அடங்க மறுக்கும் ரவுடிஸ்க்கு மாவுகட்டு போடும் போலிஸ்!

அடங்க மறுக்கும் ரவுடிஸ்க்கு மாவுகட்டு போடும் போலிஸ்!

  முருகன்,

  செங்கல்பட்டு மாவட்டதில் ஓங்கியிருக்கும் ரவுடிகளின் கொட்டத்தை அடக்க போலிசார் பகிரத முயற்சிகளை மேற்கொண்டு வருகிறார்கள். அதற்காக ரெண்டு என்கவுன்டரும் நடத்தினர். அதற்கு குரல் கொடுக்க சில அமைப்புகள் முளைத்த வேளையில், தற்போது மாவு கட்டும் வேலையை போலிசார் செய்து வருகிறார்கள்.

   செங்கல்பட்டு மாவட்டம் மதுராந்தகம் அடுத்த மாமண்டூர் ஜிஎஸ்டி சாலையில் ராஜஸ்தான் மாநிலத்தைச் சேர்ந்த கேசாராம் என்பவரது மகன் தர்மாராம் சேட் என்பவர் கடந்த 10 ஆண்டுகளாக நகை வியாபாரம் மற்றும் வட்டி தொழில் செய்து வருகிறார்.

  அப்படியிருக்க கடந்த வியாழக்கிழமை காலை வழக்கம் போல் தர்மாராம் சேட் கடையை திறந்துள்ளார். அப்போது, வடபாதி கிராமம் புதிய காலனி பகுதியைச் சேர்ந்த சாம்மூர்த்தி என்பவரின் மகன் சிலம்பரசன், நகை ஒன்று அடகுவைக்க வந்துள்ளார்.அப்போது தர்மாராம் சேட்டுக்கு சந்தேகம் ஏற்பட்டதால் நகையை அடகு வாங்க மறுத்துள்ளார்.

 இதனால் ஆத்திரமடைந்த சிலம்பரசன் அவருடன் கடுமையான வாக்குவாதம் செய்ததோடு எங்களிடம் நகை வாங்க மறுத்த உன்னை கொல்லாமல் விட மாட்டேன் என எச்சரித்து விட்டு கிளம்பிய அவன், அன்று மாலை குடிபோதையில் கடைக்கு வந்து தர்மாராம் சேட்டை அரிவாளால் சரமாரியாக வெட்டி விட்டு தப்பியோடினாஞ்ன்.

    இதில், தலையில் பலத்த காயமடைந்த தர்மாராம் சேட்டை மீட்ட அக்கம் பக்கத்தினர் செங்கல்பட்டு அரசு மருத்துவமனையில் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டு கடந்த 3 நாட்களாக சிகிச்சை பெற்று வருகிறார்.

     இதுதொடர்பாக சிசிடிவி காட்சிகளை கைப்பற்றிய படாளம் காவல் துறையினர் தலைமறைவாக இருந்த சிலம்பரசனை தேடி வந்தனர்.

   இதனையடுத்து நேற்று செங்கல்பட்டு புதிய பேருந்து நிலையம் அருகே நின்றிருந்த சிலம்பரசனை போலீசார் சுற்றி வளைத்து கைது செய்தனர். விசாரணைக்காக செங்கல்பட்டு மாவட்டம் பாலூர் காவல் நிலையத்திற்கு சிலம்பரசனை அழைத்துச் சென்று  நல்லபடியாக கவனித்துள்ளனர்.

  இந்நிலையில் சிலம்பரசன் பாத்ரூமில் வழுக்கி விழுந்துள்ளார். இதையடுத்து சிலம்பரசனை அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று அவரது கைக்கு மாவு கட்டு போடப்பட்டுள்ளது. இதனைத் தொடர்ந்து அவர் செங்கல்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டான்.