அமிர்கான் விஷ்ணு விஷால் ஹீரோக்களை காப்பாற்றிய மீட்புபடையினர்!

உ.சசிகுமார்,
பாலிவுட் கதாநாயகன் அமிர்கான் மற்றும் தமிழக முன்னணி கதாநாயகர்களில் ஒருவரான விஷ்ணு விஷால் ஆகியோரை தமிழக மீட்புப்படையினார் வெள்ள அபாயத்திலிருந்து பத்திரமாக மீட்டனர்.பாலிவுட் பிரபலம் அமீர்கான் குறித்து அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா தனது எக்ஸ் தளத்தில் பகிர்ந்துள்ள பதிவு இணையத்தில் வைரலாகி வருகிறது.
அதேபோல் நடிகர் விஷ்ணு விஷால் தனது எக்ஸ் தளத்தில் தனது வீட்டின் தரை மட்டம் நீரில் மூழ்கி விட்டதாக புகைப்படத்துடன் பதிவு ஒன்றை பகிர்ந்திருந்தார். அதில், காரப்பாக்கத்தில் நீர்மட்ட உயர்ந்து வருகிறது. போனில் சிக்னல், வைபை எதுவுமே இல்லை. எனக்கும் இங்குள்ள பலருக்கும் ஏதாவது உதவு கிடைக்கும் என நம்புகிறோம் என பதிவிட்டிருந்தார்.
இதனையடுத்து அவரின் வீட்டிற்கு மீட்பு படையினர் விரைந்தனர். அங்கிருந்து படகு மூலமாக விஷ்ணு விஷால் மீட்கப்பட்டார். தான் மீட்கப்பட்டதை தொடர்ந்து எக்ஸ் தளத்தில் பதிவிட்ட விஷ்ணு விஷால், 'எங்களை போன்ற சிக்கி தவிக்கும் மக்களுக்கு உதவிய தீயணைப்பு மற்றும் மீட்பு துறையினருக்கு நன்றி. காரப்பாக்கத்தில் மீட்பு பணிகள் துவங்கி விட்டது. இதுபோன்ற இக்கட்டான காலங்களில் தமிழ்நாடு அரசு சிறப்பாக பணியாற்றுகிறது. அனைவருக்கும் நன்றி என பதிவிட்டிருந்தார்.
இந்த பதிவுடன் தான் மீட்கப்பட்டது குறித்து சில புகைப்படங்களையும் விஷ்ணு விஷால் பகிர்ந்திருந்தார். அதில் பாலிவுட் நடிகர் அமீர்கான் இடம்பெற்றிருந்தது தான் பலருக்கு ஆச்சரியத்தை ஏற்படுத்தியது. அவர் சென்னையில் இருக்கும் விஷயமே இந்த புகைப்படம் மூலமாக தான் அனைவருக்கும் தெரிய வந்துள்ளது. அமீர்கான் தனது தாயாரின் மருத்துவ சிகிச்சைக்காக சென்னையில் இருப்பதாகவுக் கூறப்படுகிறது.
இந்நிலையில் அமைச்சர் விஷ்ணு விஷாலின் பதிவிற்கு பதிலளிக்கும் விதமாக தனது எக்ஸ் தளத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார் அமைச்சர் டி.ஆர்.பி. ராஜா. அதில், 'உங்களின் பாராட்டுக்கு நன்றி விஷ்ணு விஷால். மிகச்சிறந்த மனிதராக உங்கள் பக்கத்தில் நிற்பவருக்கு நன்றி சொல்லுங்கள்.
அவர் மீட்கப்படுவதற்கு எந்த கயிற்றையும் இழுக்க முயற்சிக்கவில்லை. யாரையும் சிபாரிச்சுக்கு அழைக்கவில்லை என்பது ஆச்சரியம். சக மக்களை போலவே அவர் மிகுந்த உறுதியோடு, தான் மீட்கப்படுவதற்காக காத்திருப்பதையும் பார்ப்பது பிரமிக்க வைக்கிறது. தங்களுடைய பிரபலத்தை பயன்படுத்தி பெயரை கெடுக்க முயல்பவர்களுக்கு ஒரு பாடம். எங்கள் மீட்பு நடவடிக்கைகளை தொடர்ந்து கடைப்பிடிப்போம்' என பதிவிட்டுள்ளார்.