கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பெண்கள்!

கஞ்சா விற்பனையில் கொடிகட்டி பறக்கும் பெண்கள்!

ஜி.சாந்தகுமார்,

  கஞ்சா விற்பனை செய்யும் தொழிலில் பெண்கள் கொடி கட்டிப் பறக்க்கிறார்கள்.

இது குறித்து அவ்வப்பொழுது  போலீசார் பட்டியல் தயாரித்தும் கூட மேற்படி வியாபாரிகள் அடங்குவதாக இல்லை.

 இந்நிலையில் இப்போது புதுசுசாக பட்டியல் எடுப்பதாக தகவல்கள் வெளியாகியிருக்கின்றன.

  ஆந்திர மாநிலத்திலிருந்து தமிழகத்துக்குள் கஞ்சா மிகவும் எளிமையாக கடத்தி வரப்படுகிறது.  அதே போல் குட்கா போன்ற போதை பொருட்கள் கர்நாடகா மாநிலத்திலிருந்து கடத்தி வரப்படுகிறது.

   இவை சென்னைக்கும், கிருஷ்ணகிரி மற்றும் வேலூர் மாவட்டங்கள் வழியாகவும் தமிழகத்துக்குள் கடத்தி வரப்படுகின்றன.

 போதாக்குறைக்கு, பெரிய நகரங்களில் உள்ள கல்லூரி பிள்ளைகளுக்கு மெத்தம் பெட்டமைன், போதைக்காக உதட்டின் உட்புறம் ஒட்டிக் கொள்ளும் எல்.எஸ்.டி., ஸ்டாம்ப் உள்ளிட்ட விதவிதமான போதைப் பொருட்கள் சுலபமாக கிடைக்கின்றன.

  குறிப்பாக சொல்ல வேண்டுமானால் வேலூர் போன்ற நகரங்களிலிருந்து சென்னைக்கு செல்லும் தினசரி பார்சல் லாரிகளில் பெட்டி பெட்டியாக கஞ்சா உள்ளிட்ட போதை பொருட்கள் சர்வசாதாரணமாக கடத்தப்படுகிறது.

   இதை போலீசார், போதைப் பொருட்களை ஒழிக்க தொடர் நடவடிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர். எனினும் இந்த போதை பிசினஸ் வளர்ந்துக் கொண்டே இருக்கிறது.

 போலீசாருக்கு தெரியாமல் கஞ்சா, குட்கா, மாவா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை நடக்க, வாய்ப்பு குறைவு. கடத்தல் கும்பல்களுக்கு, சில போலீசாரும் துணையாக உள்ளனர்.

 உளவுத்துறை போலீசார் வாயிலாக, கஞ்சா உள்ளிட்ட போதைப் பொருள் விற்பனை எந்தெந்த பகுதியில் அதிகம் நடக்கிறது என, ரகசிய விசாரணை நடத்த வேண்டும்.

  கஞ்சா கடத்தி விற்கும் தொழிலில் பெண்கள் பங்கு அதிகமாக உள்ளது. இவர்கள், ரவுடிகளுக்கு நெருக்கமானவர்களாக உள்ளனர். ரவுடிகள் வாயிலாக, வெளி மாநிலங்களில் இருந்து கஞ்சா கடத்தி வரும் இவர்கள், சில்லறை விற்பனையை கச்சிதமாக செய்கிறார்கள்

  சென்னை, ஷெனாய் நகரைச் சேர்ந்த கிருஷ்ணவேணி, 77, என்பவர், இளம் வயதிலேயே கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொழிலில் களமிறங்கியவர். இவருக்கு கஞ்சா கடத்தல் தொழில் அத்துப்படி. இவரைப் போல, சென்னையில் தற்போது கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனையில், பெண் தாதாக்கள் எண்ணிக்கை அதிகரித்துள்ளது.

இவர்கள் மீது அதிரடி நடவடிக்கைக்கு, போலீஸ் கமிஷனர் சங்கர் ஜிவால், உத்தரவிட்டுள்ளார்.

  சென்னை முழுதும், கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பெண் தாதாக்கள் குறித்து பட்டியல் தயாரிக்கப்படுகிறது. இவர்களில், சிறையில் உள்ளவர்கள் எத்தனை பேர்? வெளியில் உள்ளவர்கள் எத்தனை பேர் என்ற தகவல் சேகரிக்கப்படுகிறது.

இவர்கள் மீது கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, எத்தனை வழக்குகள் உள்ளன? குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்யப்பட்டவர்கள் எத்தனை பேர் என்பது உட்பட, முழு விபரத்தையும் திரட்ட போலீசாருக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

இவர்களை கண்காணித்து, இவர்களின் வங்கி கணக்குகள் மற்றும் முறைகேடாக வாங்கிக் குவித்துள்ள சொத்துக்களை முடக்கவும் உத்தரவிடப்பட்டுள்ளது.

அதே போல, பெண் தாதாக்களுக்கு பின்னணியில் உள்ள ரவுடிகள், திரைமறைவு முக்கிய புள்ளிகள் குறித்தும் தகவல் திரட்டவும் போலீசாருக்கு, கமிஷனர் சங்கர் ஜிவால் உத்தரவிட்டுள்ளார்.

 இந்நிலையில் கஞ்சா கடத்தல் மற்றும் விற்பனை தொடர்பாக, இம்மாதம், 19ம் தேதி வரை, 79 பேர் கைதாகி உள்ளனர். இவர்களில், ஏழு பேர் பெண்கள். ஒருவர் திருநங்கை என்பது குறிப்பிடத்தக்கது.

   கஞ்சா விற்பனையில் ஈடுபடும் பெண்களுக்கு, அவர்களது உடையே பாதுகாப்பு பெட்டகமாக உதவுகிறது.. கஞ்சாவை உடைகளில் ஒளித்து வைத்து இருப்பதால், பொது இடங்களில் எளிதில் சோதனை செய்ய முடியாது. இதையே அவர்கள் தங்களுக்கு சாதகமாக பயன்படுத்தி வருகின்றனர். இன்னும் சில பெண்கள் போலீசார் மீது பாலியல் புகார் கூறவும் தயங்குவதில்லை. இதனால், அவர்களை கையாள்வது சிரமமாக உள்ளது என்று சொல்லும் போலிசார் பெண் போலிசாரை கஞ்சா வியாபாரிகள் மிரட்டுகிறார்கள் என்கிறார்கள்.

 இந்நிலையில் தமிழக போலிசார் இரும்புக்கரம் கொண்டு கஞ்சா விற்பவர்களை அடக்குவார்கள் என்பதில் அய்யமில்லை.