அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள்!

க.பாலகுரு
திருவாரூர் புதிய பேருந்து நிலையத்தில் நின்றிருந்த 3 அரசு பேருந்துகளின் கண்ணாடியை மர்ம நபர்கள் உடைத்துச் சென்ற சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
திருவாரூர் விளமல் பகுதியில் புதிய பேருந்து நிலையம் உள்ளது. இந்த பேருந்து நிலையத்திலிருந்து சென்னை, கோவை, மதுரை, திருச்சி, மன்னார்குடி, மயிலாடுதுறை, நாகப்பட்டினம் உள்ளிட்ட மாநிலத்தின் பல்வேறு பகுதிகளுக்கு பேருந்துகள் செல்கின்றன.
இந்நிலையில் நேற்று இரவு 09- மணிளவில் 4 இருசக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் பேருந்து நிலையத்தில் நின்றிருந்த மூன்று அரசு பேருந்துகளின் கண்ணாடிகளை கற்களால் உடைத்து விட்டு அங்கிருந்து தப்பி சென்றுள்ளனர்.
இது தொடர்பாக தகவல் அறிந்த காவல்துறையினர் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து விசாரித்ததில் திருவாரூர் பணிமனைக்கு சொந்தமான 2 பேருந்துகளும், மயிலாடுதுறை பணிமனைக்கு சொந்தமான ஒரு பேருந்து என 3 பேருந்துகளின் கண்ணாடிகள் உடைக்கப்பட்டிருந்தது.
கண்ணாடியை உடைத்த மர்ம நபர்கள் யார் என்பது குறித்து காவல்துறையினர் பேருந்து நிலையத்தில் உள்ள கடைகளில் பொருத்தப்பட்டிருந்த சிசிடிவி கேமராக்களை ஆய்வு செய்தனர். அப்போது நான்கு இரு சக்கர வாகனத்தில் வந்த ஏழு பேர் இந்த சம்பவத்தில் ஈடுபட்டது தெரியவந்துள்ளது.
இதனிடையே பேருந்து நிலையத்திற்கு சென்ற மாவட்ட காவல்துறை கண்காணிப்பாளர் டி பி சுரேஷ்குமார் நேரில் விசாரணை நடத்தினார். தொடர்ந்து போலீசார் நகர் பகுதியில் உள்ள சிசி டிவி கேமராக்களின் பதிவுகளை ஆய்வு செய்து மர்ம நபர்கள் குறித்து விசாரித்து வருகின்றனர்.
மக்கள் கூடியிருந்தபோது பேருந்து நிலையத்தினுள் புகுந்து மர்ம நபர்கள் அரசு பேருந்துகளின் கண்ணாடியை உடைத்த சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.