24 மணிநேரம் தண்ணீரில் மிதந்து சாதனை!

24 மணிநேரம் தண்ணீரில் மிதந்து சாதனை!

க.பாலகுரு,

கின்னஸ் ரெக்கார்ட்டில் இணையும் வகையில் கடும் குளிர். சாரல் மழையும் பொருட்படுத்தாமல்; புளிச்சக்காடி கிராம குளத்தில் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து இளைஞர் சாதனை புரிந்தார்.

  உலக சாதனைக்காக புளிச்சாக்கடி கிராம குளத்தில் பாலபுகழேந்தி என்ற இளைஞர் 24 மணி நேரம் 15 நிமிடம் மிதந்து சாதனை நிகழ்த்தி இருப்பதை கிராம மக்கள் பட்டாசு வெடித்து இனிப்புகள் வழங்கி கொண்டாடி மகிழ்ந்தனர்.

  திருவாரூர் மாவட்டம், குடவாசல் தாலுக்கா புளிச்சக்காடி எனும் குக்கிராமத்தை சேர்ந்த திலகவதி மகன் பாலபுகழேந்தி(28). தற்போது பாலபுகழேந்தி தனது குடும்பத்தாருடன் வலங்கைமான் பகுதியில் வசித்து வருகிறார்.

 பாலபுகழேந்தி புளிச்சக்காடி கிராமத்தில் உள்ள குளத்தில் தனது மாமா துணையுடன் 2014ம் ஆண்டு முதல் நீச்சல் பயின்று வந்துள்ளார்.  மேலும் அவர் தனது பள்ளி பருவம் முதல் நீச்சலில் ஆர்வம் காட்டி வந்திருக்கிறார். அவர் நீண்ட நேரம் குளத்து நீரில் மிதப்பதில் தீராத மோகம் கொண்டிருந்தார்.

   தற்போது பிஎஸ்ஸி கணினி அறிவியல் பிரிவில் பிஎஸ்ஸி பட்டம் பெற்ற பாலபுகழேந்தி கோவையில் தனியார் நிறுவனத்தில் வேலைபார்த்து வரும் நிலையில்  குளத்து தண்ணீரில் மிதக்கும் பயிற்சியினை இடைவிடாது மேற்கொண்டு வந்துள்ளார்.

 இத்தகைய சூழலில் அவர் உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட் புத்தகத்தில் தனது சாதனையினை நிகழ்த்திட ஏதுவாக தொடர்ச்சியாக 24 மணி நேரம் குளத்தின் தண்ணீரில் மிதக்கும் சாதனையை நிகழ்த்த தீர்மானித்தார்.

 அதன்படி தனது சொந்த ஊரான புளிச்சாக்காடி கிராமத்தில் உள்ள குளத்தில் பாலபுகழேந்தி கடும் குளிர், அவ்வப்போது பெய்த சாரல் மழைக்கும் இடையே தண்ணீரில் மிதக்கும் சாதனையை நேற்று முன் தினம் காலை 10.30 மணிக்கு கிராம மக்கள், ஊராட்சி மன்றத்தலைவர், கிராம முக்கியஸ்தர்கள், ஊர் பொதுமக்கள் முன்னிலையில் தொடங்கினார்.  அதாவது உலக சாதனை கின்னஸ் ரெக்கார்ட் சட்டவிதிகளின்படி சாதனை நிகழ்த்தும் ஒவ்வொரு மணி நேரத்திற்கும் 5 நிமிடம் ஓய்வு என்ற விதிகளுக்கு உட்பட்டு நேற்று காலை 10.30 மணிக்கு தனது சாதனை பயணத்தை மேற்கொண்ட பாலபுகழேந்தி இன்று முற்பகல் 12.15 மணிக்கு நிறைவு செய்தார்.

  இதன்படி பாலபுகழேந்தி  24 மணி நேரம் 15 நிமிடம் வரை தண்ணீரில் மிதக்கும் சாதனையை நிகழ்த்தி நிறைவு செய்தார். 

   இவர் சாதனையை நிறைவு செய்து குளத்தில் இருந்து வெளியே வந்தபோது அங்கு திரண்டிருந்த புளிச்சக்காடி கிராம மக்கள் பட்டாசு வெடித்து உற்சாகத்துடன் கொண்டாடி மகிழ்ந்தனர். தொடர்ந்து அவரது நண்பர்கள் சாதனை நிகழ்த்திய பாலபுகழேந்தியை கௌரவிக்கும் வகையில் கேக்வெட்டி கொண்டாடினர். 

   பின்னர் சாதனையாளர் பாலபுகழேந்தி செய்தியாளர்களுக்கு அளித்த பேட்டியில்,

  எனது சாதனையை கின்னஸ் ரெக்கார்ட் புத்தகத்தில் இடம்பெற செய்ய நான் விண்ணப்பத்திருந்தேன்.   இதன்படி கின்னஸ் நிர்வாகம் குளத்தின் தண்ணீரில் மிதக்கும் சாதனையை சரிபார்க்கும் வகையில் அதற்கான வீடியோவை பதிவு செய்து அனுப்புமாறு கேட்டுக்கொண்டிதற்கு இணங்க இத்தகைய சாதனையை மேற்கொண்டாக தெரிவித்தார்.