கணவரின் ஆஸ்பத்திரி முன் காதல் மனைவி தர்ணா! சாதியை பார்க்குறாங்க என குற்றச்சாட்டு!

அ.தேவி,
காதல் திருமணம் செய்து ஐந்து வருடம் கழித்து சாதியை காட்டி என் கணவர் பிரிய முயல்கிறார் என்று தலித் பெண் போர்கொடி தூக்கினார். இதற்கான நியாயம் கேட்டு கணவரின் மருத்துவமனை முன்பு தர்ணாவில் ஈடுபட்டார். இதனால் பரபரப்பு ஏற்பட்டது.
திருப்பத்தூர் மாவட்டம் திருப்பத்தூர் அடுத்த கொடும்பம்பள்ளி பகுதியை சேர்ந்தவர் லிங்கண்ணன் மகன் திருப்பதி. காஞ்சிபுரம் மாவட்டம் திருப்புக் குழி பகுதியைச் சேர்ந்த ஏகாம்பரம் மகள் வளர்மதி. இவர்கள் இருவரும் 2007ஆம் ஆண்டு ராணிப்பேட்டையில் உள்ள அரசு ஆசிரியர் பயிற்சி பள்ளியில் டிடிஎட் படிக்கும் பொழுது காதலித்துள்ளனர்.
இந்நிலையில் ஆசிரியர் பயிற்சி படிப்பு படிக்கும் பொழுது மேற்படி திருப்பதிக்கு, சென்னை கீழ்பாக்கம் மருத்துவ கல்லூரியில் மருத்துவம் படிக்க வாய்ப்பு கிடைத்தது. ஆசிரியர் பயிற்சியை கைவிட்டு திருப்பதி மருத்துவம் படிக்க சென்றுள்ளார்.
பின்னர் வளர்மதியின் வற்புறுத்தலின் பெயரில் பெற்றோர்கள் முன்னிலையில் 2017 ஆம் ஆண்டு காஞ்சிபுரம் பகுதியில் உள்ள காமாட்சியம்மன் கோயிலில் காதல் திருமணம் செய்து கொண்டு ஐந்து வருடங்களாக கணவன் மனைவியாக சேர்ந்து வாழ்ந்துள்ளனர்.
அப்படியிருக்க மருத்துவம் முடித்து மருத்துவராகவும், கொடுமாம்பள்ளி பகுதி அதிமுக ஒன்றியக் குழு உறுப்பினராகவும் தகுதி உயர்ந்த திருப்பதி திடீரென வளர்மதியின் சாதி அடையாளத்தை முன்னிறுத்தி அவரை கைவிட வேண்டும் என்கிற எண்ணத்தில் சித்ரவதை செய்துள்ளதாக தெரிகிறது.
இது சம்பந்தமாக திருப்பத்தூர் மகளிர் காவல்நிலையத்தில் 2020ஆம் ஆண்டு புகார் அளித்து வழக்கு தொடர்ந்த பின்பு அதையே காரணம் காட்டி திருப்பதி வளர்மதியுடன் வாழ விரும்பவில்லை என்று கூறி அவரை வீட்டை விட்டு துரத்தி உள்ளார்.
கடந்த ஆறு மாத காலமாக தன்னுடைய அம்மா வீட்டில் இருந்த வளர்மதி திருப்பத்தூர் அருகே மடப்பள்ளியில் உள்ள திருப்பதிக்கு சொந்தமான சந்திரலிங்கம் மருத்துவமனை முன்பு அமர்ந்து திடீரென்று தர்ணாவில் ஈடுபட்டதால் பரபரப்பு ஏற்பட்டது.
இதன் காரணமாக திருப்பதிக்கு உறவினர்கள் மற்றும் வளர்மதியின் உறவினர்கள் இருவரையும் அழைத்து சுமார் நூற்றுக்கும் மேற்பட்டோர் பேச்சுவார்த்தையில் ஈடுபட்டனர்.
இத்தனை வருஷம் என்னுடன் வாழ்ந்துவிட்டு இப்போ சாதி பார்ப்பது நியாமுங்களா என்று, அங்கு பஞ்சாயத்து பேச வந்தவர்களிடம் வளர்மதி கேள்வியெழுப்பினார்.