பாதாள அறையில் பதுக்கப்பட்ட கறுப்பு வெல்லம்! கள்ளசாராய வியாபாரிகளுக்கு சப்ளை!

பாதாள அறையில் பதுக்கப்பட்ட கறுப்பு வெல்லம்! கள்ளசாராய வியாபாரிகளுக்கு சப்ளை!

 ஜி.கே.சேகரன்,

  பேரணாம்பட்டு மார்க்கெட் கடைகளில் கள்ள சாராயம் காய்ச்சுவதற்காக விற்பனை செய்யப்படவிருந்த 1500 கிலோ வெல்லம் பாதாள அறையில் இருந்து பறிமுதல்- இரண்டு பேர் கைது.

 வேலூர் மாவட்டம்,  பேரணாம்பட்டு சுற்றுவட்டார  மலைப் பகுதியில் கள்ள சாராயம் காய்ச்சுவதை தடுக்க போலிசார் பகிரத முயற்சிகளை செய்து வருகிறார்கள்.

 அதே போல் லாரி டியூப்கள் மூலம் பேரணாம்பட்டு குடியாத்தம் சுற்றுவட்டார பகுதிகளில் விற்பனை செய்வது மற்றும் விற்பனை செய்பவர்களை போலீசார் கைது செய்வதும் தொடர்கதை ஆகவே இருந்து வருகிறது.

 இதனை தொடர்ந்து கள்ள சாராயம் காய்ச்சுவதற்காக பயன்படுத்தப்படும் வெல்லம் பேர்ணாம்பட்டு பஜார் வீதிகளில் உள்ள இரண்டு கடைகளில் பாதாள அறையில் பதுக்கி வைத்துள்ளதாக ரகசிய தகவல் வந்தது.

 அதன் பேரில் திடீர் ஆய்வு மேற்கொண்ட போலிசார், பழனி மற்றும் முஹம்மது அனீஸ் என்பவர்களின் கடைகளை ஆய்வு செய்து, அங்கு பாதாள அறைக்குள் பதுக்கி வைத்திருந்த சுமார் 1500 கிலோ  தடை செய்யப்பட்ட வெல்லம் குவியலை பறிமுதல் செய்தனர்.

  இப்படி கள்ளசாராயம் தயாரிப்பதற்காகவே கறுப்பு வெல்லம் பிசினஸ் பிசியாக போய்க் கொண்டிருக்கிறதாம். குறிப்பாக குடியாத்தம், பேர்னாம்பட்டு போன்ற பகுதிகளில் போலிஸ் அதிகாரிகள் சிலரின் தயவும் இதற்கு உள்ளதாம்.