ரைடில் கைபற்றியதாக வெளியான பட்டியல் பொய்!! ரோல்ராய் கார் 5 லட்சம் தான்! முன்னாள் அமைச்சர் கே.சி.வீரமணி பரபரப்பு பேட்டி!

ஜி.கே.சேகரன்,
லஞ்ச ஒழிப்பு போலீசார் கைப்பற்றியதாக கொடுத்த பத்திரிக்கை செய்தி பொய்யானது என முன்னால் அமைச்சர் கே.சி வீரமணி பேட்டி!
திருப்பத்தூர்மாவட்டம்,ஜோலார்பேட்டை காந்திநகர் பகுதியில் முன்னாள் பத்திரப்பதிவு மற்றும் வணிகவரித் துறை அமைச்சர் கே.சி வீரமணி அவரது உறவினர்கள் மற்றும் அவரது நெருங்கிய கூட்டாளிகள் ஆகியோரின்குடியிருப்புகளிலும்,பெங்களூரூ,சென்னை உட்பட 35 இடங்களில் லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாரால் சோதனை நடத்தப்பட்டது.
சுமார் 18 மணி நேர சோதனையில் 34 லட்சம் ரொக்க பணம், ரோல்ஸ் ராய்ஸ் கார் உட்பட 9 சொகுசு கார்கள், 623 சவரன் தங்க நகைகள், 7.6 கிலோ வெள்ளி பொருட்கள், 1.8 லட்சம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் ஐந்து கணினிகள் ஹார்ட் டிஸ்க்குகள், 275 யூனிட் மணல், வங்கி கணக்கு புத்தகம் மற்றும் சொத்து ஆவணங்கள் பறிமுதல் செய்யப்பட்டுள்ளதாக ஒரு பட்டியல் பத்திரிகையாளர்கள் மத்தியில் பகிரப்பட்டது.
அது லஞ்ச ஒழிப்பு போலீசார் தரப்பிலிருந்து வந்ததாக தெரிவிக்கப்பட்டது.
ஆகவே அதன் நம்பகதன்மை குறித்து விசாரிக்காமல் அவை அனைத்துமே செய்தியாக வடிவெடுத்தது.
போதாக்குறைக்கு, வாட்ஸாப், பேஸ் புக் என ஆளாளுக்கு செய்தி போட்டு மேற்படி ரைடை மிகைப்படுத்தினர்.
இந்நிலையில், இது தொடர்பாக கே.சி.வீரமணி இன்று செய்தியாளர்கள் முன்னிலையில் தன்னிரைவிளக்கம் அளித்தார்.
அப்போது லஞ்ச ஒழிப்பு போலீசார் எனது வீட்டில் சோதனை நடத்தினர். அப்போது சுமார் 3 மணி அளவில் பல பொருட்களை கைப்பற்றியதாக பொய்யான தகவல் அறிக்கையை வெளியிட்டனர்.
எனது வீட்டில் 300 சவரன் மதிப்பிலான தங்க நகைகள் மற்றும் ஒரு லட்சத்து 75 ஆயிரம் மதிப்பிலான அமெரிக்கன் டாலர் மற்றும் 10 ரூபாய் நோட்டுகள் அடங்கிய ஐந்தாயிரம் ரூபாய் மற்றும் மின்சார கட்டண ரசீது மூக்கு கண்ணாடி ரசீது மற்றும் மணல் ரசீது என சொற்ப அளவிலேயே எடுத்துச் சென்றனர்.
அந்த தங்க நகைகள் கூட தேர்தல் பிரமாண பத்திரத்தில் சுட்டிக்காட்டியிருப்பதைவிட குறைவாக இருந்ததால் நகைகளை என்னிடமே திருப்பிக் கொடுத்து விட்டனர்.
வெளிநாட்டில் என் மகள் படிப்பதால் அதன் காரணமாக அமெரிக்க டாலர்கள் வைத்திருந்தேன். அதைக்கூட பெண்டல் பெண்டலாக பிடித்ததாக போடறாங்க. பத்திரிகைகளுக்கென்று ஒரு தர்மம் இருக்கிறது.
வீட்டில் இருக்கும் மணலுக்கு கூட முறையாக இரசீது பெற்றுள்ளேன். என் பெயரிலும் என் மனைவி பிள்ளைகள் பெயரிலும் தான் சொத்துக்கள் வைத்துள்ளேன். மற்றபடி என்னுடைய அண்ணன் தம்பிகள் பெயரில் நான் சொத்து வாங்கியது இல்லை.
நான் வைத்துள்ள ரோல்ஸ் ராய் கார் வின்டேஜ் என்பதால் அதற்கு விலை குறைவுதான். அதன் விலை சுமார் 5 லட்சம் தான் இருக்கும். அது நாற்பது வருஷத்து கார்.
உள்ளாட்சித் தேர்தல் நெருங்கிவரும் நிலையில் எனது பெயருக்கும், இயக்கத்தின் பெயருக்கு களங்கம் ஏற்பட்டு விடக்கூடாது என்பதால் இந்த சந்திப்பை நிகழ்த்துகிறேன்.
லஞ்ச ஒழிப்புத்துறை போலீசார் கொடுத்த பத்திரிக்கை குறிப்பு முற்றிலும் பொய்யானது எனவும் செய்தியாளர் சந்திப்பில் கூறினார்.