ரூ.200 கோடி மதிப்பிலான ஏரியை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்த உத்தம அதிகாரிகள்! கலெக்டர் ரத்து செய்வாரா?

பா.சுரேஷ்,
ரூ. 200 கோடி மதிப்பிலான ஏரியை தனியாருக்கு பட்டா போட்டு கொடுத்த உத்தம அதிகாரிகள் மீது கலெக்டர் நடவடிக்கை எடுத்து அதை ரத்து செய்யவேண்டும் என விவசாய பெருமக்கள் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்
சென்னையை அடுத்த காயரம்பேடு கிராமத்தில் உள்ள வேளாண் பயன்பாட்டுக்கான, சித்தேரியை பொதுமக்களின் எதிர்ப்பையும் மீறி, சம்பந்தப்பட்ட ஏரியை தனியார் நிறுவனத்திற்கு தாரை வார்க்க வருவாய்த்துறை அதிகாரிகள் துடித்துக் கொண்டிருக்கிறார்கள்.
செங்கல்பட்டு மாவட்டம் காட்டாங்கொளத்தூர் ஒன்றியத்திற்குட்பட்ட காயரம்பேடு கிராமம் வேளாண்மையை அடிப்படையாகக் கொண்ட கிராமம் ஆகும். இங்கு ஏரிகளும், அவற்ற்றுக்கு நீர் கொண்டு செல்லும் கால்வாய்களும் உள்ளன. சென்னை நகரின் வளர்ச்சி காரணமாக காயரம்பேடு கிராமத்தில் உள்ள விளைநிலங்கள் அனைத்தும் வீட்டு மனைகளாக மாற்றப்பட்டு வருகின்றன. நாடு முழுவதிலுமிருந்து காயரம்பேடு மற்றும் அதை சுற்றியுள்ள கிராமங்களில் முகாமிட்டுள்ள நில வணிக நிறுவனங்கள், அங்குள்ள நிலங்களை வாங்கி வீட்டு மனைகளாக மாற்றியமைத்து விற்பனை செய்யும் முயற்சியில் ஈடுபட்டுள்ளன.
அத்தகைய நிறுவனங்களில் ஒன்றுக்கு தான் 21 ஏக்கர் பரப்பளவுள்ள ஏரியை தாரைவார்க்கும் முயற்சியில் வருவாய்த்துறை அதிகாரிகள் ஈடுபட்டு வருகின்றனர்.
வெளிமாநிலத்தைச் சேர்ந்த தனியார் நிலவணிக நிறுவனம் ஒன்று, காயரம்பேடு கிராமத்தில் புல எண் 370&இல் உள்ள சுமார் 100 ஏக்கர் புன்செய் நிலங்களை விலைக்கு வாங்கியிருக்கிறது. அதை ஒட்டி, புல எண் 430&இல் சித்தேரி தாங்கல் என்ற ஏரி உள்ளது. கடந்த சில வாரங்களுக்கு முன்பு அந்த ஏரியின் கரைகளை உடைத்து, சமன் செய்யும் பணியில் சம்பந்தப்பட்ட நில வணிக நிறுவனம் ஈடுபட்டிருந்தது.
பாசன ஆதாரமாக திகழும் ஏரியின் கரைகளை தனியார் நிறுவனம் எவ்வாறு சமன் படுத்த முடியும்? என்ற எண்ணத்தில் விசாரித்த போது தான், சித்தேரி தாங்கலை அந்த நிறுவனத்திற்கு செங்கல்பட்டு மாவட்ட வருவாய்த்துறையினர் பட்டா போட்டு கொடுத்திருப்பது தெரியவந்திருக்கிறது.
இது குறித்து காட்டாங்கொளத்தூர் ஊராட்சி ஒன்றிய உறுப்பினர்கள் மற்றும் பொதுமக்களும் மாவட்ட ஆட்சியரிடம் புகார் அளித்துள்ளனர். அந்த புகாரைத் தொடர்ந்து காயரம்பேடு கிராமத்தை மாவட்ட ஆட்சியர் நேரில் ஆய்வு செய்தார். அதன் பின்னர் தற்போது பணிகள் நிறுத்தி வைக்கப்பட்டிருக்கின்றன.
ரூ.200 கோடி மதிப்பும், 21 ஏக்கர் பரப்பும் கொண்ட நீர்¢நிலையான சித்தேரியை தனியார் நில நிறுவனம் ஆக்கிரமிப்பதை அனுமதிக்க முடியாது. இந்த சிக்கலை முழுமையாக அறிந்திருக்கும் மாவட்ட ஆட்சியர் உடனடியாக தனியார் நிறுவனத்திற்கு வழங்கப்பட்டுள்ள பட்டாவை ரத்து செய்ய வேண்டும் என்று பலர் கோரிக்கை வைத்திருக்கிறார்கள்.