம்எம்டிஏ காலனி உள்ளிட்ட பெரும்பாலான இடங்களில் ஆவின் பால் கிடைக்காமல் பொதுமக்கள் தவித்தனர்.

 இந்நிலையில் புயல் வெள்ளத்தால் ஏற்பட்டுள்ள கடும் சேதத்தை சரி செய்ய இடைக்கால நிவாரணமாக ரூ.5,060 கோடி வழங்க வேண்டும் என கேட்டு பிரதமர் நரேந்திர மோடிக்கு முதல்வர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியுள்ளார்.