ஒரே புகார் - 101 தடவை அலைகழிப்பு! தெற்கு காவல் நிலையத்தின் சாதனை!

R.MATHAN,
வேலூர் மாவட்டம், வேலூர், அண்ணா சாலை மற்றும் பில்டர்பெட் ரோடு சந்திப்பில் உள்ளது தெற்கு காவல் நிலையம். இந்த காவல் நிலையத்தில் உள்ள அதிகாரிகள் சிலர் சாதனை மேல் சாதனை புரிந்து மக்களிடம் நற்பெயரை எடுத்துள்ளார்கள்?!! அந்த வகையில் கடந்த மூன்றாம் மாதம் அளித்த ஒரு புகாருக்காக, புகார்தாரரை 101 தடவை அலைகழித்து மீண்டும் சாதனை படைத்திருக்கிறார்கள்.
வேலூர் சி.எம்.சி. மருத்துவமனைக்கு வந்து செல்லும் பல நோயாளிகளுக்கு இலவச சேவையாற்றி வரும் நபரை சில ரவுடிகள் பொது இடத்தில் தாக்கி அவமானப்படுத்தினர். இது தொடர்பாக அவர் வேலூர் தெற்கு காவல் நிலையத்தில் புகார் ஒன்றை அளித்து சட்ட நடவடிக்கை கோரினார். ஆனால் அந்த புகார் மீது போலிசார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, குறிப்பாக புகாருக்கு ஆளான நபர்களை ஸ்டேஷனுக்கு அழைத்து விசாரிக்கக்கூட இல்லை.
அவரது புகாரில், தெரிவித்திருப்பதாவது, 25.02.2022 ஆம் தேதி வெள்ளிக்கிழமை காலை சுமார் 11.30 மணிக்கு வழக்கம் போல வேலூர் அண்ணா சாலையிலுள்ள ஓட்டல் கண்ணாவில் எனது திருச்சபையைச் சேர்ந்த திரு சார்லஸ், திரு.தினகரன், திரு ஆர்த்தர் சதானந்தம், திரு.கிருபாகரன் டேவிட் ஆகியோருடன் தேநீர் அருந்திக் கொண்டிருந்தேன். அப்போது அங்கு எனக்கு நன்கு தெரிந்த பாகாயம் சஞ்சீவபுரத்தைச் சேர்ந்த சுந்தரராஜன் என்பவர், அவருடன் சுமார் 10 - க்கும் மேற்பட்டோரை கூட்டிவந்து என்னை சரமாரியாக தாக்கினார்.
என்னைப் பற்றியாடா பேஸ்புக்கில் போடுகிறாய்,இனி மேல் பேஸ்புக்கை ஹேண்டில் பண்ணுவதற்கு கையிருந்தால் தானேடா பதிவிடுவாய், உன் கையை வெட்டி வீசுகிறேன் பார் என்று சத்தம் போட்டு என்னை தாக்கி, உன்னை ஒழித்துவிடுவேண்டா என்று சொல்லி கழுத்து, கன்னம், மார்பு பகுதியில் கையால் வேகமாக குத்தினார். இதனால் நான் நிலைகுலைந்தேன்.
அப்போது மேற்படி சுந்தர்ராஜன் தன்னுடன் அழைத்து வந்தவர்களை பார்த்து இந்த தே.... பையனை அடித்துத் தள்ளுங்கள் என்று சொன்னார். அதன் பின்னர் அவருடன் வந்த நபர்களில் சிலர் என்னை தாக்கி தள்ளினார்கள்.
நான் பின்னர் விசாரித்த போது என்னை தாக்கி ஒழித்துவிடுவேன் என்று மிரட்டிய சுந்தரராஜனுடன் வந்தவர்களில் கோட்டி என்கிற கோட்டிஸ்வரன், சஞ்சீவபுரம் வில்லியம்ஸ், வேலூரைச் சேர்ந்த மதி என்கிற புல்லட் மதி ஆகியோர் எனவும், இவர்களில் சிலர் ரவுடிகள் என்றும், பல முறை சிறை சென்றவர்கள் என்று தெரிய வந்தது.
நான் மேற்படி என்னை தாக்கிய சுந்தரராஜன் குறித்து அவதூறான பதிவு எதையும் பேஸ் புக்கில் வெளியிடவில்லை. ஆனால் அவர் பேராயத்தில் ஏற்கனவே பொருளாளராக இருந்த போது கணக்கு வழக்கில் முறைகேடு நடந்ததாக பரவலாக பேசப்பட்டு வந்தது. அதற்கு நான் தான் காரணம் என்று தவறாக புரிந்துக் கொண்டு என்னை பலபேர் முன்னிலையில் தாக்கி ஒழித்துவிடுவேன் என்று மிரட்டிவிட்டுச் சென்றுள்ளார்.
இதனால் எனது உயிருக்கு ஆபத்து ஏற்படும் சூழ்நிலை உருவாகியிருக்கிறது. என்னை சுந்தரராஜன் மற்றும் அவருடன் வந்த அடியாட்கள் தாக்கிய காட்சிகள் ஓட்டல் கண்ணாவில் உள்ள சிசிடிவி கேமிராவில் பதிவாகியிருக்கிறது. எனது புகார் மனுவின் மீது உரிய விசாரணை நடத்தி என்னை திட்டமிட்டு தாக்கிய சுந்தரராஜன் மற்றும் அவர் அழைத்து வந்த தபர்கள் மீது உரிய சட்ட நடவடிக்கை எடுத்து எனக்கு பாதுகாப்பு அளிக்குமாறு தாழ்மையோடு கேட்டுக் கொள்கிறேன் என்று எனது புகார் மனுவில் கேட்டுக் கொண்டிருந்தேன்.
மேற்படி புகாரை தெற்கு காவல் நிலையத்தார் 09.03.2022 ஆம் தேதியன்று பெற்றுக் கொண்டனர். ஆனால் புகார் மீது எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, என்னிடம் விசாரணை நடத்தவில்லை.
ஆகவே நான் கடந்த 27.03.2022 ஆம் தேதி அன்று வேலூர் மாவட்ட காவல் துறை கண்காணிப்பாளர் அவர்களுக்கு ஆன் லைன் வாயிலாக எனது புகாரினை (ஸிஸிஷி22052246) அளித்தேன்.
அதன் பின்னர் நான் தெற்கு காவல் நிலையத்துக்கு சென்றேன். அப்போது என்னிடம் நந்தகுமார் என்கிற ஆய்வாளர் விசாரணை நடத்தினார்.
பின்னர் குற்றம் சாட்டப்பட்ட நபர்களான சுந்தர்ராஜன் தரப்பினருக்கு அழைப்பாணை அனுப்பி விசாரணை நடத்த அவர் உத்தரவிட்டார். ஆனால் இதுவரை அவர்களுக்கு அழைப்பாணை அனுப்பவில்லை. விசாரணையும் நடத்தவில்லை. இந்நிலையில் மேற்படி ஆய்வாளர் டிஎஸ்பியாக பணி உயர்வு பெற்று மாறுதலாகிவிட்டார்.
அதன் பின்னர் தொடர்ந்து பெண் எஸ்.ஐ, ஒருவரை அனுகி கேட்கும்படி சொன்னதன் பேரில் அவரை அனுகி எனது புகார் மனுமீது நடவடிகை எடுக்க கேட்டுக் கொண்டேன்.
அவரும் நாட்களை கடத்தி வருகிறாரே தவிர இதுவரை குற்றம்சாட்டப்பட்ட நபர்களிடம் விசாரணை நடத்தவில்லை.
அப்படியிருக்க நான் அளித்த புகாரை விசாரித்து நடவடிக்கை கோரி இதுவரை 101 தடவை போலிசாரை அனுகிவிட்டேன் ஆனாலும் அந்த எஸ். ஐ. மேடம் அழைப்பாணை ஏதும் அனுப்பாமல் உள்ளார்.
இது குறித்து சம்பந்தப்பட்ட எஸ்ஐ ரேகா அவர்களிடம் கேட்டபோது இந்த பெட்டிஷனை அப்படியே வையுங்கள் பிறகு பார்த்துக் கொள்ளலாம் என்று இன்ஸ்பெக்டர் சொன்னதாக சொன்னார்.
எது எப்படியானாலும் சட்ட நடவடிக்கை எடுக்க கேட்டுக் கொள்வதிலிருந்து நான் பின் வாங்கமாட்டேன் என்று புகார்தாரர் நம்பிக்கொண்டிருக்க, நீ எங்கு முறையிட்டாலும் சரி, நாங்க நடவடிக்கை எடுக்கமாட்டோம் என்று எஸ்.ஐ. மேடம் சொல்லிவருகிறாராம்.
அது சரி.