சசிகலாவும் அவரது குழப்பமான அறிவிப்புகளும்!

ஜி.சாந்தகுமார்,
அ.தி.மு.க. பொதுச் செயலாளர் என கூறிக்கொண்டு அறிக்கைகள் வெளியிட்டு வரும் சசிகலா, அவ்வப்பொழுது சுற்றுப்பயணத்தை மேற்கொள்கிறார். கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்றும் சசிகலா கூறிக் கொண்டிருக்கிறார்.
அ.தி.மு.க. இடைக்கால பொதுச் செயலாளராக எடப்பாடி பழனிசாமி தேர்வு செய்யப்பட்ட பின்னர், ஓ.பன்னீர்செல்வம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டார்.
இருப்பினும் அ.தி.மு.க. ஒருங்கிணைப்பாளர் என்ற பெயரிலேயே அவரும் செயல்பட்டு வருகிறார்.
டி.டி.வி. தினகரன் அம்மா மக்கள் முன்னேற்ற கழகம் என்ற பெயரில் தனிக்கட்சி நடத்தி வருகிறார்.
தற்போதைக்கு அ.தி.மு.க. இப்படி 4 பிரிவுகளாக செயல்பட்டு வருகிறது.
ஆனால் சமயம் கிட்டும் போதெல்லாம் அ.தி.மு.க.வை ஒன்று சேர்க்கும் முயற்சியில் நான் ஈடுபட்டு வருகிறேன். என்னால் மட்டுமே அது முடியும் என்று சசிகலா அவர்கள் திரும்ப திரும்ப சொல்லி வருகிறார்.
அந்த வகையில் சசிகலா நேற்று அளித்த பேட்டியில் 2 பேரையும் சந்திக்க முடிவு செய்திருப்பது போல கருத்துக்களை தெரிவித்துள்ளார்.
எனது கட்சியினரை எப்போது வேண்டுமானாலும் நான் சந்திப்பேன் என்று அவர் கூறியுள்ளார். இதற்கு அ.தி.மு.க. சார்பில் பதிலடி கொடுக்கப்பட்டு உள்ளது. "அ.தி.மு.க. விவகாரத்தில் சசிகலா மூக்கை நுழைக்க வேண்டாம்" என்று முன்னாள் அமைச்சர் ஜெயக்குமார் கண்டனம் தெரிவித்துள்ளார்.
அ.தி.மு.க.வை இணைப்பேன், இணைப்பேன் என்று திரும்ப திரும்ப கூறி சசிகலா பிலிம் காட்டிக்கொண்டிருப்பதாக அ.தி.மு.க.வினர் கூறியுள்ளனர்.
இருந்தாலும் சசிகலாவின் அரசியல் தந்திரம் என்ன? என்பது புரியாத புதிராகவும் மர்மமாகவுமே உள்ளது.
இத்தனைக்கும் சசிகலாவுக்கு பின்னால் அ.தி.மு.க. முன்னணி நிர்வாகிகள் யாருமே இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.
சசிகலா சிறையில் இருந்து வெளியானபோது முதலில் அரசியலில் தீவிரமாக ஈடுபடுவேன் என்றார். பின்னர் ஒதுங்கி இருக்கப்போவதாக பின் வாங்கினார். கடந்த சில மாதங்களாகவே அரசியல் களத்தில் அ.தி.மு.க.வை ஒன்றிணைப்பேன் என்று கூறிக் கொண்டிருக்கிறார்.
இதில் சாதுர்யம் ஏதும் இல்லை என்றும் சும்மா அரசியலில் தன்னை தக்க வைத்துக் கொள்ள இப்படி செயல்படுகிறார் என்று அதிமுகவினர் சொல்லிக்கொண்டிருக்கிறார்கள்...பின் விளைவு தெரியாமல்.