பேன்சி ஸ்டோர் பெண் படுகொலை! காதலா? என விசாரணை!

பேன்சி ஸ்டோர் பெண் படுகொலை! காதலா? என விசாரணை!

 கே.ஏ.ஜெகதீஷ்வரி,

  காதல் விவகாரத்தில் இளம்பெண் வெட்டி கொலை செய்யப்பட்டிருப்பதாக முதற்கட்ட விசாரணையில் தெரியவந்திருக்கிறது.    திருநெல்வேலி மாவட்டத்தில் கொலை நடக்காத தினம் தான் விசேஷம் என்பதை போல அங்கு தினம் தினம் கொலைகள் நடந்துக் கொண்டிருக்கின்றன.

 இந்நிலையில் அம்மாவட்டத்தில் திருப்பணிகரிசல் குளம் பகுதியைச் சேர்ந்தவர் சந்தியா. இவர் நெல்லை கிழரத வீதியில் பேன்ஸி ஸ்டோரில் பணியாற்றி வந்தார். கடைக்கான பொருட்கள் எடுத்துவருவதற்காக அம்மன் கோயில் பகுதியிலுள்ள குடோனுக்கு சந்தியாவை இன்று அனுப்பியுள்ளனர். ஆனால், நீண்ட நேரம் ஆகியும் சந்தியா கடைக்கு திரும்பி வரவில்லை என்றும், அவருடைய செல்போனுக்கு தொடர்புகொண்டபோது எடுக்கவில்லை எனவும் கூறப்படுகிறது.

   அவருடன் பணியாற்றும் சக ஊழியர்கள் குடோனுக்கு சென்று சந்தியாவை தேடியுள்ளனர். அப்போது, சந்தியா வெட்டிக் கொலை செய்யப்பட்ட நிலையில், ரத்த வெள்ளத்தில் பிணமாகக் கிடந்துள்ளார். இதனால் அதிர்ச்சியடைந்த பணியாளர்கள் பேன்ஸி ஸ்டோர் நிர்வாகத்தினர் காவல் துறைக்கு தகவல் தெரிவித்துள்ளனர். உடனடியாக அங்கு விரைந்த காவல் துறையினர் சந்தியா உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.

 கொலை தொடர்பாக வழக்குப் பதிவு செய்த நெல்லை டவுன் குற்றப் பிரிவு காவல் துறையினர் அப்பகுதியிலுள்ள சிசிடிவி காட்சிகளை கைப்பற்றி முதற்கட்ட விசாரணையை தீவிரப்படுத்தினர்.

  அந்த விசாரணையில் கண்ணன் என்பவர் சந்தியாவை வெட்டிப் படுகொலை செய்திருப்பது தெரியவந்தது. தன்னுடைய காதலை ஏற்க மறுத்ததால் இவ்வாறான வெறிச்செயலில் அந்நபர் ஈடுபட்டுள்ளார் என்றும் கூறப்படுகிறது. இதனையடுத்து, தலைமறைவாக உள்ள கண்ணனை காவல் துறையினர் வலைவீசி தேடி வந்த நிலையில் நள்ளிரவில் அவர் கைது செய்யப்பட்டார்.

 திருநெல்வேலி மாவட்டத்தில் சமீப காலமாக கொலை மற்றும் குற்றச் சம்பவங்கள் பெருகி வருகின்றன. கடந்த ஆகஸ்ட் மாதம் நெல்லையில் மட்டும் 10 பேர் வரை கொலை செய்யப்பட்ட நிலையில்தான் மீண்டும் ஒரு கொலை சம்பவம் அரங்கேறியுள்ளது.