புட்டுக்கொள்ளுமா கூட்டணி! 2 ஆண்டுகளுக்கு பிறகு செயற்குழு-பொதுக்குழு! அ.தி.மு.க.வினர் குஷி!

புட்டுக்கொள்ளுமா கூட்டணி! 2 ஆண்டுகளுக்கு பிறகு செயற்குழு-பொதுக்குழு! அ.தி.மு.க.வினர் குஷி!

ம.பா.கெஜராஜ்,

 சென்னையில் ஜூன் 23-ந்தேதி அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூடுகிறது என்கிற அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த கூட்டத்துக்கு பின்னர்  பா.ஜ.க.உடனான கூட்டணி அநேகமாக புட்டுக் கொள்ளும் என கூறப்படுகிறது.

 இந்நிலையில் அக்கட்சியினர் குஷியாகியிருக்கிறார்கள்.

 இது பற்றின விவரம் வருமாறு,

 அ.தி.மு.க.வைப் பொறுத்தவரையில், பொதுக்குழு மற்றும் செயற்குழுவை ஆண்டு தோறும் கூட்டுவது வழக்கம்.

ஆனால்,கடந்த 2020-ம் ஆண்டு டிசம்பர் மாதம் அ.தி.மு.க. செயற்குழு, பொதுக்குழு கூட்டம் நடைபெற்றது. அதன் பிறகு கொரோனா காரணமாக கடந்த ஆண்டு இந்த கூட்டம் நடைபெறவில்லை. இருந்த போதும் கடந்த ஆண்டு ஜனவரி மாதம் செயற்குழு கூட்டம் மட்டும் நடந்தது.

 தற்போது அ.தி.மு.க.வில் உள்கட்சி தேர்தல் நடந்து முடிந்த சூழலில்  அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளராக மீண்டும் ஓ.பன்னீர்செல்வமும், இணை ஒருங்கிணைப்பாளராக எடப்பாடி பழனிசாமியும்  தேர்வு செய்யப்பட்டனர். இதே போல மாவட்ட செயலாளர்கள், பேரூராட்சி, நகராட்சி மற்றும் ஒன்றியம், பேரூர் கிளை கழகங்களுக்கு தேர்தல் நடத்தப்பட்டு புதிய நிர்வாகிகள் தேர்வானார்கள்.

 அதன் பின்னர் கட்சியின் நிலை குறித்தும், பா.ஜ.க.வின் ஊடுறுவல் குறித்தும் அதிமுகவின் மூத்த தலைவர்கள் மறைமுகமாகவும் நேரடியாகவும் பேசி வருகிறார்கள்.

  இந்த சூழலில் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னீர்செல்வம், இணை ஒருங்கிணைப்பாளர் எடப்பாடி பழனிசாமி ஆகியோர் இன்று வெளியிட்டுள்ள அறிக்கையில் செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் நடப்பது குறித்து தெரிவித்துள்ளார்கள்.

 அதில், அ.தி.மு.க. செயற்குழு மற்றும் பொதுக்குழுக் கூட்டம் வருகிற 23-ந்தேதி (வியாழக்கிழமை) காலை 10 மணிக்கு சென்னை, வானகரத்தில் உள்ள ஸ்ரீவாரு வெங்கடாசலபதி பேலஸ் மண்டபத்தில் தற்காலிக கழக அவைத் தலைவர் டாக்டர் தமிழ்மகன் உசேன் தலைமையில் நடைபெற உள்ளது.

   கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு உறுப்பினர்கள் அனைவருக்கும் தனித்தனியே அழைப்பிதழ் அனுப்பி வைக்கப்படும். உறுப்பினர்கள் அனைவரும் தங்களுக்குரிய அழைப்பிதழோடு தவறாமல் வருகை தந்து கழக செயற்குழு மற்றும் பொதுக்குழு கூட்டங்களில் கலந்து கொள்ள வேண்டும் என்று தெரிவித்துள்ளார்கள்.

   கட்சியில் நிலவும் உள்கட்சி மோதல் தொடர்பாகவும் ஒற்றுமையாக அனைவரும் செயல்படுவது குறித்தும் அறிவுறுத்தப்படுகிறது. முடிவில் முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்படுகிறது. பொதுக்குழு கூட்டத்தில் 2,500 பேரும், செயற்குழு கூட்டத்தில் 500 பேரும் சிறப்பு அழைப்பாளர்களாக 1000 பேரும் கலந்து கொள்ள உள்ளனர்.

  இந்த செயற்குழு, பொதுக்குழு கூட்டத்திற்கு பிறகு அ.தி.மு.க.வில் நெத்தியடி இருக்கும் என்றூ எதிர்பார்க்கப்படுகிறது. அநேகமாக அது பா.ஜ.க. வின் கூட்டு புட்டுக் கொள்ளும் அளவுக்கும் இருக்கலாம் என்று பேசப்படுகிறது.