"ராசா லாக்கப் டெத்" எம்.ஜி.ஆர்.தலையிட்ட மேட்டர்!

ம.பா.கெஜராஜ்,
எம்.ஜி.ஆர்.தலையிட்ட 14 வயது சிறுவன் "ராசா லாக்கப் டெத்" சம்வத்தின் பழைய நினைவுகளை ப.சண்முகம் என்கிற சமூக போராளி கட்டுரையாக நம்மிடம் பகிர்ந்துக் கொண்டிருக்கிறார். இந்த கட்டுரையை தயவு செய்து கடைசிவரை வாசியுங்கள்.
இன்று ஜெய்பீம் என்ற திரைப்படத்தை இணையத்தில் பார்த்தேன். படத்துடன் ஒன்றி போனதால் 160 நிமிடங்கள் கடந்ததை உணர முடியவில்லை.
1982-ம் ஆண்டு எங்கள் ஊராகிய திருப்பத்தூர் மாவட்டம் குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் நிகழ்ந்த, 14 வயது தாழ்த்தப்பட்ட சிறுவனின் காவல் மரணத்தை அம்பலப்படுத்த நான் மேற்கொண்ட செயல்பாட்டில் சந்தித்த இடையூறுகள் அதிகம்.
இணையம் செல்போன் போன்ற பயன்பாடுகள் இல்லாத காலத்தில் காவல் மரணத்தை அச்சு ஊடகங்கள் மூலமாக செய்தி கொண்டு வந்தேன்.
குறிப்பாக இந்தியன் எக்ஸ்பிரஸ் நாளிதழில் 18-08-1982 தேதி சென்னை மற்றும் மதுரை பதிப்பில் முதல் பக்க செய்தியாகவும் மறுதினம் இந்தியாவின் அனைத்து பதிப்புகளிலும் உள்பக்க செய்தியாகவும் ராசா என்ற தாழ்த்தப்பட்ட 14-வயது சிறுவனின் காவல்மரண செய்தி வெளிவந்தது.
இந்த செய்தியின் எதிரொலியாக டெல்லி பதிப்பு இந்தியன் எக்ஸ்பிரஸ் செய்தியாளர் ஆபிரகாம் மாத்யூ என்பவர் உச்ச நீதிமன்றத்தில் ஆட்கொணர்வு மனுவை தாக்கல் செய்தார்.
மேலும் டி.எஸ்.வி.அரி என்ற புலனாய்வு பத்திரிக்கையாளருடன் அப்போதைய மதுரை மேற்கு தொகுதி சட்ட பேரவை உறுப்பினரான அய்யா பழநெடுமாறன் அவர்களிடம் விரிவாக எடுத்து கூறினேன்.
எங்கள் எதிரிலேயே அய்யா அவர்கள் அப்போதைய முதலமைச்சர் எம்.ஜி.ஆர். அவர்களுக்கு தொலைபேசி வாயிலாக தகவலை கூறினார்.
உடனடியாக சார் ஆட்சியரின் விசாரணைக்கு எம்.ஜி.ஆர். உத்தரவிட்டார்.
அந்த விசாரணை எங்கள் ஊர் காவல்துறை ஏவல் நாயகன்களான சில செல்வந்தர்களின் தலையீடு அச்சுறுத்தல் காரணமாக, சார் ஆட்சியர் நடத்திய போலீஸ் அடையாள அணி வகுப்பில் ராசா மரணத்தை நேரில் கண்டவர்கள் பயத்தில் போலீசாரை அடையாளம் காட்டவில்லை.
ராசாவுடன் விசாரணைக்கு ஆளான மற்றொரு ராசா ராமஜெயம் முனிசாமி மரணமடைந்த ராசாவின் தம்பி சின்னராஜ் ஆகியோர் பயத்தில் போலீசாரை கண்டு பயந்துவிட்டனர்.
(மேற்கண்ட ஐந்து சிறுவர்களின் மீதான குற்றச்சாட்டு: இவர்கள் 5 நபர்களும் முகமது பஷீர் என்பவர் வீட்டில் 5 பவுன் நகை திருடி விட்டதாக பொய் வழக்கு ஆகும்)
உச்சநீதிமன்றம் உத்தரவின் பேரில் தமிழக அரசு இந்த வழக்கை சிபிசிஐடி வசம் ஓப்படைத்தது. ராசா காவல் நிலையத்தில் கொல்லப்பட்டு சடலம் எரிக்கப்பட்டதாக 21 காவல்துறையினருக்கு எதிராக சி.பி.சி.ஐ.டி. வழக்கு தொடுத்து.
வேலூர் மாவட்ட குற்றவியல் நீதிமன்றத்தில் வழக்கு நடத்தப்பட்டது. குளறுபடி காரணமாக வழக்கு தள்ளுபடி செய்யப்பட்டது.
தற்காலிக பணி நீக்கத்தில் இருந்த காவல்துறையினர் விடுதலை செய்யப்பட்டனர். ஆனாலும் சில காவல்துறையினர் துறை ரீதியான நடவடிக்கை காரணமாக பணிக்கு திரும்ப முடியவில்லை.
இதனை அரசாங்கமும் மேல் முறையீடு செய்யவில்லை. அப்போது மாண்புமிகு சந்துரு போன்ற வழக்குரைஞர்களும் கிடைக்கவில்லை. இதன் பிறகு பல்வேறு கட்டங்களில் நான் பொய் வழக்கிற்கு ஆளானேன். 1988-ம் ஆண்டிலிருந்து 2013-ம் ஆண்டு வரையிலும் எனது பெயர் குருசிலாப்பட்டு காவல் நிலையத்தில் போக்கிரிகள் பட்டியலில் வைக்கப்பட்டது.
சரித்திர பதிவேடு எனது பெயரில் பராமரிக்கப்பட்டது.அதில் நான் திருப்பதூர் மற்றும் தருமபுரி பகுதி நக்சல்பாரிகளுடன் தொடர்பில் இருந்ததாகவும் பிரபலமான காலஞ்சென்ற வழக்குரைஞர் பொ.வே.பக்தவத்சலம் அவர்களுடன் தொடர்பில் இருந்து கொண்டு சமூக விரோத செயலில் ஈடுபட்டதாக சரித்திர பதிவேட்டில் குறிப்பிடபட்டுள்ளது.
ஜெய்பீம் திரைப்பட காட்சி ஒன்றில் காவலர் ஒருவர் காவல் துறையில் நல்லவர்களும் இருக்கிறார்கள் என்று கூறுவார். அதற்கு மாண்புமிகு சந்துரு பாத்திரத்தில் நடித்த சூர்யா அனைத்து காவலர்களும் நல்லவர்கள் இல்லை என்று கூறுவார். சிலர் மட்டுமே காவல்துறையில் கயவர்கள்.
இவர்களால் பல காவல்துறையினரின் பெயர்கள் கெடுவதாக மேலோட்டமாக வசனம் வருகிறது.
எனது 42 ஆண்டு அனுபவத்தில் நான் கூறுகிறேன். அதுவும் உறுதிபட கூறுகிறேன். காவல்துறையில் நல்லவர்கள் மிக மிக குறைந்த அளவே உள்ளனர். ஆயிரத்தில் ஒருவர் என்பது கூட சந்தேகமே. ஒரே ஒரு ஒத்தை ரூபாய் கூட வாங்க மாட்டேன். மற்றவர்கள் வாங்கும் இலஞ்சத்திலும் பங்கு வாங்க மாட்டேன் என்பவர்கள் எத்தனை பேர்?
ஜெய்பீம் திரைப்படம் விரைவில் திரையரங்குகளில் திரையிடப்பட வேண்டும். இது அனைத்து தரப்பினரும் காவல்துறையின் அநீதிகளை அறிந்து கொள்ள முடியும் என அந்த கட்டுரைகளில் பழைய சம்பவத்தை நம் கன்முன்னே கொண்டு வந்து நிறுத்தியிருக்கிறார். ப.சண்முகம்,
வழக்கறிஞருக்கு படித்துள்ள அவர் மக்கள் பாதை அமைப்பின் மாவட்ட ஒருங்கிணைப்பாளராக உள்ளார். தற்போது நடைபெற்ற ஊரக உள்ளாட்சி தேர்தலில் ஊராட்சி மன்ற உறுப்பினராக தேர்வு செய்யப்பட்டிருக்கிறார்.சொந்த ஊர் குருசிலாப்பட்டு,திருப்பத்தூர் மாவட்டம்.