கொலையில் முடிந்த இளங் காதல்! போலிசார் மீது குற்றச்சாட்டு!

  ம.பா.கெஜராஜ்

  இளம் வயதில் ஏற்பட்ட காதல் விவகாரத்தால் சிறுவன் அடித்துக் கொல்லப்பட்டான். இந்த சம்பவத்தைத் தொடர்ந்து வழக்கு பதிவு செய்யப்பட்டிருந்த போதிலும் முக்கிய குற்றவாளிகளை போலிசாரே சட்டரீதியாக காப்பாற்றும் நோக்கில் ஈடுபட்டதாக காவல் துறை நண்பர்கள் சிலர் கூறுகின்றனர்.

 வேலூர் மாவட்டம், வேலூர், சாயிநாதபுரம் டி.கே.எம்.கல்லூரி சாலையில் வசிப்பவர் ராஜகுரு. இவர் மாப்பிள்ளை ஓட்டல் என்கிற உணவு விடுதி ஒன்றை நடத்தி வருகிறார். இந்நிலையில் இவரது உறவுக்கார பெண் ஒருவரை அதே பகுதியிலுள்ள தந்தை பெரியார் நகரைச் சேர்ந்த கோகுல் என்ற சிறுவன் சென்னைக்கு அழைத்துச் சென்றுள்ளார். (காதலாம்)

 இரண்டு நாட்களாகியும் அவர்கள் ஊர் திரும்பவில்லையாம்.

 இந்நிலையில் அந்த சிறுமி கொண்டு சென்ற மூவாயிரம் ரூபாய் செலவழிந்துவிட்ட நிலையில், சென்னையில் அவர்களது உறவினர் வீட்டுக்கு சென்று பணம் கேட்டாராம்.

 இந்த தகவலை வேலூரில் இவர்களைத் தேடிக்கொண்டிருந்த கும்பலுக்கு தெரிவித்துள்ளார் அந்த சென்னை உறவினார்.

 அதன் பின்னர் கடந்த 24.10.2021 ஆம் தேதி இருவரையும் பிடித்து வந்தவர்கள், மேற்படி சாயிநாதபுரம் பகுதியிலுள்ள தர்மராஜா கோவிலில் கோகுலை கட்டி வைத்து தாக்கியுள்ளார்கள். இந்த தாக்குதலில் சுமார் முப்பது பேர் ஈடுபட்டார்களாம்.

 மேற்படி கும்பல் கோகுலின் கைகால்களை முறித்ததோடு, இரும்பு ராடால் தலைமீது அடித்து மண்டையை உடைத்துள்ளார்கள்.

 இதனால் விழிபிதுங்கி கோமா நிலைக்கு கோகுல் தள்ளப்பட்டான்.

 இதனால் பயந்து போன அந்தக் கும்பல், கோகுலை அடுக்கம்பாறை அரசு மருத்துவமனைக்கு கொண்டு போய் சேர்த்து, மாடியிலிருந்து தவறிவிழுந்து விட்டார் என்று சொல்லிவிட்டு எஸ்கேப் ஆகியுள்ளார்கள்.

  இந்த தகவல் கோகுல் வீட்டுக்கு தெரிந்தவுடனே ஆஸ்பத்திரிக்கு ஓடோடி சென்று கதறினார்கள். போலிசுக்கு தகவல் அளித்தார்கள், அவர்கள் வழக்கம் போல் ஆடி அசைந்து வந்துள்ளார்கள்.

   இதனால் ஆவேசப்பட்ட கோகுலின் உறவினர்கள் கடந்த 24 ஆம் தேதி சாயிநாதபுரம் டி.கே.எம். கல்லூரி கூட்ரோடில் சாலைமறியலில் ஈடுபட்டார்கள். அங்கு வந்த பாகாயம் காவல் நிலைய அலுவலர்கள், மறியல் செய்தவர்களிடம் ஏதோ சொல்லப்போய் அது பெரிய சலசலப்பை ஏற்படுத்தியது.

  இதனால் போலிசாரின் மெத்தனத்தை மையப்படுத்தி மக்கள் கூச்சலிட்டனர். பின்னர் ஒருவழியாக புகாரைப் பெற்று ராஜகுரு,மாதவன்,தமிழ்செல்வன்,தண்டபாணி,செந்தில் ஆகியோரை கைது செய்துள்ளனர். மேலும் சிலரை வழக்கில் இணைத்துள்ளார்களாம்.

  இந்நிலையில் கடந்த 12 தினங்களாக அடுக்கம்பாறை அரசு மருத்துவமனையில் சிகிச்சைப் பெற்று வந்த கோகுல் சினிச்சை பலனின்றி 5 ஆம் தேதி இரவு உயிரிழந்தார்.

 இதனால் இந்த வழக்கு கொலை வழக்காக மாற்றப்பட்டிருக்கிறது.

 இந்த வழக்கு குறித்து போலிஸ் வட்டாரத்தில் சிலர் தெரிவிக்கையில், மேற்படி நிலையத்தின் முக்கிய அலுவலர், குற்றவாளிகளை காப்பாற்றும் நோக்கத்தில் அவரது உறவுக்காரர் மூலம் சட்ட உதவிகளை செய்து வருகிறார்.

 பல வழக்குகளில் இப்படி செய்யும் அவர்,இந்த குறிப்பிட்ட கோகுல் வழக்கிலும் பலரை காப்பாற்ற முயன்றுள்ளார்.

 இதே சாயிநாதபுரத்தில் ஏற்கனவே, வழிபறி ஒன்று நடந்தது, அங்கு வந்த அந்த நிலைய அலுவலர், உடனடியாக விசாரணையை துவங்காமல், நாளைக்கு புகார் தாங்க ராத்திரி ஆயிடுச்சி என்று மெத்தனமாக செயல்பட்டு அதிலும் குற்றவாளியை காப்பாற்ற சட்ட உதவிகளை செய்தாராம்.

 இது தொடர்பாக உயரதிகாரிகளிடமும், நீதிமன்றத்திலும் புகாராக தெரிவிக்கப்பட்டிருக்கிறது.

 அதுமட்டுமின்றி கட்டுப்படி கிராமத்தில் திருட்டு மணல் குடோனின் உரிமையாளரிடம் டை அப் வைத்து எக்கச்சக்கமாக சுருட்டிய கதை என அடுக்கிக்கொண்டே சென்றனர்.

 ஆக காவல் உயர் அதிகாரிகள் இது குறித்து விசாரித்தால் நலம் என்கிறார்கள் நல்ல காவலர்கள் சிலர்.