போதை பொருள் கடத்தல் மன்னன் சாதிக் விவகாரம்!திமுகவை குறி கைக்குதா பாஜக!? அதிமுகவும் கூட்டா? ஆளுநரும் போட்டு தாக்குகிறார்!

போதை பொருள் கடத்தல் மன்னன் சாதிக் விவகாரம்!திமுகவை குறி கைக்குதா பாஜக!? அதிமுகவும் கூட்டா? ஆளுநரும் போட்டு தாக்குகிறார்!

ம.பா.கெஜராஜ்,

  போதை பொருள் கடத்தல் மன்னன் ஜாபர் சாதிக் விவகாரத்தை மையப்படுத்தி திமுகவை பாஜக குறி கைக்குதா என்கிற கேள்வியும், அதிமுகவும் அதற்கு கூட்டா என்கிற கேள்வி அரசியல் வட்டாரத்தில் எழுந்துள்ளது. தமிழகத்தில் வெற்றி வாய்ப்பை நோக்கி அடியெடுத்து பயணத்தித்துக் கொண்டிருக்கும் திமுக- வை தேர்தல் நேரத்தில் அசைத்து பார்க்க திட்டமிடப்படுவதாகவே பார்க்கப்படுகிறது.

  அதற்கேற்றவாறு, ஆளுநர் ஆர்.என்.ரவியை அதிமுக பொதுச் செயலாளர் பழனிசாமி நேற்று சந்தித்து, தமிழகத்தில் போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க நடவடிக்கை எடுக்க கோரி மனு அளித்தார். அதில், அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், முழுமையாக, வெளிப்படைத் தன்மையாக விசாரணை நடத்த வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டிருக்கிறார்.

  இந்த சந்திப்பின் போது முன்னாள் அமைச்சர்கள் கே.பி.முனுசாமி, திண்டுக்கல் சீனிவாசன், எஸ்.பி.வேலுமணி, தங்கமணி, சி.வி.சண்முகம், ஜெயக்குமார் ஆகியோர் உடன் இருந்தனர்.

  பின்னர், செய்தியாளர்களிடம் பழனிசாமி கூறியதாவது: தமிழகம் போதைப் பொருள் நிறைந்த மாநிலமாக உள்ளது. இந்த நிலை நீடித்தால் இளைஞர்கள், மாணவர்கள், மக்கள் போதைக்கு அடிமையாகி சீரழிந்துவிடுவார்கள்.

போதைப் பொருள் கடத்தலில் ஈடுபட்டதாக திமுக முன்னாள் நிர்வாகி ஜாபர் சாதிக்கை மத்திய போதைப் பொருள் தடுப்பு அலுவலர்கள் கைது செய்துள்ளனர். இதுபற்றி அவர்கள் கூறும்போது, ''போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தை திரைப்பட தயாரிப்புக்கும், ஓட்டல் நடத்தவும், திமுக நிர்வாகிகளுக்கும் ஜாபர் சாதிக் செலவிட்டுள்ளார். உதயநிதி அறக்கட்டளைக்கும் பணம் கொடுத்ததாக நிரூபிக்கப்பட்டுள்ளது. அரசியல் தொடர்புடைய பலருக்கு அவர் நெருக்கமாக இருந்துள்ளார்'' என்று தெரிவித்துள்ளனர்.

  தமிழக டிஜிபியிடம் ஜாபர் சாதிக் நற்சான்றிதழ் பெற்றுள்ளார். முதல்வரை சந்தித்தும், அமைச்சர் உதயநிதியை சந்தித்தும் நிதி கொடுத்துள்ளார். போதைப் பொருள் கடத்தலில் சம்பாதித்த பணத்தில், முதல்வர் குடும்பத்தை சேர்ந்த ஒருவர் திரைப்படம் இயக்கியுள்ளார். போதைப் பொருளில் இருந்து கிடைத்த பணத்தை கொண்டுதான் திமுக தேர்தலை சந்திக்கிறது.

   தமிழகம் மோசமான நிலைக்கு தள்ளப்பட்டுள்ளதையே இது காட்டுகிறது. அதற்கு திமுக அரசுதான் காரணம். அதனால், முதல்வரும், அமைச்சர் உதயநிதியும் தார்மீக பொறுப்பேற்று பதவி விலக வேண்டும் என்று மக்கள் எதிர்பார்க்கின்றனர்.

   கடந்த 2019-ம் ஆண்டு மலேசியாவுக்கு போதைப் பொருள் கடத்தியது தொடர்பாக ஜாபர் சாதிக் மீது வழக்கு இருப்பதாகவும், அதில் இருந்து வந்த வருமானம் மூலம், உயர் போலீஸ் அதிகாரிகளிடமும், முதல்வர் குடும்பத்துக்கு நெருக்கமானவர்களுடன் பழகி, தமிழகத்தில் போதைப் பொருளை விற்பனை செய்துள்ளார் என்று செய்திகள் வருகின்றன.

   போதைப் பொருள் புழக்கத்தை தடுக்க வேண்டிய டிஜிபி, மாநிலத்தை ஆளும் முதல்வர், அவரது குடும்பத்தை சேர்ந்தவர்கள் ஜாபர் சாதிக்குடன் பல்வேறு வகையில் தொடர்பில் இருப்பதாக செய்திகள் வருகின்றன.

அரசு மற்றும் காவல் துறையின் செயல்பாடு சந்தேகத்துக்குரியதாக இருப்பதால், முழுமையான, வெளிப்படைத் தன்மையான விசாரணை நடைபெற வேண்டும் என்று ஆளுநரிடம் வலியுறுத்தி உள்ளோம் என்று சொன்னார்.

   அமைச்சர் ரகுபதி பேட்டி!

 தேர்தல் நேரத்தில் சீகுலைக்கும் முயற்சியாக இந்த விவகாரத்தை பாஜக கையில் எடுத்துள்ளது என்று திமுக தரப்பில் கொதிப்படைந்துள்ளார்கள்

 இந்நிலையில்,   தேர்தல் களத்தில் திமுகவை களங்கப்படுத்த பா.ஜ.க. முயற்சிக்கிறது, அதற்கு அதிமுகவும் துணைபோகிறது என அமைச்சர் ரகுபதி தெரிவித்துள்ளார். 

சென்னையில் செய்தியாளார்களிடையே அவர் தெரிவிக்கையில், ஏற்கனவே வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை இறக்கிவிட்ட பா.ஜ.க. தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவை ஏவிவிட்டுள்ளது."போதைப்பொருள் தொடர்பான புகார் எழுந்தவுடனே ஜாஃபர் சாதிக்கை திமுகவில் இருந்து நீக்கிவிட்டோம். அவருக்கும் திமுகவுக்கும் எந்த தொடர்பும் இல்லை. தமிழ்நாட்டில் திமுக அரசை களங்கப்படுத்தும் நோக்கோடு போதைப்பொருள் தடுப்புப் பிரிவை பாஜக களமிறக்கி விட்டுள்ளது. பாஜகவின் அரசியல் தமிழ்நாட்டில் எடுபடாது.

 ஜாஃபர் சாதிக்கை தேடப்படும் நபராக பிப்.15ம் தேதி அறிவித்ததாக என்சிபி கூறியுள்ளது. ஆனால், பிப் 21ம் தேதி 'மங்கை' திரைப்படத்தின் விழாவில் அவர் கலந்துகொண்டுள்ளார். அப்போது என்சிபி எங்கே போனது?, வருமான வரித்துறை, அமலாக்கத்துறையை பயன்படுத்திய பாஜக தற்போது போதைப்பொருள் தடுப்பு பிரிவையும் பயன்படுத்துகிறது. இந்தியாவில் போதை பொருள் நடமாட்டத்திற்கு குஜராத் மாநிலத்தில் உள்ள முந்த்ரா துறைமுகம் தான் காரணம்

 பாஜகவுடன் அதிமுகவும் கைகோர்த்து செயல்படுகிறது. தமிழ்நாட்டில் போதைப்பொருள் புழக்கம் முழு கட்டுப்பாட்டில் உள்ளது. போதைப்பொருள் பயன்படுத்துவதை முழுமையாக தடுத்து வைத்துள்ளோம். குஜராத், மகாராஷ்டிராவில் தான் அதிக போதைப்பொருள் வழக்குகள் பதிவு செய்யப்பட்டுள்ளன. தமிழக மக்கள் ஏமாளிகள் அல்ல. திமுக மீது அடிப்படை ஆதாரமில்லாமல் குற்றம்சாட்டினால் சட்டப்படி நடவடிக்கை எடுக்கப்படும்" என சட்டத்துறை அமைச்சர் ரகுபதி சொன்னார். இந்த பேட்டியின் போது பிரபல வழக்கறிஞரும், மாநிலங்களவை உறுப்பினருமான வில்சன் உடனிருந்தார்.

 இது ஒரு புறம் இருக்க ஆளுநர் ஆர்.என்.ரவி, தமிழகத்தில் போதைபொருள் புழக்கம் அதிகமாக உள்ளது என்று கூறி யிருப்பதும் சர்ச்சையாகவே பார்க்கப்படுகிறது.