மைடியர் கெஜ்ரிவால் பட்டாசு வெடிக்க விடுங்க:-கடிதம் எழுதிய மு.க.ஸ்டாலின்!!

ம.பா.கெஜராஜ்
டெல்லியில் பட்டாசு வெடிக்க அனுமதி வழங்குங்கள் ப்ளீஸ் என்று அம்மாநில முதலமைச்சர் அரவிந் கெஜ்ரிவாலுக்கு தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கடிதம் எழுதியிருக்கிறார்.
வரும் ஜனவரி 1ம் தேதி வரை டெல்லியில் பட்டாசு உற்பத்தி, விற்பனை, பயன்பாட்டுக்கு தடை விதிக்கப்பட்டுள்ளது. ஆண்டுதோறும் தீபாவளி பண்டிகைக்கு பிறகு டெல்லியில் காற்று மாசுபாடு பல மடங்கு அதிகரிப்பதால், இந்த தடை விதிக்கப்பட்டுள்ளது.
இதனால் தமிழக பட்டாசு உறபத்தியாளர்களுக்கு பெரும் நஷ்டம் ஏற்படும். ஆகவே டெல்லியில் பட்டாசு விற்பனையை அனுமதிக்க வேண்டும் என தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கேட்டுக்கொண்டுள்ளார். இதுதொடர்பாக டெல்லி முதல்வர் அரவிந்த் கெஜ்ரிவாலுக்கு அவர் கடிதம் எழுதி உள்ளார்.
அதில், வேறு எந்த மாநிலத்திலும் தடை விதிக்காதபோது டெல்லியில் மட்டும் தடை விதிக்கப்பட்டுள்ளதாக கூறி உள்ள அவர், பட்டாசு தடையால் சிவகாசியை சுற்றி உள்ள லட்சக்கணக்கான மக்களின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் என்றும், அவர்களின் வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பட்டாசு விற்பனைக்கு அனுமதிக்க வேண்டும் என்றும் கூறி உள்ளார்.
உச்ச நீதிமன்ற வழிகாட்டுதலின்படி, பண்டிகை காலங்களில் இரண்டு மணி நேரம் பட்டாசு வெடிக்க அனுமதிக்கப்படுகிறது என்று தனது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ள முதல்வர் ல்டாலின், பண்டிகைக் கால கொண்டாட்டத்தின் அடையாளமாக பட்டாசுகளை வெடிப்பது என்பது சுற்றுச்சூழலைப் பாதுகாப்பதில் முனைப்புடன் செயல்படும் நாடுகள் உள்ளிட்ட சர்வதேச நாடுகளில் ஏற்றுக்கொள்ளப்பட்ட நடைமுறைதான் என்றும் தெரிவித்துள்ளார்.
ஒருசில நாட்களுக்குப் பயன்படுத்தப்படும் பட்டாசுகளால் மிகக்குறைந்த அளவிலான மாசு ஏற்படும் என்பதால், பட்டாசு உற்பத்தியில் ஈடுபடுவோரின் வாழ்வாதாரத்தினைக் கருத்தில்கொண்டு, உரிமம் பெற்ற வணிகர்கள் மூலம் அறிவியல் முறைப்படி உருவாக்கப்பட்ட பசுமைப் பட்டாசுகளை விற்பனை செய்ய உச்சநீதிமன்றம் அனுமதி அளித்துள்ளது என்று தமது கடிதத்தில் சுட்டிக்காட்டியுள்ளார்.