பள்ளிக் கூடத்திலேயே ஆதார் அட்டை! வேலூர் ஆட்சியர் வழங்கினார்!

ஜி.கே.சேகரன்,
வேலூரில் பள்ளி மாணவர்களுக்கான ஆதார் அட்டை எடுக்கும் திட்டம் ஆட்சியர் சுப்பு லெட்சுமி ஆய்வு செய்து விலையில்லா பாடப்புத்தகங்களை வழங்கினார்.
வேலூர் மாவட்டத்தில், மாணவ, மாணவிகளுக்கு அவர்கள் பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாமை மாவட்ட ஆட்சித் தலைவர் வே.இரா. சுப்புலெட்சுமி தொடங்கி வைத்தார். மேலும் மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்களை வழங்கினார்.
2024- 25 ஆம் கல்வி ஆண்டிற்கான பள்ளிகள் இன்று திறக்கப்பட்டதை தொடர்ந்து மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா புத்தகங்களை வேலூர் மாவட்ட ஆட்சித் தலைவர் சுப்புலெட்சுமி அவர்கள் வழங்கினார். மாணவ, மாணவிகளுக்கு பயிலும் பள்ளியிலேயே ஆதார் பதிவு செய்யும் சிறப்பு முகாமை கொணவட்டம் அரசு மேல்நிலைப் பள்ளியில் இன்று தொடங்கி வைத்தார்.
வேலூர் மாவட்டம், அனைத்து வகை அரசு, அரசு நிதியுதவி மற்றும் தனியார் பள்ளிகளில் பயிலும் அனைத்து மாணவ மாணவிகளுக்கும் ஆதார் பதிவு மற்றும் புதுப்பித்தல் முகாம் வேலூர் மாவட்டத்தில் அனைத்து ஒன்றியங்களிலும் இன்று முதல் தொடங்கி நடைபெற்று வருகிறது.
இந்த முகாம்களின் மூலம் மாவட்டத்தில் உள்ள 604 தொடக்க பள்ளிகள், 175 நடுநிலைப்பள்ளிகள், 73 உயர்நிலைப்பள்ளிகள், 85 மேல்நிலைப்பள்ளிகள் மற்றும் 346 தனியார் பள்ளிகள் என மொத்தம் 1283 பள்ளிகளில் பயிலும் மாணவ, மாணவிகளுக்கு ஆதார் பதிவு மேற்கொள்ள ஏற்பாடானது.
இந்த பணிகளுக்காக 14 எல்காட் பணியாளர்கள் மற்றும் பயிற்சி பெற்ற இல்லம் தேடிக் கல்வி தன்னார்வலர்கள் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.
மேலும் 2024-25 ஆம் ஆண்டிற்கான கல்வி வகுப்புகள் இன்று மீண்டும் திறக்கப்பட்டதை தொடர்ந்து வேலூர் மாவட்டத்தில் உள்ள அரசு மற்றும் அரசு நிதியுதவி பெறும் 85 மேல்நிலைப் பள்ளிகள், 73 உயர்நிலைப்பள்ளிகள், 175 நடுநிலைப்பள்ளிகள், 604 தொடக்கப்பள்ளிகள் மற்றும் 5 சுய நிதி (தமிழ் வழி) பள்ளிகள் என மொத்தம் 942 பள்ளிகளில் பயிலும் 1,40,000 மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகள் இன்று முதல் வழங்கப்பட்டு வருகிறது.
மாணவ, மாணவிகளுக்கு விலையில்லா பாட புத்தகங்கள் மற்றும் குறிப்பேடுகளை வழங்குவதை மாவட்ட ஆட்சித்தலைவர். வே.இரா.சுப்புலெட்சுமி அவர்கள் இன்று கொணவட்டம் அரசு மேல்நிலைப்பள்ளியில் தொடங்கி வைத்தார்.
இந்நிகழ்வின்போது வேலூர் மாநகராட்சி மேயர் சுஜாதர், மாவட்ட முதன்மை கல்வி அலுவலர் மணிமொழி, மாவட்ட கல்வி அலுவலர்கள் திரு. தயாளன், திரு.பழனி, திருமதி தனலட்சுமி, ஒருங்கிணைந்த பள்ளிக்கல்வி உதவி திட்ட அலுவலர் மகாலிங்கம் உட்பட பலர் உடனிருந்தனர்.