இன்விடேஷன்ல பெயரை போடலைப்பா?நிகழ்ச்சி புறக்கணிப்பு!! அ.தி.மு.க.தலைவர்களை தொங்கவிட்ட ஆட்சியாளர்கள்!

ம.பா.கெஜராஜ்,
கூட்டுறவு வார விழா நடைபெற்று வந்த நிலையில் நாளை 17.11.2021 ஆம் தேதி அதன் விழா நிறைவு பெறுகிறது.
வேலூர் மாவட்டத்தில் அதற்கான நிறைவு விழாவை அரசாங்கம் செலவில் நடத்த அழைப்பிதழ் அச்சடித்து விநியோகம் ஒரு குறிப்பிட்ட வட்டத்துக்குள் செய்து கொள்ளப்பட்டது.
இந்நிலையில் இந்த அழைப்பிதழை மையப்படுத்தி அ.தி.மு.க.வினர் மத்தியில் சர்ச்சை எழுந்துள்ளது.
இது தொடர்பாக அ.தி.மு.க. திருப்பத்தூர் மாவட்ட செயலாளர் கே.சி.வீரமணி,வேலூர் மாநகர் மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு,ஆவின் வேலூர் புறநகர் மாவட்ட செயலாளர் த.வேலழகன் ஆகியோர் தெரிவித்துள்ள ஒரு சுற்றறிக்கை வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியிருக்கிறது.
அதில் கூறப்பட்டிருப்பதாவது,
பேரன்புடையீர்
வணக்கம்....
அ.இ.அ.தி.மு.கழக கழக ஒருங்கிணைப்பாளர் ஓ.பன்னிர்செல்வம்,இணை ஒருங்கிணைப்பாளர் பழனிச்சாமி ஆகியோரது ஆலோசனைப்படி, இந்த அறிக்கை நமது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் உள்ள நம் கட்சியை சேர்ந்த அனைத்து நிலை கூட்டுறவு சங்கத் தலைவர்கள் துணை தலைவர்கள் மற்றும் இயக்குனர்களுக்கும் தெரிவிக்கப்படுகிறது.
நமது ஒருங்கிணைந்த வேலூர் மாவட்டத்தில் (வேலூர் , திருப்பத்தூர், இராணிப்பேட்டை மாவட்டங்கள்).
கூட்டுறவு வார விழாவின் நிறைவு விழா அழைப்பிதழ் கூட்டுறவுத் துறையால் வெளியிடப்பட்டுள்ளது.
கூட்டுறவு சட்ட திட்டங்களின்படியும், விழா மரபுப்படியும் விழாக்குழு ஒன்று அமைத்து வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவரை விழா குழு தலைவராகவும், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவரை துணை தலைவராகவும் கொண்டு நடத்தப்பட வேண்டும்.
ஆனால் கூட்டுறவு சட்ட விதிகளையும், அரசாங்க மரபையும் காற்றில் பறக்க விட்டுள்ளது தி.மு.க அரசு.
ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட மத்திய கூட்டுறவு வங்கி தலைவர்,ஒருங்கிணைந்த வேலூர் மாவட்ட ஆவின் பெருந்தலைவர்
வேலூர் மாவட்ட கூட்டுறவு அச்சக தலைவர், மாவட்ட கூட்டுறவு ஒன்றிய தலைவர்கள்,மாவட்ட மொத்த விற்பனை பண்டகசாலை தலைவர்கள், மற்றும் வேலூர் ஆம்பூர் , திருப்பத்தூர் கூட்டுறவு சர்க்கரை ஆலைத் தலைவர்கள் என மாவட்ட அளவிலான தலைவர்கள் அனைவரும் அ.இ.அ.தி.மு.க வை சேர்ந்தவர்கள் என்பதால், அவர்கள் பெயரை அழைப்பிதழில் சேர்காமல் அமைச்சர்கள், நாடாளுமன்ற சட்டமன்ற உறுப்பினர்களின் பெயர்களை மட்டும் போட்டு அழைப்பிதழ் வெளியிட்டுள்ளனர்.
இத்தகைய ஜனநாயக படுகொலை செய்துள்ள தி.மு.க அரசை கண்டிக்கும் வகையில் நாளை (17.11.2021) நடைபெறவுள்ள கூட்டுறவு வார விழா நிறைவு விழாவில் நம் கட்சியை சேர்ந்த கூட்டுறவு சங்க தலைவர்கள், துணை தலைவர்கள், நிர்வாகக்குழு உறுப்பினர்கள் பங்கேற்காமல் விழாவை புறக்கணித்து நமது எதிர்ப்பை வெளிப்படுத்துமாறு அன்போடு கேட்டுக் கொள்கிறோம் என அதில் குறிப்பிடப்பட்டிருக்கிறது.
இது குறித்து அ.தி.மு.க.வின் வேலூர் மாநகர மாவட்ட செயலாளர் எஸ்.ஆர்.கே.அப்பு கருத்து தெரிவிக்கையில் அ.தி.மு.க.ஆட்சியில் அரசு விழாக்களில் திமுக சட்டமன்ற உறுப்பினர்கள் தொட்டால் குற்றம், பட்டால் குற்றம் என்று இருப்பார்கள்.
அவர்களையும் நிகழ்ச்சிக்கு முறையாக அழைத்து அரசு விழா நடத்தப்பட்ட காலம் அம்மாவின் ஆட்சிகாலம்.
ஆனால் தற்போது அது இல்லாமல் போனது வேதனை. இவற்றை மக்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள் என்றார்.