650 கோடி மோசடி வழக்கு!! ஐ.பி.எஸ்.அதிகாரி பிரமோத்குமார் சிக்குவாரா?

பா.ரமேஷ் ஆனந்தராஜ்,
தமிழகத்தில் மிகவும் பரபரப்பாக பேசப்பட்ட வழக்குகளில், பாசி நிதி நிறுவன மோசடி வழக்கும் ஒன்றாகும்.
அந்த நிறுவனத்தில் முதலீடு செய்தால் அதிக வட்டி அளிக்கப்படுவதாக விளம்பரங்கள் செய்யப்பட்டது. இதனை நம்பிய பல்லாயிரக்கணக்கான முதலீட்டாளர்கள், 650 கோடி ரூபாய்க்கு மேல் அதில் வைப்பு நிதியாக செலுத்தினார்கள்.
ஆனால் பாசி நிதிநிறுவனம் சொன்னபடி வட்டியை அளிக்காததால், அதன் இஅயக்குநர்கள் மீது புகார்கள் அளிக்கப்பட்டன.
அதன் பேரில் பாசியின் இயக்குனர்கள் கே.மோகன்ராஜ், கதிரவன் மற்றும் கமலவள்ளி ஆகியோர் மீது திருப்பூர் மத்திய குற்றப்பிரிவில் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.
பின்னர் இந்த வழக்கு கோவை பொருளாதார குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்ட நிலையில், வழக்கில் குற்றம் சாட்டப்பட்ட பெண் இயக்குனர் கமலவள்ளி கடத்தப்பட்டதாக அவரது டிரைவர் புகார் அளித்தார்.
ஆனால் சில நாட்களில் கமலவள்ளி திரும்பி வந்தார்.
அப்படி வந்தவர், தன்னை மேற்படி மோசடி வழக்கில் இருந்து விடுவிப்பதாக கூறி ஆனைமலை காவல் நிலைய அப்போதைய ஆய்வாளர் வி.மோகன்ராஜ், திருப்பூர் மத்திய குற்றப்பிரிவு அப்போதைய ஆய்வாளர் சண்முகையா ஆகியோர் 2 கோடியே 95 லட்சம் ரூபாய் லஞ்சம் பெற்றதாக புகார் சொன்னார்.
இது தொடர்பாக திருப்பூர் வடக்கு காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது.
வழக்கு விசாரணை சிபிசிஐடி போலீசுக்கு மாற்றப்பட்டது. இந்த வழக்கின் விசாரணையின் போது ஆய்வாளர் வி.மோகன்ராஜ், அப்போதைய மேற்குமண்டல ஐஜி
பிரமோத்குமாரின் அறிவுறுத்தல்படி இந்த சம்பவத்தில் தலையிட்டதாக வாக்குமூலம் அளித்திருந்தார்.
அதன் அடிப்படையில் பிரமோத்குமாரிடமும் சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வாக்குமூலத்தை பதிவு செய்திருந்தனர்.
இந்நிலையில், நிதிநிறுவன மோசடி வழக்கு விசாரணை முறையாக நடைபெறவில்லை எனக் கூறி லோகநாதன் என்ற முதலீட்டாளரும் , பாசி நிதிநிறுவனத்தால் பாதிக்கப்பட்டோர் நலச் சங்கமும் உயர் நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தன.
இந்த மனுக்களை விசாரித்த உயர் நீதிமன்றம், இந்த வழக்கையும் , போலீஸ்
அதிகாரிகள் லஞ்சம் பெற்ற வழக்கையும் சிபிஐ விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது.
பின்னர் சி.பி.ஐ. மேற்படி வழக்குகளை விசாரித்து கோவை சிறப்பு நீதிமன்றத்திலும் சிபிஐ சிறப்பு நீதிமன்றத்திலும் குற்றப்பத்திரிகைகள் தாக்கல் செய்யப்பட்டன.
ஆனால் இதில் தனது தரப்பு விளக்கத்தைக் கேட்காமல் வழக்கு சிபிஐக்கு மாற்றப்பட்டதால் , வழக்கை விசாரிக்க சிபிஐக்கு தடை விதிக்க வேண்டும் எனக்கோரி ஐ.ஜி.பிரமோத் குமார் தாக்கல் செய்த மனுவை விசாரித்த சென்னை உயர் நீதிமன்ற நீதியரசர் சி.வி.கார்த்திகேயன், நிதி நிறுவனம் பல்வேறு நாடுகளில் கம்பெனி தொடங்கி நடத்தி வந்ததால் , இந்த குற்ற வழக்கை சிபிஐ தான் விசாரிக்க வேண்டும் என்ற தனி நீதிபதி உத்தரவிட்டது சரிதான்.
மோசடி வழக்கில் குற்றம் சாட்டப்பட்டவர்களுக்கான முன் ஜாமீன் ரத்து செய்யப்பட்ட பிறகும், அவர்களை கைது செய்ய நடவடிக்கை எடுக்காததும், ஐ.ஜி பிரமோத் குமாரிடம் விசாரணை நடத்தியுள்ளதும் சந்தேகத்தை ஏற்படுத்துகிறது, இந்த வழக்கு சிபிஐ விசாரிக்க தகுதியான வழக்குதான்,ஆகவே இரு வழக்குகளையும் சிபிஐக்கு மாற்றிய உத்தரவு உறுதி செய்யப்படுவதால், ஐ.ஜி பிரமோத் குமார் தாக்கல் செய்த வழக்கு தள்ளுபடி செய்யப்படுகிறது . சிபிஐ தாக்கல் செய்த குற்றப்பத்திரிகை அடிப்படையில் வழக்கு விசாரணையை சிபிஐ சிறப்பு நீதிமன்றம் தொடரலாம் என்று உத்தரவிட்டார்.
இந்த வழக்கில் ஐ.பி.எஸ்.அதிகாரியான பிரமோத்குமார் பெயர் இணைக்கப்பட்ட பின்னர் அவரது சொந்த மாநிலத்திலுள்ள் அவரது வீடு மற்றும் சென்னை வீடு ஆகியவற்றில் ரைடு நடத்தப்பட்டது.
2012 ஆம் ஆண்டு பிப்ரவரி மார்தம் பிரமோத் குமார் கைது செய்யப்பட்டு பின்னர் பல சட்ட முயற்சிகளுக்கு பின்னர் விடுதலை செய்யப்பட்டார்.