வகுப்பறையில் மாணவனை காலால் உதைத்த ஆசிரியர் கைது!

  பா.ரமேஷ் ஆனந்தராஜ்,

  வகுப்பறையில் மாணவனை காலால் உதைத்த ஆசிரியர் கைது செய்யப்பட்டிருக்கிறார். அரசுப் பள்ளி ஆசிரியரான அவர் மீது 5 பிரிவுகளில் வழக்குப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

  கடலூர் மாவட்டம், சிதம்பரம் நந்தனார் அரசு மேல்நிலைப் பள்ளியில் 12ம் வகுப்பு படிக்கும் மாணவன் ஒருவனை ஆசிரியர் அடித்து, காலால் உதைக்கும் காட்சிகள் அடங்கிய வீடியோ சமூக ஊடகங்களில் வைரலானது.

 மேற்படி பள்ளி தலைமை ஆசிரியர் நேற்று வகுப்பறைகளை ஆய்வு செய்ய சென்றுள்ளார். அப்போது சில மாணவர்கள் வகுப்பில் இல்லாமல் மைதானத்தில் அரட்டையடித்துக் கொண்டிருந்தார்கள். கோபமுற்ற தலைமை ஆசிரியர், அந்த மாணவர்களை குறித்து சம்மந்தப்பட்ட ஆசிரியரிடம் முறையிட்டு கடுமைகாட்டியிருக்கிறார்.

 இதனால் கோபமடைந்த ஆசிரியர் மாணவர்களை கண்டித்துள்ளார்.

 அப்போது ஒரு மாணவனை மட்டும் பிரம்பால் அடித்ததோடு, கால்கலால் எட்டி உதைத்து தாக்கினார்.

 அதை வகுப்பிலிருந்த சக மாணவர்களில் ஒருவர் ரகசியமாக அவனது செல்போனில் வீடியோ எடுத்து பரவவிட்டுள்ளான்.

 ஆசிரியரால் தாக்க்கப்பட்ட மாணவர் காயமடைந்ததால் அவனை சக மாணவர்கள் சிதம்பரம் அரசு மருத்துவமனைக்கு அழைத்துச் சென்று சேர்த்தனர்.

 இந்நிலையில் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட மாணவர் தலித் சமூகத்தைச் சேர்ந்தவன் என்பதால், தகவலறிந்த கடலூர் மாவட்ட ஆதிதிராவிடர் நலத்துறை துணை ஆட்சியர் செல்வபாண்டி, சிதம்பரம் ஆதிதிராவிட நலத்துறை தாசில்தார் சத்யன் ஆகியோர் பள்ளிக்கு சென்று விசாரணை நடத்தினர்.

  அதே போல், சிதம்பரம் நகர காவல் துறையினர் மற்றும் அதிகாரிகள் குழுவினரும் அரசு மருத்துவமனைக்கு சென்று மாணவனிடம் விசாரணை நடத்தினர்.

  மாணவன் காவல்துறையிடம் அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் ஆசிரியர் சுப்பிரமணியன் மீது சிறார் வதை சட்டம், பட்டியல் இனத்தவர் மற்றும் பழங்குடியினத்தவர் மீதான வன்கொடுமை தடுப்பு சட்டப் பிரிவு உள்ளிட்ட 5 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.

  ஆசிரியர் சுப்பிரமணியனை கைது செய்த போலிசார், அவரை சிதம்பரம் இரண்டாவது நீதித்துறை நடுவர் மன்றத்தில் ஆஜர் படுத்திய பின்னர் அவர் சிதம்பரம் கிளை சிறையில் அடைக்கப்பட்டார்.

 "கண்ணை மட்டும் விட்டுவிட்டு தோலை உறிச்சுடுங்க" என்று சொல்லி பெற்றோர் பிள்ளைகளை பள்ளியில் சேர்த்த காலம் மலையேறிவிட்டது.

அதெல்லாம் இப்போ செல்லாது... செல்லாது.