"சட்டம் ஒழுங்கு" ரவுடிகளின் கட்டுபாட்டுக்குள் உள்ளதோ? எடப் பாடி பழனிச்சாமி கேள்வி!

ம.பா.கெஜராஜ்,
காவல் நிலையத்துக்குள் புகுந்து வன்முறை வெறியாட்டம் நடத்திய திமுகவினரால் மக்கள் பீதிக்குள்ளாகியிருக்கிறார்கள்.
மாநில நிர்வாகத்துறை அமைச்சர் கே.என். நேரு திருச்சிராப்பள்ளி மாநகராட்சிக்குட்பட்ட எஸ் பி ஐ காலனியில் நமக்கு நாமே திட்டத்தின் கீழ் அமைக்கப்பட்ட நவீன இறகு பந்து உள்விளையாட்டு அரங்கத்தினை குத்து விளக்கேற்றி திறந்து வைக்க வருகை தந்தார்.
இந்நிகழ்ச்சியில் மாவட்ட ஆட்சித் தலைவர் திரு.மா.பிரதீப் குமார், மாநகராட்சி மேயர் மு. அன்பழகன், மாநகராட்சி ஆணையர் இரா.வைத்திநாதன், சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, ஸ்டாலின் குமார் உள்ளிட்ட பிரமுகர்கள் கலந்து கொண்டனர்.
அப்பொழுது திருச்சி எம்.பி சிவாவின் ஆதரவாளர்கள் எம்.பி.சிவாவின் பெயரை பெயர் பலகையில் போடவில்லை என கூறி அமைச்சர் நேருவிற்கு எதிராக கருப்பு கொடியை காட்டினர்.
அதனால் இரு தரப்பினருக்குமிடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது
இந்நிலையில் நேருவின் ஆதரவாளர்கள் எம்.பி. சிவாவின் வீட்டின் முன் நிறுத்தப்பட்டிருந்த கார் மற்றும் வீட்டின் கண்ணாடிகளை உடைத்தனர்.
இதனால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. இது குறித்து தகவலறிந்த போலிசார் சம்பவ இடத்திற்கு வந்த காவல்துறையினர் கருப்பு கொடி காட்டியவர்கள் மற்றும் கண்ணாடியை உடைத்தவர்களை கைது செய்து விசாரணைக்கு அழைத்து சென்றனர்.
அப்போது காவல் நிலையம் உள்ளே வந்த அமைச்சர் நேரு ஆதரவாளர்களான மாநகராட்சி கவுன்சிலர் காஜாமலை விஜி, அந்தநல்லூர் ஊராட்சி ஒன்றிய தலைவர் துரைராஜ் தலைமையிலான திமுகவினர், போலீசாரை தாக்கி அத்துமீறி காவல் நிலையத்துக்குள் நுழைந்து திருச்சி சிவா ஆதரவாளர்கள் மீது தாக்குதல் நடத்தினர். இந்த தாக்குதலில் காவலர்கள் சிலர் காயமும் அடைந்தனர்.
இது தொடர்பான வீடியோ வெளியான நிலையில் அதிமுக இடைக்கால பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சித் தலைவருமான எடப்பாடி பழனிசாமி வெளியிட்டுள்ள ட்விட்டர் பதிவில், தமிழகத்தில் முன்னெப்போதும் இல்லாத வண்ணம், காவல்நிலையத்திற்குள்ளேயே புகுந்து நேரடியாக வன்முறை வெறியாட்டம் நடத்தும் அராஜக திமுகவினரால், இந்த ஆட்சியில் சட்டம் ஒழுங்கு ரவுடிகளின் கட்டுப்பாட்டில் உள்ளதோ என்ற சந்தேகம் எழுகிறது.
ஜனநாயகத்தை கேலிக்கூத்தாக்கும் இந்த அரசு நீடிக்கும் ஒவ்வொரு நிமிடமும் தமிழகத்துக்கு அச்சுறுத்தலாகவும், பொது அமைதிக்கு ஆபத்தாகவும் இருப்பதை மக்கள் உணரத் துவங்கியுள்ளனர். காவல்துறையை தன்வசம் வைத்துள்ள முதல்வர் இதற்கு என்ன பதில் சொல்ல போகிறார் என்று அதில் கூறியிருக்கிறார்.