வெளியேறிய வானதி! நீட்டுக்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்! 

வெளியேறிய வானதி! நீட்டுக்கு எதிராக அனைத்துக்கட்சி கூட்டத்தில் தீர்மானம்! 

ம.பா.கெஜராஜ்,

 மருத்துவ படிப்பில் சேர வேண்டுமெனில் நீட் தேர்வில் தேர்ச்சி பெற வேண்டும் என்கிற முறையை நீக்க வேண்டும் என்பது தமிழகத்தின் ஒட்டு மொத்தக் குரல். குறிப்பாக கிராமப்புற விளிம்பு நிலை மாணவர்கள் தேசிய அளவிலான தேர்வுகளை சந்திக்கும் கல்வித்திறனை பெற முடியாத நிலையில் இருப்பதால் அவர்களுக்கு கூடுதல் பாதிப்பு ஏற்படுகிறது என்கிற சூழலை இந்த எதிர்புக்கு காரணமாக சொன்னார்கள்.

அப்படியிருக்க, நீட் தேர்வு முறையை ரத்து செய்வதாக திமுக தேர்தல் வாக்குறுதிகளில் பிரதானமாக சொன்னார்கள்.

 ஏற்கனவே கடந்த 2007-ம் ஆண்டு அப்போதைய முதல்- அமைச்சராக இருந்த கருணாநிதி நுழைவுத் தேர்வுகளை அகற்றி தமிழக மாணவர்களுக்காக தனிச் சட்டம் கொண்டு வந்தார்.

 அந்த சட்டம் ஜனாதிபதி ஒப்புதல் பெறப்பட்டு ஏழை, எளிய கிராமப்புற மாணவர்களின் நலன் காக்கப்படுவது உறுதியானது. ஆனால் நீட் தேர்வு அமலான பிறகு அது பறிபோய்விட்டது.

  தமிழக மாணவர்களின் எதிர்காலம் வீணாவதால் நீட் தேர்வை ரத்து செய்யக் கோரி தமிழக சட்டசபையில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் 19-ந் தேதி தீர்மானம் கொண்டு வரப்பட்டது. இந்த தீர்மானத்தை கவர்னருக்கு அனுப்பி வைத்தனர்.

  ஆனால் அந்த தீர்மானம் இதுவரை ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பி வைக்கப்படாமலேயே இருக்கிறது.

  இந்நிலையில்  முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கவர்னரை சந்தித்து இது தொடர்பாக பேசினார். அதன் பிறகும் கவர்னர் அந்த சட்ட முன் வடிவை ஜனாதிபதிக்கு அனுப்பவில்லை. இதையடுத்து தி.மு.க. எம்.பி.க்கள் டெல்லியில் ஜனாதிபதி அலுவலகத்தில் மனு கொடுத்தனர்.

பின்னர் மத்திய உள்துறை மந்திரி அமித்ஷாவை தமிழக எம்.பி.க்கள் சந்தித்து நீட் தேர்வு விலக்கு தொடர்பாக மனு கொடுக்க அனுமதி கேட்டனர்.

  ஆனால் தமிழக எம்.பி.க்களை அமித்ஷா சந்திக்க மறுத்து விட்டார்.

  இந்நிலையில் கடந்த 2 நாட்களாக நடந்த சட்டசபை கூட்டத்தொடரில் இதுபற்றிய விவாதம் எடுத்துக்கொள்ளப்பட்டது.

  அப்போது முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசுகையில், "நீட் தேர்வுக்கு எதிராக போராட்டம் தொடரும். அதை தொடர்ந்து முன் எடுத்து செல்வோம்" என்று அறிவித்தார்.

 மேலும் நீட் தேர்வு விலக்கு விவகாரத்தில் அடுத்த கட்ட நடவடிக்கைகளை மேற்கொள்வது குறித்து தமிழகத்தில் உள்ள அனைத்து கட்சிகளிடமும் ஒருமித்த நிலைப்பாட்டை இயற்றுவதற்கு 8-ந்தேதி  அனைத்துக் கட்சி கூட்டம் நடத்தப்படும் என்றும் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார்.

  அந்த வகையில் சட்டசபை அனைத்து கட்சி தலைவர்களுக்கும் கூட்டத்தில் பங்கேற்குமாறு நேற்று முறைப்படி  13  கடிதங்கள் அனுப்பப்பட்டன. 

 முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் இந்த நடவடிக்கைக்கு அனைத்து தமிழக கட்சிகளும் ஆதரவு தெரிவித்தன.

 அதில், இன்று காலை 10.30 மணிக்கு தலைமை செயலக வளாகத்தில் உள்ள நாமக்கல் கவிஞர் மாளிகை கூட்டரங்கில் அனைத்துக் கட்சி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்திற்கு முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் தலைமை வகித்தார்.

 சுகாதாரத்துறை அமைச்சர் மா.சுப்பிரமணியன் கூட்டத்தில் கலந்து கொண்டார். கூட்டத்தில் பங்கேற்ற 13 கட்சி பிரதிநிதிகள் விவரம் வருமாறு:-

  1. அமைச்சர்கள் துரைமுருகன், பொன்முடி (தி.மு.க.)
  2. விஜயபாஸ்கர் (அ.தி.மு.க.)
  3. செல்வபெருந்தகை (காங்கிரஸ்)
  4. சிந்தனைச் செல்வன் (விடுதலை சிறுத்தைகள்)
  5. ஜி.கே.மணி (பாட்டாளி மக்கள் கட்சி)
  6. ஈஸ்வரன் (கொங்குநாடு மக்கள் தேசிய கட்சி)
  7. வானதி சீனிவாசன் (பா.ஜனதா)
  8. பூவை ஜெகன்மூர்த்தி (புரட்சி பாரதம்)
  9. ஜவாஹிருல்லா (மனிதநேய மக்கள் கட்சி)
  10. வேல்முருகன் (தமிழக வாழ்வுரிமைக் கட்சி)
  11. சதன் திருமலைக்குமார் (ம.தி.மு.க.)
  12. தளி ராமச்சந்திரன் (இந்திய கம்யூனிஸ்டு)
  13. நாகை மாலி (மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு).

கூட்டத்தில் நீட் தேர்வு விவகாரம் குறித்து பல்வேறு கோணங்களில் விவாதங்கள் நடந்தன. அடுத்தக்கட்டமாக எத்தகைய நடவடிக்கைகளை எடுப்பது என்பது பற்றி விரிவாக ஆய்வு செய்யப்பட்டது.

 கூட்டத்தில் 13 கட்சி தலைவர்களும் தங்கள் கருத்தை தெரிவித்தன. பா.ஜக. மட்டும் எதிர்ப்பு தெரிவித்த வகையில் அதன் சட்டமன்ற உறுப்பினர் வானதி சீனிவாசன் வெளிநடப்பு செய்தார்.

  கூட்டத்தில் அடுத்தகட்டமாக நீட் தேர்வை எதிர்த்து சட்ட போராட்டம் நடத்துவது என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

 இதற்காக சட்ட வல்லுனர்களுடன் ஆலோசனை நடத்தி முடிவு எடுக்க திட்டமிட்டுள்ளனர். இந்த நடவடிக்கைக்கு தி.மு.க., அ.தி.மு.க. உள்ளிட்ட 12 கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளது சிறப்பாகும்.