சுடுகாட்டு பாதை கோரி தர்ணா?

சுடுகாட்டு பாதை கோரி தர்ணா?

கு.அசோக்,

வேலூர் மாவட்டம் குடியாத்தம் அடுத்த கே.வி.குப்பம் தாலுகா மேல்மாயில் ஊராட்சி தர்மாவரம் கிராமத்தில் 300 க்கும் மேற்பட்ட குடும்பங்கள் வசித்து வருகின்றனர்.

   சுமார் இரண்டாயிரம் வாக்காளர்களை கொண்ட அந்த கிராமத்திற்கு தனி சுடுகாடு மற்றும் சுடுகாட்டு பாதை அமைத்து தரக்கோரி பல ஆண்டுகளாக கோரி வருகின்றனர்.

   பல்வேறு கட்ட போராட்டங்களை நடத்தியும் அதிகாரிகளிடம் கோரிக்கைகள் மனு அளித்தும் உரிய நடவடிக்கை எடுக்கப்படவில்லை என கூறப்படுகிறது.

  இதனிடையே கே.வி.குப்பம் வட்டாட்சியர் அலுவலகம் முன் பெண்கள் உட்பட 100 க்கும் மேற்பட்ட  மக்கள் வாக்காளர் அடையாள அட்டையுடன் வட்டாட்சியர் அலுவலகம் முன் அமர்ந்து வரும் ஊரக உள்ளாட்சித் தேர்தலை புறக்கணிக்கப் போவதாக தர்ணாவில் ஈடுபட்டனர்.

   மேலும், வாக்காளர் அடையாள அட்டையை திரும்ப ஒப்படைப்பதாக கூறி வாக்காளர் அடையாள அட்டையுடன் தரையில் அமர்ந்து போராட்டத்தில் ஈடுபட்டனர்.

   தகவல் அறிந்து அங்கு வந்த  கே.வி.குப்பம் வட்டாட்சியர் சரண்யா உள்ளிடோர் போராட்டத்தில் ஈடுபட்டவர்களுடன் பேச்சுவார்த்தை நடத்தினர். இதில் சுடுகாட்டு பிரச்சினைக்கு உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்ததை தொடர்ந்து போராட்டம் கைவிடப்பட்டது.