முன்னாள் அமைச்சர் வீரமணியுடன் கைகோர்த்த திமுக வி.ஐ.பி.! திருப்பத்தூர் திகு...திகு...!

ஆர்.ரமேஷ்,
நடந்து முடிந்த ஊரக உள்ளாட்சித் தேர்தலில், திருப்பத்தூர் மாவட்டதிலுள்ள ஜோலார்பேட்டை மற்றும் ஆலங்காயம் ஒன்றியங்களில், திமுகவைச் சேர்ந்தவர்கள் அமோகமாக வென்றுள்ளார்கள்.
ஐந்து மாத கால திமுக ஆட்சியின் சாதனைகளை பற்றி மக்கள் மத்தியில் எடுத்துரைத்ததே இந்த வெற்றிக்கான முக்கிய காரணமாக பார்க்கப்படுகிறது.
இதற்காக உள்ளூரைச் சேர்ந்த அக்கட்சியின் அடிமட்ட தொண்டர் முதல் மேல்மட்ட பொறுப்பிலுள்ளவர்கள் வரை அயராது உழைத்ததை எவரும் மறுக்க முடியாது.
இந்நிலையில் வெற்றி பெற்ற ஒன்றியக் குழு உறுப்பினர்களில் ஒரு தலைவரை தேர்ந்தெடுக்க வேண்டும் என்கிற சிஸ்ட்டத்தில் ஆளுங்கட்சியின் வி.ஐ.பி.யாக உள்ள ஒருவர் ஏகத்துக்கும் உள்ளடி பாலிடிக்ஸ் செய்து வருகிறாராம்.
தங்களுக்கு நெருக்கமான அம்மணிகளை ஒன்றிக்குழு தலைவர் பதவில் அமரவைக்க வேண்டும் என்பதற்காக தங்களுடைய கட்சி பவரை காட்டி மிரட்டுகிறாராம்.
அந்த வகையில் வெற்றி பெற்றுள்ள திமுக ஒன்றியக்குழு உறுப்பினர்களை பிரித்தாளும் முயற்சியை கையில் எடுத்துள்ளார்.
தாம் சார்ந்த கட்சியின் சார்பில் வென்றுள்ள ஒன்றியக்குழு உறுப்பினர்கள் சிலருடன், அ.தி.மு.க.வின் சார்பில் வென்றவர்களையும் கேன்வாஷ் செய்து தமக்கு வேண்டப்பட்டவர்களை கொண்டு சேர்மன் இருக்கையை நிரப்ப தந்திரமாக செயல்படுகிறாராம்.
அதற்காக வாணியம்பாடி மற்றும் ஜோலார்பேட்டை ஆகிய தொகுதிகளின் அ.தி.மு.க.முன்னாள் சட்டமன்ற உறுப்பினர்களிடம் ரிக்குவஸ்ட் செய்துள்ளார். அவர்களும் அதற்கு லைக் கொடுத்துவிட்டார்களாம்.
ஊரக உள்ளாட்சி தேர்தலின் போது திமுக சார்பாக அமைச்சர்கள் கே.என்.நேரு மற்றும் எம்.ஆர்.கே.பன்னிர்செல்வம் ஆகியோர் தேர்தல் பொறுப்பாளர்களாக நியமிக்கப்பட்டிருந்தனர்.
அவர்கள் ஓடி ஓடி உழைத்த அளவுக்கு கூட உழைக்காத அந்த வி.ஐ.பி. இப்படி அ.தி.மு.க.ஒன்றியக்குழு உறுப்பினர்களை நம்பி பவர் பாலிடிக்ஸ் செய்வதை திருப்பத்தூர் திமுகவினர் ரசிக்கவில்லை.
மேற்படி ஒன்றியங்களில், ஆலங்காயத்திலுள்ள 18 தொகுதிகளில் 11 -ம், ஜோலார் பேட்டையிலுள்ள 24 தொகுதிகளில் 18-யும் திமுக வென்றுள்ள நிலையில், தி.மு.க.வுக்கு அ.தி.மு.க.வின் சார்பாக வென்றவர்களின் தயவே தேவையில்லை.
ஆனால் தாம் நினைத்ததை சாதிக்க வேண்டும் என்கிற எண்ணத்தில் உள்ளுக்குள் நுழைந்து, ஒற்றுமையாக உள்ளவர்களைப் பிரித்து, அதை சரிக்கட்ட அ.தி.மு.க.வின் முன்னாள் அமைச்சர் வீரமணியுடன் கைகோர்த்து குளறுபடிகளை ஏற்படுத்தி வருகிறார் அந்த வி.ஐ.பி.
அவர் டெல்லி பாலிடிக்ஸை மறந்து உள்ளூரில் உள்குத்து வேலை பார்த்து வருகிறார் என்கிறார்கள்.
உள்ளூர் அரசியலுக்கு தகுந்தாற்போல ஒன்றியக்குழு தலைவரை தேர்ந்தெடுக்க விடாமல் தடை போட்டு செயல்படுகிறாராம்.
அவரது எண்ணப்படி அ.தி.மு.க.வினரின் தயவால் சேர்மனை அமர வைத்தால் மக்கள் பணி எப்படியிருக்கும் என்பதை சொல்லவே தேவையில்லை. கண்டிப்பாக ஆளுங்கட்சிக்கு எதிர்ப்பாகத்தான் செயல்படுவார்கள் என்பது நிதர்சனம்.
இதில் குறிப்பாக சொல்ல வேண்டுமெனில் அவருடைய பணிவிடையாளர் பாரி என்பவரின் மனைவி சங்கிதாவையும், ஒட்டப்பட்டி காந்தியின் மனைவி ஸ்ரீதேவி என்பவரையும் சேர்மனாக அமர வைக்க வேண்டும் என்பதே அவரது திட்டமாம்.
இந்த திட்டத்துக்காகவே அ.தி.மு.க.வின் பக்கம் போனை போட்டுக் கொண்டிருக்கிறாராம்.
ஆக,ஜோலார்பேட்டையில் தோல்வியடைந்த அ.தி.மு.க. முன்னாள் அமைச்சர் வீரமணியின் தயவை தேடி திமுக விஐபி ஓடி கொண்டிருப்பதுதான் தற்போது திருப்பத்தூரில் திகு திகுவென்று பற்றிக் கொண்டிருக்கிறது.
எதை நோக்கி பயணித்தோமோ அந்த இலக்கை திசை திருப்பும் அந்த வி.ஐ.பி.யின் செயல் குறித்து தலைமைக்கு தெரிவிக்க முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டிருக்குதாம். சில தகவல் தலைமையின் பார்வைக்கும் சென்றுள்ளதாம்.
திருப்பத்தூர் பாலிடிக்ஸில் நுழைந்து பல்லாங்குழி ஆடும் அவரது பாட்ச்சா வேலூர் மற்றும் இராணிப்பேட்டை மாவட்டங்களில் பலிக்கவில்லையாம்.
ஹீம்..... கதுரு முத்துனா களத்து மேட்டுக்குத்தானே வரனும்...