வாணியம்பாடி கொலை கும்பலுக்கு குண்டாஸ்!

கு.அசோக்,
வாணியம்பாடி மஜக நிர்வாகி வசீம் அக்ரம் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் மற்றும் அவரது கூட்டாளி உட்பட 2 பேர் குண்டர் சட்டத்தின் கீழ் கைது.
திருப்பத்தூர் மாவட்டம் வாணியம்பாடி ஜீவா நகர் பகுதியில் செப்டம்பர் 10 ஆம் தேதி மஜக முன்னாள் நிர்வாகி வசீம் அக்ரம் வீட்டின் அருகில் உள்ள பள்ளிவாசலுக்கு தனது ஏழு வயது குழந்தையுடன் சென்று தொழுகை முடித்து விட்டு வீடு திரும்பிய போது காரில் வந்த 8 பேர் கொண்ட கும்பலால் படுகொலை செய்யப்பட்டார்.
இது சம்பந்தமாக வேலூர் சரக டிஐஜி ஏ.ஜி பாபு தலைமையிலான 3 தனிப்படை அமைத்து காஞ்சிபுரம் செங்கல்பட்டு வாணியம்பாடி உள்ளிட்ட பகுதிகளில் கொலையில் சம்பந்தப்பட்ட 12 பேரை கைது செய்தனர்.
மேலும் இவ்வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் சிவகாசி நீதிமன்றத்திலும், கூலிப்படை தாதாவான செல்லா என்கின்ற செல்வகுமார், அகஸ்டின், சத்தியசீலன், முனீஸ்வரன், அஜய், பிரவின்குமார் ஆகிய 6 பேர் தஞ்சாவூர் நீதிமன்றத்தில் , எழும்பூர் நீதிமன்றத்தில் ஒருவரும், விழுப்புரம் நீதிமன்றத்தில் ஒருவர் என 9 பேர் நீதிமன்றங்களில் சரணடைந்தனர்.
இந்த கொலை வழக்கில் தொடர்புடைய 21;பேரை போலீசார் வாணியம்பாடி குற்றவியல் நீதிமன்ற நீதிபதி காளி முத்துவேல் முன்னிலையில் ஆஜர்படுத்தப்பட்டு வேலூர் மற்றும் சேலம் மத்திய சிறைகளில் அடைக்கப்பட்டனர்.
இந்நிலையில் கொலை வழக்கில் முக்கிய குற்றவாளியான டீல் இம்தியாஸ் என்பவர் ஏற்கனவே நீதிமன்றத்தில் சரணடைந்து சிறையில் அடைக்கப்பட்டுள்ள நிலையில் அடிதடி, கொலை, கஞ்சா உள்ளிட்ட 4 வழக்குகள் நிலுவையில் உள்ள நிலையில் குண்டர் தடுப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டார்.
இதே போல் அவரது கூட்டாளியான பைசல் அஹமது என்பவரையும் குண்டர் தடுப்பு சட்டத்தில் கைது செய்து மாவட்ட காவல் கண்காணிப்பாளர் பாலகிருஷ்ணன் பரிந்துரையின் பேரில் மாவட்ட ஆட்சியர் அமர் குஷ்வாஹா உத்தரவிட்டுள்ளார்.